ஆசிரியருக்கு இந்த காரைதான் பரிசாக தர போறாங்க.. இதுக்குனே சீக்கிரம் உற்பத்தியை தொடங்க போறாங்க!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா (Skoda), இந்தியாவில் மிகப் பெரிய டிமாண்டைக் கொண்டிருக்கும் கார் பிரிவான சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஓர் புதுமுக காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. கைலாக் (Kylaq) கார் மாடல்தான் அது ஆகும். இந்த காரின் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கப்படும் என்கிற விபரங்களே தற்போது வெளியாகி உள்ளன. ஸ்கோடா கார் காதலர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக கைலாக் காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த காரின் உற்பத்தி பணிகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், அடுத்த ஆண்டு தொடங்குவதற்குள் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என்றும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், டிசம்பர் இறுதிக்குள் இதன் விற்பனைக்கான அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்கோடா நிறுவனம் இந்த புதுமுக கைலாக் காரை ஆண்டு ஒன்றிற்கு 50 ஆயிரம் யூனிட்டுகள் தொடங்கி 70 ஆயிரம் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.

குறிப்பாக, இந்த காரை ஆண்டு ஒன்றிற்கு ஒரு லட்சம் யூனிட்டுகள் வரை விற்பனைச் செய்வதே ஸ்கோடாவின் இலக்காக உள்ளது. இந்த அளவிற்கு மிகப் பெரிய திட்டத்தையே இந்த காரின் வாயிலாக ஸ்கோடா வகுத்து உள்ளது. இந்த புதிய காரின் உற்பத்தி பணிகளானது நிறுவனத்தின் சக்கன் ஆலையிலேயே நடைபெற இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில் மிகப் பெரிய போட்டி நிலவுகின்றது. இந்த பிரிவின் முதன்மையான போட்டியாளர்களாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் கியா சொனட் ஆகியவை இருக்கின்றன. இவற்றிற்கே மிகப் பெரிய போட்டியாளனாக விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது கைலாக்.
இதற்கு ரூ. 8 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள்ளேயே விலை நிர்ணயிக்கப்பட இருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி சமீபத்தில் தெரிவித்தார். ஆகையால், ஸ்கோடா கைலாக் நிறுவனத்தின் விலை குறைவான காராக விற்பனைக்கு வரும் என தெரிகின்றது. அதேவேளையில், நிறுவனத்தின் 2.0 திட்டத்தின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கும் கார் மாடல் இது என்பதால் அதிக பிரீமியம் மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட கார் மடாலாக இது இருக்கும் என தெரிகின்றது.
நிறுவனத்தின் இதே திட்டத்தின்கீழ் இதற்கு முன்னதாக ஸ்லேவியா, குஷாக் ஆகிய கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் வரிசையிலேயே மூன்றாவது தயாரிப்பாக விரைவில் கைலாக் இணைய உள்ளது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே ஸ்கோடா நிறுவனம் அவ்வப்போது டீசர் படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையிலேயே எப்போது கைலாக் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும் என்கிற விபரங்கள் வெளியாகி உள்ளன. ஸ்கோடா நிறுவனம், இந்த புதுமுக காரின் வருகையை முன்னிட்டு அண்மையில் ஓர் போட்டியை இந்தியாவில் நடத்தியது. இந்த கார் மாடலின் பெயரைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அந்த காரையே பரிசாக வழங்கப்படும் என்கிற போட்டியையே அது தொடங்கி வைத்தது.
இதைத்தொடர்ந்து, புதிய கார் மாடலின் பெயரின் தொடக்க எழுத்து மற்றும் இறுதி எழுத்தையும் அது அறிவித்தது. கே, க்யூ எனும் எழுத்தையே அது அறிவித்தது. இதைத்தொடர்ந்து பலர் தங்களின் யூகிப்பின் அடிப்படையில் அந்த கே மற்றும் க்யூ-வை பயன்படுத்தி பெயர்களை கூறினர். அந்தவகையில், கேரளாவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர் சரியாக புதுமுக காரின் பெயர் கைலாக் என்பதைக் கண்டுபிடித்தார்.
எனவே அவருக்கு அந்த கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பல லட்சம் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டநிலையில், காசர்கோடில் உள்ள நஜாத் குர்ஆன் அகாடமியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஹாஃபில் முஹம்மது ஜியாத் மர்ஜானி அல் யமானி என்பவரே அந்த காரை வென்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகப் பெரிய போட்டியுள்ள கார் பிரிவாக சப்-4 மீட்டர் பிரிவு இருக்கின்றது. இத்தகைய பிரிவிலேயே புதுமுக கார் மாடல் கைலாக் மிகவும் துணிச்சலாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








