ஜாம்பவான் டாடாவுக்கு போட்டியாக வர களமிறங்கிட்டாரு!! அனில் அம்பானி தொடங்க இருக்கும் புது பிசினஸ்..
உலக அளவில் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழலை உணர்ந்து புதுமுக நிறுவனங்கள் பல எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தங்களின் வருகையைப் பதிவுச் செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அனில் அம்பானி-க்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்டர் (Reliance Infrastructure), எலெக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தியில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக நிறுவனம் சீனாவைச் சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி-யின் முன்னாள் ஊழியரை பணியமர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla)-விற்கே டஃப் கொடுக்கும் ஓர் பிராண்டாக மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும் ஓர் நிறுவனமே பிஒய்டி ஆகும்.

இத்தகைய ஓர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரையே ரிலையன்ஸ் தற்போது, எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் களமிறங்க இருப்பதை முன்னிட்டு பணியமர்த்தி இருக்கின்றது. ஆகையால், டெஸ்லாவிற்கு மேலும் ஒரு புதிய தலைவலி விரைவிலேயே இந்தியாவில் இருந்து உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்திய மின்சார வாகன உலகின் மகுடம் சூடப்படாத மன்னனாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விளங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ்-இன் மின்சார வாகன உற்பத்தி திட்டம் தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரிலையன்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமின்றி மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கின்றது. எனவே மின்சார வாகன உலகில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தும் விதமாக ரிலையன்ஸ் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிறுவனம், தொடக்கத்திலேயே ஆண்டு ஒன்றிற்கே 2.50 லட்சம் யூனிட்டுகள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன் செயல்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டு ஒன்றிற்கு 7.50 லட்சம் யூனிட்டுகள் அளவிற்கு உற்பத்தி திறனை உயர்த்தவும் அது திட்டமிட்டு இருக்கின்றது.
இதேபோல், பேட்டரி செல் உற்பத்திக்கு என தனி ஆலையையும் ரிலையன்ஸ் அமைக்க இருக்கின்றது. 10 GWh (gigawatt-hour) அளவிலேயே தன்னுடைய பேட்டரி உற்பத்தி ஆலையை அது அமைக்க இருக்கின்றது. மேலும், அடுத்த பத்தாண்டுகளுக்குள் இதனை 75 GWh-ஆக உயர்த்தவும் ரிலையன்ஸ் திட்டமிட்டு இருக்கின்றது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மின்சார வாகன விற்பனை கணிசமான அளவு வளர்ச்சியைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மின்சார வாகன காதலர்களைக் கவர்வதற்கான முயற்சியில் அனில் அம்பானி களமிறங்கி இருக்கின்றார். இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மூத்த சகோதரரே அனில் அம்பானி ஆவார்.
தங்களின் குடும்ப பிசினஸான ரிலையன்ஸ் எனும் பிரமாண்ட நிறுவனத்தை அண்ணன் தம்பி இருவரும் பிரித்துக் கொண்டு அதை நடைத்தி வருகின்றனர். 2005 ஆம் ஆண்டே இந்த பிரிவு அரங்கேறியது. இந்த பிரிவிற்கு பின்னர் ஜியோ போன்ற பிரமாண்டமான நிறுவனங்களை உருவாக்கி மாபெரும் வளர்ச்சியை முகேஷ் அம்பானி கண்டார்.
ஆனால், அனில் அம்பானி பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. இந்த நிலையிலேயே அவர் எலெக்ட்ரிக் வாகன உலகை நம்பி காயை நகர்த்த தொடங்கியிருக்கின்றார். ஆனால், டாடா மோட்டார்ஸ் எனும் மாபெரும் ஜாம்பவான் நிறுவனம் இந்த பிரிவில் மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. மின்சார கார் பிரிவில் 70 சதவீத சந்தைப் பங்கையே அதுக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர, மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களும் இந்திய மின்சார கார் பிரிவில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தும் பணியில் களமிறங்கி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், மாபெரும் போட்டியை அனில் அம்பானி மின்சார கார் பிரிவில் சந்திப்பார் என்பது இப்போதே தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையும், ஹூண்டாய் அதன் கிரெட்டா எலெக்ட்ரிக் கார் மாடலையுமே விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றன. எனவே நிச்சயம் அனில் அம்பானியின் எலெக்ட்ரிக் கடுமையான போட்டியைச் சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications








