உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
சேனி இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் சுரங்கப் பணிகளுக்கான எலெக்ட்ரிக் டிரக்கை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் டிரக் 70 ஆயிரம் கிலோவைகூட அசால்டாக தாங்குமாம். இதுபோன்ற கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சேனி இந்தியா (Sany India), இது ஓர் கட்டுமான மற்றும் சுரங்க பயன்பாட்டிற்கான எந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த பிரிவில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இது விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனமே முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் டம்ப் டிரக் (Electric Dump Truck)-கை வெளியீடு செய்திருக்கின்றது.

இதுவே இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் மின்சாரத்தில் இயங்கும் டம்ப் டிரக் ஆகும். எஸ்கேடி105இ (SKT105E) எனும் பெயரில் இந்த வாகனம் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. சுரங்கம் மற்றும் கட்டுமான பணிகளுக்கான ஓர் வாகனமே இதுவாகும். நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த வாகனத்தால் சுமார் 70 டன் எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என தெரிகின்றது.
சேனி இந்தியா நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக நிலத்தைத் தோண்டும் எந்திரங்கள் (Excavators), கிரேன்கள் (Cranes), பைலிங் மெஷின் (Piling Machinery), சுரங்க பணிகளுக்கான கருவி (Mining Machinery), சாலை அமைப்பதற்கான எந்திரம் (Road Machinery), துறைமுகங்களுக்கான எந்திரம் (Port Machinery) மற்றும் காற்றாலை (Wind Machinery) ஆகியவையே இருக்கின்றன.
இந்த நிலையிலேயே இந்த பிரிவில் தனக்கு இருக்கும் அனுபவங்களைக் கொண்டு சுரங்கத் துறைக்கான தரமான மின்சார மைனிங் டம்ப் டிரக்கை அது தயார் செய்திருக்கின்றது. இந்த ஒற்றை வாகனம் பயன்பாட்டாளர்களின் தேவையை மிகப் பெரிய அளவில் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
குறிப்பாக, முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் வகையில் இதை வடிவமைக்கப்பட்டு இருப்பதால் பெரிய அளவில் இதற்கு பராமரிப்பு செலவு ஏற்படாது என கூறப்படுகின்றது. குறிப்பாக, டீசலுக்கு ஆகக் கூடிய மிகப் பெரிய செலவை சேமித்துக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, அதிகப்படியான டீசல் பயன்பாட்டால் ஏற்படும் காற்று மாசுபாட்டையும் இந்த வாகனத்தால் குறைத்துக் கொள்ள முடியும்.
எனவே எஸ்கேடி105இ டம்ப் டிரக்கை பயன்படுத்தினால் இரட்டிப்பான லாபம் மற்றும் காற்று மாசடைவதைத் தவிர்த்தல் உள்ளிட்டவற்றைச் செய்துக் கொள்ள முடியும். மேலும், அதிக சுமைகளை இதில் சுமந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மின்சாரத்தில் இயங்கக் கூடியதாக இருந்தாலும், அது டீசல் எஞ்சினைக் கொண்ட வாகனங்களை போலவே திறம்பட செயல்படும் என்றும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
குறிப்பாக, சுரங்க பணியில் ஈடுபடும்போது மிக சிறந்த இழுவை திறனை அது வழங்குமாம். என்னதான் இது கட்டுமான பயன்பாட்டிற்கான வாகனமாக இருந்தாலும், டிரைவர்களின் அதிக தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வசதியும் இதில் தாராளமாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவை பற்றிய முழு விபரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை.
இதேபோல், என்ன மாதிரியான திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் ஆகியவை எஸ்கேடி105இ எலெக்ட்ரிக் மைனிங் டம்ப் டிரக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்கிற விபரங்களும் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுபற்றிய அனைத்துத் தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் மைனிங் டம்ப் டிரக் இது என்பதால் இந்தியாவிற்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் இந்த தயாரிப்பு அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காற்று மாசு மிகப் பெரிய அளவில் உலக அளவில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. காற்று மாசே காலை நிலை மாற்றத்திற்கான மிக முக்கியமான காரணி ஆகும். இதன் விளைவாகவே துபாய் போன்ற உலகின் முக்கிய பகுதிகளில் வருடம் முழுக்க பொழிய வேண்டிய மழை ஒரே நாளில் பொழிந்து தள்ளுவது போன்ற இயற்கே பேரிடர்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இதுமாதிரியான பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவே மின்சார வாகன பயன்பாடு முக்கியம் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே சுரங்கம் பணிகளுக்கான எலெக்ட்ரிக் வாகனத்தை சேனி இந்தியா வெளியீடு செய்திருக்கின்றது. இதற்கு அந்த துறையைச் சார்ந்த நிறுவனங்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








