பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
தொலைத்தூர பயணங்களுக்கான முதல் எலக்ட்ரிக் பேருந்து சேவையை நியூகோ (NueGo) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பேருந்து சேவையில் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் உள்ளன? நியூகோவின் சர்வீஸில் பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரிக் பேருந்துகளின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
உலக வெப்பமயமாதல் நாளுக்கு பிரச்சனையாக மாறிவரும் சூழலில் பசுமையான சுற்றுச்சூழலை நாம் பேணுவது அவசியமான ஒன்றாக உள்ளது. பசுமையான சுற்றுச்சூழலை கொண்டுவர வேண்டுமெனில், அதன் ஒருபகுதியாக பசுமையான சாலை மற்றும் அதனை சுற்றிய போக்குவரத்து சூழலை உருவாக்குவது அவசியமாகும். பசுமையான போக்குவரத்துக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் நம் இந்தியா இன்னும் ஆரம்பகட்ட நிலையில் தான் உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை சாலையில் காண்பது இப்போதும் கொஞ்சம் அபூர்வமாகவே உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி பேருந்து சேவை நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் நியூகோ புதியதாக தொலைத்தூர பயணங்களுக்கான அதன் எலக்ட்ரிக் பேருந்து சேவையை துவங்கியுள்ளது.
இண்டர்சிட்டி, அதாவது முக்கியமான இரு மாநகரங்களுக்கு இடையேயான எலக்ட்ரிக் பேருந்து சேவையாக இதனை நியூகோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த புதிய பேருந்து சேவையில் சீட்டர் மற்றும் ஸ்லீப்பர் வசதிகளை கொண்ட எலக்ட்ரிக் பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. நியூகோ நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க் இந்தியா முழுவதும் உள்ளது.

அதில் முக்கியமான வழித்தடங்களான சென்னை- பெங்களூர், கோயம்புத்தூர்- பெங்களூர், விஜயவாடா- விசாகப்பட்டினம், டெல்லி- ஜெய்பூர் மற்றும் டெல்லி- அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளில் புதிய எலக்ட்ரிக் பேருந்து சேவையை வழங்க நியூகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை மட்டுமின்றி, வருங்காலங்களில் வேறு சில வழித்தடங்களிலும் எலக்ட்ரிக் பேருந்துகளை சேவைக்கு கொண்டுவர நியூகோ திட்டமிட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் பேருந்து சேவையை தடையில்லாமல் வழங்குவதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் அவசியமாகின்றன. ஆதலால், தனது எலக்ட்ரிக் பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவும் முயற்சியில் நியூகோ ஈடுப்பட்டு வருகிறது. பேருந்து ஓட்டுனர் மற்றும் உதவியாளர்களை பணியமர்த்துவதில் பாலின பாகுபாடு பார்க்காத பஸ் சர்வீஸ் நிறுவனங்களுள் நியூகோவும் ஒன்று ஆகும்.

நியூகோ சேவையில் பெண் பேருந்து ஓட்டுனர்களும் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலேயே பெண் பேருந்து டிரைவர்களை கொண்டிருக்கும் நிறுவனம் நியூகோ என கூறப்படுகிறது. எதிர்காற்றிலும் வேகமாக இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்படும் பேருந்துகளை பஸ் சர்வீஸில் நியூகோ பயன்படுத்தப்படுகிறது. இந்த பேருந்துகள் விபத்தின்போது ரோல்-ஓவர், அதாவது 2, 3 முறை பெல்டி அடிக்காத வகையில் உருவாக்கப்படுகின்றன.
நியூகோவின் சர்வீஸில் பயன்படுத்தப்படும் பேருந்துகள் மோனோகோக் சேசிஸில் உருவாக்கப்படுவதால் சிறப்பான ஹேண்ட்லிங் மற்றும் மென்மையான பயணத்தை வழங்குகின்றன. பின்பக்கத்தை பார்க்க பேருந்துக்கு வெளியே கொடுக்கப்படும் இறக்கை போன்றதான கண்ணாடிகளை எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளலாம். பயணிகள் எளிமையாக உள்ளே ஏறி, இறங்க படிக்கட்டுகள் மிகவும் தாழ்வாக கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டுமெனில், அதற்குமுன் இவ்வாறு பொது சேவைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களை எலக்ட்ரிக்கில் கொண்டுவருவது அவசியமாகும். அப்போதுதான் சார்ஜிங் மையங்களை நாடு முழுவதும் கொண்டுவர முடியும். நியூகோ நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் பேருந்து சேவையில் ஏசி வசதிக் கொண்ட எலக்ட்ரிக் பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









