டாடாவை ஆகச்சிறந்த முறையில் பழிவாங்கியது மாருதி சுஸுகி! துணிந்து எடுக்கப்பட்ட முடிவால் தொடங்கியது புதிய வரலாறு!
இந்தியாவில் மிக அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki). சிறப்பான மைலேஜ் மற்றும் வசதிகள், கவர்ச்சிகரமான டிசைன், குறைவான விலை மற்றும் பராமரிப்பு செலவுகள் என்று மாருதி சுஸுகி கார்களை குறையே சொல்ல முடியாது. ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் மாருதி சுஸுகி கார்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகியின் போட்டி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகியவை, குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் (Crash Test) சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.
நிலைமை இப்படி இருக்கும்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் செயல்பாடுகள், அவ்வளவாக சொல்லி கொள்ளும்படி இல்லை. ஆனால் இதெல்லாம் நேற்று வரை மட்டுமே. நவம்பர் 8ம் தேதியான இன்று மாருதி சுஸுகி நிறுவனம் தனது வரலாற்றில் புதிய சரித்திரத்தை எழுதியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி டிசையர் கார், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், 2 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது.
ஆனால் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய தலைமுறை மாடல், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் மாருதி சுஸுகி நிறுவன வரலாற்றில், குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கிய முதல் கார் என்ற பெருமையை புதிய தலைமுறை டிசையர் பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு 31.24 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது. இதன் மூலம் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த கார் 42க்கு 39.20 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது.
இதன் மூலம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில், மாருதி சுஸுகி டிசையர் காருக்கு 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வரும் நவம்பர் 11ம் தேதிதான், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாதுகாப்பில் குறைபாடு இருக்கிறது என்ற தன் மீதான விமர்சனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தவிடுபொடியாக்கியுள்ளது. குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து கிடைத்துள்ள இந்த 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனையை, புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லலாம்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் தானாக முன்வந்து, புதிய தலைமுறை டிசையர் காரை, குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைக்கு அனுப்பியது என்பதுதான் அந்த விஷயம். மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த முடிவுக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.
பாதுகாப்பு விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த காலங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தை, பொது வெளியில் வைத்து பகடி எல்லாம் செய்துள்ளது. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து மாருதி சுஸுகி ஆற்றிய எதிர்வினை என இதை கருதலாம். ஒரு வகையில் இது ஆகச்சிறந்த பழிவாங்கல்!


Click it and Unblock the Notifications








