கார் ரூ10 லட்சத்துக்கு கம்மி விலைன்னு சொன்னா யாரும் வாங்க மாட்டேங்குறாங்க! அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் சமீப காலமாக ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் கார்களின் விற்பனை குறிப்பிட்ட அளவு சரிவை சந்தித்துள்ளதாக மாருதி நிறுவனத்தின் சேர்மன் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். அந்நிறுவனமும் இதனால் பெரும் பிரச்சனையை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக மார்க்கெட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.
இந்தியா ஒரு காலத்தில் சிறிய ரக கார்களுக்கான மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்ட நாடாக இருந்தது. இந்த நாட்டில் புதிதாக வாகனம் வாங்கும் குடும்பத்தினர் பலர் சிறிய ரக வாகனங்களை தான் அதிகம் விரும்பினார்கள். குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது இந்த டிரெண்ட் மாறி வருவதாக தெரியவந்துள்ளது.

மாருதி நிறுவனம் சமீபத்தில் இந்த நிதியாண்டிற்கான முதல் அரையாண்டு விற்பனை விபரங்களை அறிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மாருதி நிறுவனத்தின் சேர்மன் ஆர்.சி பார்க்கவா ஒரு முக்கியமான விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் வாகனங்களின் விற்பனை சமீப ஆண்டுகளாக சரீவை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த வீழ்ச்சி சரியாகவில்லை என்றால் தொடர்ந்து இந்தியாவில் வாகன விற்பனை சரிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் கூறும் போது இந்தியாவில் கடந்த 2018-19ம் நிதியாண்டில் விற்பனையான ஒட்டுமொத்த வாகனங்களில் 80 முதல் 90 சதவீதமான வாகனங்கள் ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள வாகனங்களாக விற்பனையாகின. ஆனால் கொரோனாவிற்கு பிறகு இந்த நிலைமை தற்போது பெரிய அளவில் மாறி உள்ளது.

ரூபாய் 10 முதல் 20 லட்சம் செக்மெண்டில் உள்ள வாகனங்கள் தான் அதிகமாக தற்போது விற்பனையாகி வருகின்றன. ரூ 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் வாகனங்கள் மிக குறைவாகவே விற்பனையாகி வருவதாக தெரிவித்துள்ளார். இது பலருக்கு அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது.
இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கிறது. முதலில் செமி கண்டக்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது அதன் காரணமாக வாகன தயாரிப்பு மற்றும் அதை கொண்டு சேர்ப்பதில் பல்வேறு விதமான சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது செமி கண்டக்டர்கள் தற்போது போதுமான அளவில் கிடைக்கிறது. இருந்தாலும் வாகனங்களின் விலை அதிகமாகி விட்டது.

இந்தியாவில் உள்ள மாசு கட்டுப்பாட்டு காரணங்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த காரணமாக பல புதிய அம்சங்களை காரில் சேர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் புதிதாக தயாரிக்கப்படும் கார்களின் விலை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக குறைந்த விலையில் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியவில்லை. அதனால் பெரும்பாலும் வாகன தயாரிப்பு நிறுவனங்களை அதிக லாபம் தரும் எஸ்யூவி ரக வாகனங்களை தான் தயாரிக்க விருப்பப்படுகிறார்கள்.
மாருதி நிறுவனமும் தற்போது இந்த செக்மெண்டில் தான் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. அந்நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ், ஜிம்னி, கிராண்ட் விட்டாரா மற்றும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த பிரெஸ்ஸா, எர்டிகா ஆகிய வாகனங்கள் எல்லாம் இந்த செக்மெண்டில் தான் விற்பனையாகி வருகின்றன. இந்த செக்மெண்டில் விற்பனையாகி வரும் வாகனங்கள் மூலம் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கிறது.
மாருதி நிறுவனம் அடுத்த காலாண்டில் மூன்று முதல் நான்கு சதவீதம் அளவுக்கு தனது விற்பனையை வளர்ச்சி செய்ய திட்டமிட்டு வருகிறது. இதற்காக மிட்-சைஸ் மற்றும் எம்பிவி ரக கார்களை அதிகமாக விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இது நடந்தால் அந்நிறுவனம் நல்ல வளர்ச்சியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டு விடும்.
இந்தியாவில் முதல் தலைமுறை கார் வாங்கும் பலர் குறைந்த விலை கார்களை தேர்வு செய்து வந்தார்கள். ஆனால் இன்று மக்கள் மத்தியில் அப்படியான பார்வை மாறி வருகிறது. இந்திய மக்கள் தற்போது பாதுகாப்பான நல்ல வசதி கொண்ட சமூக அந்தஸ்து தரும் கார்களை தான் விரும்புகிறார்கள். அதன் காரணமாகவே குறைந்த விலை கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் தலைமுறை கார் வாங்கும் குடும்பத்தினர் பலர் ரூபாய் பத்து லட்சத்திற்கும் குறைவான காரை வாங்க நினைத்தால் அந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் அந்த காருக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்து ஆகியவற்றை பார்த்து அந்த கார் வாங்கும் முடிவையே மாற்றி விடுகிறார்கள். இது விற்பனை வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இதனால் வாகனத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் உயர்ரக கார்களைப் போல குறைந்த விலை கார்களையும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த காராக தயாரித்தால் நிச்சயம் விற்பனை அதிகமாக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications









