8 லட்ச ரூபாய் ஸ்கோடா காரை புக் செஞ்சவங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்! காரை வீட்டுக்கு ஓட்டி செல்ல ரெடியாகுங்க!!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் இந்தியாவில் புதியதாக கைலாக் (Kylaq) காரை கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்தது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய காரை ஸ்கோடா நிறுவனம் இந்தியர்களுக்கு என பார்த்து, பார்த்து வடிவமைத்துள்ளது. இந்த நிலையில், புதிய ஸ்கோடா கைலாக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், ஸ்கோடா ஆட்டோவின் புதிய கைலாக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நீண்ட வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இலாபகரமான வணிகத்திற்காக ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த கூட்டு முயற்சி இரு நிறுவனங்களுக்கும் குறிப்பிடத்தக்க இலாபத்தை தந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட குஷாக் எஸ்யூவி கார் ஸ்கோடா நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது போல், டைகுன் எஸ்யூவி கார் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு அமைந்தது. குஷாக் காருக்கு அடுத்து, ஸ்கோடா நிறுவனம் இந்தியர்களுக்கு என பார்த்து, பார்த்து உருவாக்கி விற்பனைக்கு கொண்டுவந்திருக்கும் புதிய எஸ்யூவி கார் கைலாக் ஆகும்.
இந்தியர்களை கவரும் வகையில் புதிய காருக்கு என்ன பெயரை சூட்டலாம் என மக்களிடையே போட்டி வைத்து 'கைலாக்' பெயரை ஸ்கோடா தேர்வு செய்தது. இதில் இருந்து கைலாக் மீது ஸ்கோடா எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு வைத்துள்ளது என்பதை அறியலாம். எதிர்பார்த்ததை போல், கைலாக் எஸ்யூவி கார் முழுக்க முழுக்க இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் கைலாக் காரை இந்தியாவில் உற்பத்தி செய்து முடித்துள்ளதை ஸ்கோடா நிறுவனம் போட்டோ உடன் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் சாகான் என்கிற பகுதியில் உள்ள ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையில் கைலாக் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 'மேக்-இன்-இந்தியா' விஷயத்தில் தீவிரமாக இருக்கும் கார் நிறுவனங்களுள் ஸ்கோடாவும் ஒன்றாகும். இதற்காக தான் சில வருடங்களுக்கு முன்பு எம்க்யூபி-ஏ0-இன் என்கிற பெயரிலான கார் பிளாட்ஃபாரத்தை ஸ்கோடாவும், ஃபோக்ஸ்வேகனும் இணைந்து உருவாக்கின.
இந்த பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட முதல் கார் ஸ்கோடா குஷாக் ஆகும். புதியதாக விற்பனைக்கு வந்திருக்கும் கைலாக் ஆனது இந்த பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் 5வது கார் ஆகும். இதனை தொடர்ந்து 6வது கார் ஸ்கோடா கைலாக் காரின் அடிப்படையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்க்யூபி-ஏ0-இன் பிளாட்ஃபாரத்தில் மற்ற எந்த ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்களிலும் இல்லாத அளவிற்கு 10% கூடுதல் விரைவாக யு-டர்ன் திருப்பும் வகையில் கைலாக் காரை உருவாக்கியுள்ளதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது. மேலும், இந்த கைலாக் காரை சொந்தமாக்குவதற்கு செலவிட வேண்டிய தொகையும் குறைவாக இருக்கும் என ஸ்கோடா தெரிவிக்கிறது.
ஸ்கோடா கைலாக் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.89 லட்சத்தில் இருந்து ரூ.14.40 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த காரின் உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், காரை புக் செய்தவர்களுக்கு கைலாக் காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற 2025 ஜனவரி மாதத்தில் இருந்து துவங்கப்படும் என ஸ்கோடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2021 சமயத்தில் குஷாக் காருக்கு எந்த அளவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததோ அதே அளவிற்கு கைலாக் காருக்கும் ஸ்கோடா நிறுவனம் முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்க முடிகிறது. குஷாக்கை காட்டிலும் விலை குறைவானதாகவும், அளவில் சிறியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளதால், கைலாக் காருக்கு அதிக கஸ்டமர்கள் கிடைப்பர் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









