விலை குறைவான கார்களில் கூடுதல் அம்சங்களை சேர்த்த ரெனால்ட்... இதுக்காக விலையை ஏத்திட்டாங்களா?
இந்தியாவில் குறைவான விலையில் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களில் ரெனால்ட்-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே அதன் குறைந்த விலை கார்களில் கூடுதலாக சில சிறப்பம்சங்களை சேர்த்து விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் ரெனால்ட் (Renault) நிறுவனம் இப்போதைய நிலவரப்படி க்விட் (Kwid), ட்ரைபர் (Triber) மற்றும் கைகர் (Kiger) ஆகிய கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடல்களையே அது 2024 ஆம் ஆண்டை முன்னிட்டு புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

புதுப்பித்தலின் அடிப்படையில் அந்த காரில் புதிய மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களை அது சேர்த்து இருக்கின்றது. அந்தவகையில், என்னென்ன சிறப்பம்சங்களை அது கூடுதலாக வழங்கி இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, மாடல்கள் வாரியாக என்னென்ன புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன மற்றும் அவற்றின் இப்போதைய விலை என்ன என்பது பற்றிய தகவலையே பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
2024 ரெனால்ட் க்விட்: ரெனால்ட் நிறுவனம் புதுப்பித்தலின்கீழ் புதிய அம்சங்களை மட்டுமே சேர்க்கவில்லை. புதிய நிற ஆப்ஷனை அது இந்த கார் மாடல்களில் அறிமுகம் செய்திருக்கின்றது. அந்தவகையில், ரெனால்ட் க்விட் கார் மாடலில், மூன்று புதிய டூயல்-டோன் நிற தேர்வு வழங்கப்படுகின்றது.

இத்துடனேயே, புதியதாக அதன் ஆர்எக்ஸ்எல் (ஓ) தேர்வில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. வேறு எந்த விலை குறைவான கார் மாடலிலும் இந்த அம்சத்தை உங்களால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், இந்த தேர்வில் நிறுவனம் ஈசி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவில் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்விற்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது.
இதன் விளைவாகவே இந்த வசதியை க்விட்டில் ரெனால்ட் அறிமுகம் செய்திருக்கின்றது. இவற்றுடன், சேர்த்து 14 விதமான பாதுகாப்பு அம்சங்களையும் ரெனால்ட் இந்த குட்டி ஹேட்ச்பேக் காரில் கட்டாயமாக்கி இருக்கின்றது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக இதை ரெனால்ட் செய்திருக்கின்றது. இந்த காருக்கு தற்போது ரூ. 4.69 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

2024 ரெனால்ட் ட்ரைபர்: இந்த காரிலும் புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், டிரைவரின் இருக்கைக்கு ஆர்ம் ரெஸ்ட் மற்றும் ஃபோல்டபிள் ரியர் வியூ மிர்ரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், 7 அங்குல டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜரும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மிக முக்கியமாக ஆர்எக்ஸ்டி வேரியண்டில் ரியர் வியூ கேமிரா மற்றும் ரியர் வைப்பர் ஆகியவையும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ரியருக்கான ஏசி மற்றும் பிரத்யேக ஏசி கன்ட்ரோல் ஆகியவையும் அந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பிஎம்2.5 ஏர் ஃபில்டர், 15 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவையும் அப்டேட்டின்கீழ் ரெனால்ட் நிறுவனம் 2024 ட்ரைபரில் வழங்கி இருக்கின்றது.

புதிதாக ஸ்டீல்த் பிளாக் (Stealth Black) எனும் புதிய நிற தேர்வும் இந்த காரில் விற்பனைக்குக் கிடைக்கும் என ரெனால்ட் தெரிவித்து இருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 5.99 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
2024 ரெனால்ட் கைகர்: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் கைகரும் ஒன்றாகும். இந்த காரிலும் கணிசமான அளவில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இருக்கைகளில் லெதர் கவர், வரவேற்கும் மற்றும் குட் பை சொல்லும் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், தானாக மடித்துக் கொள்ளும் ரியர் வியூ மிர்ரர், ஆட்டோ டிம் ரியர் வியூ மானிட்டர் என புதிய அம்சங்கள் பல இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஆட்டோ ஏசி, பவர் ஃபோல்டு ஓஆர்விஎம், க்ரூஸ் கன்ட்ரோல், கேபினில் எல்இடி லைட்டுகள் உள்ளிட்டவையும் 2024 கைகர் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
மேலும் மற்ற மாடல்களைப் போலவே இந்த காரிலும் 15 விதமான புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஈசி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 2024 கைகர் இந்தியாவில் ரூ. 6 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரெனால்ட் கார்களுக்கு, ஓரளவிற்கு குறைவான விலையில் காரை எதிர்பார்ப்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனம் அதன் தயாரிப்புகளை அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றிற்கும் வரும் நாட்களில் நல்ல வரவேற்பே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









