டிரைவர் வேலைக்கு ஆப்பு.. ரோபோ மயமாக்கப்பட்ட தானாக இயங்கும் மினி பேருந்தை உருவாக்கும் ரெனால்ட்..
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் (Renault), அதன் உயர் நிலை கார் மாடல்கள் சிலவற்றில் ஏற்கனவே தானியங்கி இயக்க (Autonomous driving) வசதியை வழங்கிக் கொண்டிருக்கின்றது. மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் பொருட்டும், பாதுகாப்பான பயணத்தை வழங்கும் நோக்கிலும் இந்த அம்சத்தை குறிப்பிட்ட சில உயர்நிலை கார் மாடல்களில் மட்டும் அது வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே ரெனால்ட் நிறுவனம் டிரைவரே இல்லாமல் இயங்கும் மினி பேருந்து (Autonomous Mini Bus)-ஐ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார் உற்பத்தியில் தலை சிறந்து விளங்கும் இந்நிறுவனம், என்ன மாதிரியான வசதிக் கொண்ட தானியங்கி மினி பேருந்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ரெனால்ட் குழுமம், தன்னாட்சி வசதிக் கொண்ட மினி பேருந்தை உருவாக்குவதற்காக, உலக புகழ்பெற்ற வி-ரைடு (WeRide) நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிறுவனம் தானாக இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் தலைசிறந்த நிறுவனம் ஆகும். இதனுடன் இணைந்தே லெவல் 4 வகை தன்னாட்சி வசதிக் கொண்ட பெரிய அளவிலான வர்த்தக வாகனங்களையே தயாரிக்கும் முயற்சியில் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்போதைய நிலவரப்படி கார்கள் போன்ற தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களில் மட்டுமே தன்னாட்சி இயக்க வசதி வழங்கப்பட்டு வருகின்றது. சந்தையில் லெவல் 0 பூஜ்ஜியதம் தொடங்கி லெவல் 5 வரையிலான தன்னாட்சி இயக்கம் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு உள்ளது. அடுத்ததாக லெவல் 6-ஐ உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், கார் போன்ற தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களில் லெவல் 2 மற்றும் லெவல் 2 பிளஸ் தன்னாட்சி இயக்க வசதிக் கொண்ட தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அம்சம் கொண்ட வாகனங்கள் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தானே தாற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவை ஆகும்.
அதாவது, விபத்து ஏற்படும் முன்னரே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும். அதாவது, பிரேக் பிடித்தல், வேகத்தைக் குறைத்தல், சாலை லேனை மாற்றுதல் போன்ற செயல்களைச் செய்யும். எனவே, விபத்தில் சிக்கி பெருத்த சேதம் ஏற்படுவது மிகப் பெரிய அளவில் தவிர்க்கப்படும். இத்தகைய அம்சத்தையே மினி பேருந்துகளில் வழங்க இருக்கன்றது, ரெனால்ட்.
பெருவாரியான நிறுவனங்கள் தனிப் பயன்பாட்டு வாகனங்களில் மட்டுமே இந்த வசதியை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே ரெனால்ட் தனி பயன்பாட்டு வாகனங்களில் மட்டுமின்றி பொது பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் வாகனங்களில் தானியங்கி மற்றும் அதீத பாதுகாப்பு திறனை வழங்க வேண்டும் என்கிற முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
இதன் வெளிப்பாடாகவே அது மினி பேருந்திற்கு தானியங்கி இயக்க வசதியை வழங்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த பணியில் ரெனால்ட் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் இருந்தே ஈடுபட்டு வருகின்றது. மேக் 2 திட்டம் (Mach 2 project) எனும் பெயரில் இந்த பணியில் அது ஈடுபட்டு வருகின்றது.
விரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ரெனால்ட் உருவாக்கிக் கொண்டிருக்கும் தானியங்கி வசதிக் கொண்ட பொதுப் பயன்பாட்டிற்கான மினி பேருந்துகள் 2026ம் ஆண்டிற்குள் சாலையில் நடமாடத் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. லெவல் 4 தன்னாட்சி என்பது மிக அட்வான்ஸ்டு வசதிகள் கொண்ட தன்னாட்சி தொழில்நுட்பம் ஆகும்.
மிக சிறந்த இயக்க அனுபவத்தை டிரைவர்கள் இல்லாமலேயே அது வழங்கும். ஓர் டிரைவர் தன்னிட்சையாக எப்படி செயல்படுவாரோ அதைப் போலவே இது செயல்படும். பயணிகளை ஏற்றுவது, குறிப்பிட்ட இடத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவது மற்றும் பிரேக் பிடித்தல், சிக்னலுக்கு ஏற்ப கட்டுபடுதல் போன்ற அனைத்து செயல்களையும் அது செய்யும். இதுபோன்ற செயல்களை மினி பேருந்து செய்வதற்காக அது முழுக்க முழுக்க ரோபோ மயமாக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ரோபோ மயமாக்கப்பட்ட தானியங்கி வசதிக் கொண்ட மினி பேருந்து இந்தியா வருமா என்பது கேள்விக் குறியே. அதேவேளையில், இந்தியாவில் லெவல் 2 வசதிக் கொண்ட கார் மாடல்கள் சில விற்பனைக்குக் கிடைக்கின்றது. குறிப்பாக, அடாஸ் அம்சம் கொண்ட கார்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே எதிர்காலத்தில் தன்னாட்சி வசதிக் கொண்ட கனரக வாகனங்களும் பன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








