38 கிமீ மைலேஜ் தரும் புதிய கார் வரப்போகுது! இதுல இவி வெர்ஷனும் கம்மி விலையில் வருது!
சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஆல்டோ காரை அப்டேட் செய்து புதிய தலைமுறை காராக வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த அப்டேட்டில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த மாற்றங்களால் இந்த காரின் மைலேஜ் மிக அதிகமாக தரும் வகையில் மாறப்போகிறது. இதற்காக அந்நிறுவனம் என்னென்ன மாற்றங்களை எல்லாம் செய்யப் போகிறது? புதிய தலைமுறை ஆல்டோ கார் எப்படியான அம்சங்களை கொண்ட காராக இருக்க போகிறது என்ற விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
கடந்த 1979ம் ஆண்டு முதன்முறையாக தனது ஆல்டோ காரை அறிமுகப்படுத்தியது அதன் பிறகு இந்த கார் 9 முறை மாற்றங்கள் செய்யப்பட்டு 9வது தலைமுறை காராக உருவெடுத்து தற்போது விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ஆல்டோ காரின் பத்தாவது தலைமுறையை உருவாக்க சுஸூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது அதன்படி 2027ம் ஆண்டில் இந்த 10ம் தலைமுறை ஆட்டோ கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பத்தாம் தலைமுறை ஆட்டோ காரில் மிக முக்கியமாக காரின் எடையை 100 கிலோ வரை குறைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆல்டோ கார் முதல் முறையாக விற்பனைக்கு வரும்போது 545 கிலோ எடை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகமானது. தற்போது 9ம் தலைமுறை கார் 650 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இருப்பதிலேயே அதிகமாக 7ம் தலைமுறைகார்தான் சுமார் 740 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டு விற்பனைக்கு விற்பனை செய்யப்பட்டது. 8ம் தலைமுறை காரை சுஸூகி நிறுவனம் ஹார்ட்ரேட் பிளாட்பார்மில் உருவாக்கியதால் அதன் எடை 670 கிலோவாக குறைந்தது. 9ம் தலைமுறை கார் சுமார் 650 கிலோ எடையில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்து வரும் நிலையில் புதிய கார் 578 கிலோ எடை தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 10ம் தலைமுறை ஆல்டோ கார் குறைவான எடையில் அறிமுகமாக திட்டமிடப்பட்டு வரும் நிலையில், இந்த எடை கிட்டத்தட்ட முதல் தலைமுறை காரின் எடைக்கு நெருக்கமான அளவில் இருக்கிறது. இந்த எடை குறைப்பிற்கு மைலேஜ் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. எடை குறைப்பதால் இந்த காரின் அனைத்து அம்சங்களும் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
முக்கியமாக இந்த எடை குறிப்பிற்காக குறைந்த எடை கொண்ட மெட்டீரியல் கொண்டு வாகனத்தின் சேஸிஸ் மற்றும் இன்ஜின் பாகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இந்நிறுவனம் உருவாக்கிய இசட் 12 இன்ஜின் இப்படியான எடை குறைப்பு தொழிற்நுட்பத்தில் தான் உருவாக்கப்பட்டது. இந்த இன்ஜின் தான் புதிய ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் வருங்காலங்களில் வேகன் ஆர், டிசையர், பலேனோ மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய கார்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கார் உருவாகும் ஹார்ட் ரேட் பிளாட்பார்மும் மேம்படுத்தப்பட்டு அல்ட்ரா மற்றும் அட்வான்ஸ் தொழிற்நுட்பத்துடன் அதிக பலம் கொண்ட ஸ்டீல்களை கொண்டு இந்த காரை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எடை குறைப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பு அம்சமும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. விபத்து ஏற்படும்போது இம்பேக்ட்டை மிகச் சரியாக பிரித்துக் கொடுப்பதற்கான தொழில் நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட உள்ளது.
குறைவான எடையில் இந்த காரை தயாரிப்பதன் மூலம் இதனை எலெக்ட்ரிக் வெர்ஷன் காருக்கும் இதை பயன்படுத்த முடியும். பேட்டரி பேக் ஏற்கனவே எடை அதிகமாக இருக்கும் என்பதால் காரின் எடையை குறைப்பதன் மூலம் பேட்டரி பேக்குகளை வைத்தால் கார் அதிக அளவில் எடை இருக்காது.
இதனால் எலெக்ட்ரிக் கார் பெர்பார்மன்ஸும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது போக இதில் ஹைபிரிட் கார்களையும் உட்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சிஎன்ஜி வெர்ஷனில் இந்த கார் வரும்போது அதிக மைலேஜ் தரும் வகையில் இந்த கார் உருவாக்கப்படும். தற்போது சிஎன்ஜி கார்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
ஆல்டோ கார் புதிய தலைமுறை காராக வரும்போது எடை குறைப்பதால் அதிக மைலேஜ் தரும் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். தற்போது உள்ள ஆல்டோ கே10 கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மேனுவல் கியர் ஆப்ஷனில் 24.39 கிலோமீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர் வெர்ஷனில் 24.90கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. சிஎன்ஜி வெர்ஷனில் ஒரு கிலோவிற்கு 33.85கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இதுவே புதிய தலைமுறை ஆட்டோ கார் வரும்போது இது பெட்ரோல் வெர்ஷனில் 30 கிலோமீட்டர் மைலேஜ் தரும் திறன் கொண்ட காராகவும் சிஎன்ஜியில் 37 முதல் 38 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் காராகவும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைலேஜ் அதிகமாக தந்தாலும் இந்த கார் பாதுகாப்பு அம்சத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி ஆல்டோ கார் தற்போது குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெரியோர்களுக்கான பாதுகாப்பில் இரண்டு ஸ்டார்களையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 0 ஸ்டார்களையும் பெற்றுள்ளது. பத்தாம் தலைமுறைக்கு பாதுகாப்பு அம்சத்தில் இதைவிட கிராஷ் டெஸ்டில் அதிக ஸ்டார்களை பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்கள் மத்தியில் அதிக மைலேஜ் கொண்ட காருக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. ஆல்டோ கார் முதல் தலைமுறை கார் வாங்கும் வாடிக்கையாளர்களை அதிகம் இருக்கிறது. அவர்களுக்கு மைலேஜ் மிக முக்கியமான விஷயம் என்பதால் இந்த மாற்றத்தை கொண்டு வர சுஸூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலக அளவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









