அமெரிக்கா-காரங்க யூஸ் பண்ணும் பவர் ஃபுல்லான டிராக்டர்... இந்திய விவசாயிகளை தேடி வந்து இருக்கு!!
ஒரு சில நாடுகளில் கார்கள் அதிகமாக விற்பனையாகும், அதுவே ஒரு சில நாட்டில் பைக்குகள் அதிகமாக விற்பனையாகும். ஆனால், அனைத்து நாடுகளிலும் சிறப்பாக விற்பனையாகுவது என்று பார்த்தால், அது டிராக்டர்கள் தான். ஏனெனில், கார், பைக் இல்லாமல் இருந்துவிட முடியும், ஆனால் சாப்பாடு இல்லாமல் இருக்க முடியாது அல்லவா. இதனால்தான், புது, புது டிராக்டர்கள் அவ்வப்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வகையில், நியூ ஹோலாண்ட் (New Holland) நிறுவனம் அதன் புதிய டிராக்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நியூ ஹோலாண்ட் டிராக்டரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
உலகளவில் பிரபலமான CNH குழுமத்தில் ஓர் அங்கமாக வகிக்கும் நியூ ஹோலாண்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய டிராக்டரை 'வொர்க்மாஸ்டர் 105' (WorkMaster 105) என்கிற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய நியூ ஹோலாண்ட் டிராக்டரின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், டிரம்-4 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப அதிகப்பட்சமாக 100 எச்பி-க்கும் அதிகமாக இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் டிராக்டர் இதுவாகும்.

கார்களுக்கு பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் பின்பற்றப்படுவது போல், டிராக்டர்களுக்கு டிரம்-4 விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. புதிய வொர்க் மாஸ்டர் 105 டிராக்டரின் பெயரில் உள்ள '105' என்பது டிராக்டரின் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் இயக்க ஆற்றலை குறிக்கிறது. டிரம்-4 மாசு உமிழ்வு விதிமுறைக்கு ஏற்ற உலக தரத்திலான தொழிற்நுட்பங்களை கொண்ட என்ஜின் இந்த புதிய டிராக்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நியூ ஹோலாண்ட் தெரிவித்துள்ளது.
புதிய வொர்க் மாஸ்டர் 105 டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ள ஃபியாட் நிறுவனத்தின் என்ஜின் ஏற்கனவே கூறியதுபோல் அதிகப்பட்சமாக 106 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை டிராக்டருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த டிராக்டரின் மூலமாக அதிகப்பட்சமாக 3,500 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை இழுத்து செல்லலாம். எலக்ட்ரோ-ஹைட்ராலிக் 4-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட இந்த புதிய டிராக்டரில் காற்று மூலமாக குதிக்கும் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இருக்கைகளில் முதுகு தலையணையை தேவைக்கேற்ப அட்ஜெஸ் செய்துக் கொள்ள முடியும் என்கிறது நியூ ஹோலாண்ட் நிறுவனம். பாதுகாப்பு மற்றும் சவுகரியம் என இரண்டும் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ள புதிய நியூ ஹோலாண்ட் வொர்க் மாஸ்டர் 105 டிராக்டரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.29.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரிய நிலங்களில் விவசாயம் செய்வோருக்கும் புதிய வொர்க் மாஸ்டர் 105 டிராக்டர் ஏற்றதாக இருக்கும். ஏனெனில், இந்த டிராக்டரின் முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியை திறந்து, அதிலுள்ள கொக்கிகளை பயன்படுத்தி ஒரே நேரத்தில் பெரிய அளவிலான நிலத்தில் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியும். இந்தியாவில் உள்ள நியூ ஹோலாண்ட் டீலர்ஷிப் மையங்களில் வொர்க் மாஸ்டர் 105 டிராக்டர் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
நியூ ஹோலாண்ட் நிறுவனத்தின் வொர்க் மாஸ்டர் டிராக்டர்கள் உலகம் முழுவதும் நிறைய நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவை போல், போட்டிமிகுந்த வட அமெரிக்காவிலும் நியூ ஹோலாண்ட் வொர்க் மாஸ்டர் டிராக்டர்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரையில், ஒட்டுமொத்தமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான வொர்க் மாஸ்டர் டிராக்டர்களை நியூ ஹோலாண்ட் நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலத்த போட்டி மிகுந்த இந்திய டிராக்டர்கள் சந்தையில் நியூ ஹோலாண்ட் நிறுவனத்தின் முக்கியமான அறிமுகமாக வொர்க் மாஸ்டர் 105 டிராக்டர் பார்க்கப்படுகிறது. இந்திய கஸ்டமர்களுக்கு ஏற்ற தரத்தில் மற்றும் செயல்படுதிறனை வழங்கக்கூடியதாக இந்த டிராக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக நியூ ஹோலாண்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








