இந்தியா ஏழை நாடே கிடையாது... போர்ஷே கார் வாங்கும் அளவுக்கு எங்கிருந்துதான் பணம் கிடைக்குதோ!!
போர்ஷே (Porsche), உலகின் மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செயல்திறன்மிக்க கார்களை உற்பத்தி செய்யும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த போர்ஷே நிறுவனத்தின் கார்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால், போர்ஷேவின் முக்கியமான கார் மார்க்கெட்டிற்குள் ஒன்றாக நம் இந்தியா விளங்குகிறது. இந்த நிலையில், அதனை வெளிக்காட்டும் வகையில், இந்தியாவில் கார்கள் விற்பனையில் அசாத்தியமான வளர்ச்சியை போர்ஷே நிறுவனம் அடைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் சொகுசு கார்களை வாங்க மக்கள் நிறைய பேர் உள்ளனர். இருப்பினும், போர்ஷே போன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை வாங்கும் அளவிற்கு மக்கள் உள்ளனரா என கேட்டால், சற்று குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், இந்தியாவில் குறைவான சதவீத மக்கள் போர்ஷே கார்களை வாங்கினாலே அது போர்ஷே நிறுவனத்தை பொறுத்தவரையில் பெரிய எண்ணிக்கையாக இருக்கும். ஏனெனில், அந்த அளவிற்கு நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் ஆகும்.

ஆனால் உண்மையில், இந்தியாவில் போர்ஷே கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில், அதாவது 2024 ஜனவரி 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரையில் 489 போர்ஷே கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு எண்ணிக்கையிலான கார்களை எந்தவொரு 6 மாதத்திலும் போர்ஷே நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்தது கிடையாது.
இதனால், போர்ஷே இந்தியா நிறுவனத்தின் ரெக்கார்ட்-பிரேக்கிங் சேல்ஸ் நம்பராக இது பார்க்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் இதே முதல் 6 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட போர்ஷே கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில், 489 என்பது சுமார் 40% அதிகமாகும். ஏனெனில், அந்த 6 மாதங்களில் வெறும் 349 கார்களை மட்டுமே போர்ஷே நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

இந்த 2024ஆம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ள 489 போர்ஷே கார்களில் 306 கார்கள் போர்ஷே மேக்கன் மற்றும் கேயென்னே கார்கள் ஆகும். அதாவது, இந்தியாவில் போர்ஷே கார்களை வாங்குபவர்களில் 63 சதவீதத்தினர் இந்த இரு கார்களையே தேர்வு செய்கின்றனர். மீதி கார்களில், 93 கார்கள் போர்ஷே 911 கார்கள் ஆகும். இவை இல்லாமல், கடந்த 6 மாதங்களில் 90 பனேமேரா மற்றும் 718 கார்களை போர்ஷே நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கார்கள் விற்பனை கொஞ்சம் மந்தமாகவே உள்ளது. அப்படியிருந்தும், லக்சரி கார்களின் விற்பனை சிறப்பாக உள்ளது. இந்த வகையில், லக்சரி கார்கள் மூலமாக இந்திய சந்தையில் கணிசமான இலாபத்தை கண்டுவரும் நிறுவனங்களுள் போர்ஷேவும் ஒன்றாகும்.

இந்தியாவில் போர்ஷே நிறுவனம் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன் உடன் பனமேரா ஜிடிஎஸ் மற்றும் 911 ஃபேஸ்லிஃப்ட் கார்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. முதல்முறையாக ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனை பெற்ற இந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்களின் விலைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த ஹைப்ரீட் கார்களையும், 2024 கேயென்னே ஜிடிஎஸ் காரையும் இந்தியாவில் புக் செய்தவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த 2024ஆம் ஆண்டிற்காக மேக்கன் எலக்ட்ரிக் கார் மற்றும் டைகன் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகங்களையும் போர்ஷே நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆதலால், 2024ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களிலும் போர்ஷே கார்கள் விற்பனை நம் நாட்டில் அதிகரிக்கும் என்பது உறுதி. ஆனால், எந்த அளவிற்கு அதிகரிக்கவுள்ளது என்பதைதான் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2இல் இருந்து 3 போர்ஷே கார்கள் விற்பனையாகுகின்றன.


Click it and Unblock the Notifications









