சுஸுகி கார்கள் இந்தியாவில் மட்டும் தான் இப்படி இருக்கு... ஜப்பான் மக்கள் குடுத்து வெச்சவங்க!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புதிய காராக ஃப்ரான்க்ஸ் (Fronx) கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஜப்பான் நாட்டில் வருகிற அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஃப்ரான்க்ஸ் கார்கள் தான் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஃப்ரான்க்ஸ் காருக்கும், ஜப்பான் ஃப்ரான்க்ஸ் காருக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. ஜப்பான் ஃப்ரான்க்ஸ் இன்னும் கூடுதல் தொழிற்நுட்ப வசதிகளை கொண்டதாக உள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக பலேனோ உள்ளது. மற்ற மாருதி கார்களுடன் ஒப்பிடுகையில், பலேனோவின் விலை சற்று அதிகம் தான். இருப்பினும், பலேனோவை மக்கள் நிறைய பேர் விரும்பி வாங்குவதை கண்ட மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோவை போன்று வேறொரு காரை உருவாக்க ஆரம்பித்தது. அந்த முயற்சியில் வெளிவந்ததே ஃப்ரான்க்ஸ் ஆகும்.

கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ஃப்ரான்க்ஸ் காரை மாருதி சுஸுகி காட்சிக்கு நிறுத்தியது. அதன்பின் சில மாதங்கள் கழித்து விலைகள் அறிவிக்கப்பட்டு, ஃப்ரான்க்ஸ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரையில் ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனை நல்லப்படியாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தப்பட்சம் 10 ஆயிரம் ஃப்ரான்க்ஸ் கார்களை இந்தியாவில் மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது.
இதன் மூலம் கிடைத்த தைரியத்தில் ஃப்ரான்க்ஸ் காரை ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யும் திட்டத்தில் மாருதி சுஸுகி இறங்கியது. அதன்படி, விரைவில் சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில், குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் ஃப்ரான்க்ஸ் கார்கள் தான் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இது, இந்தியர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

ஆனால், இந்தியர்களுக்கு கிடைக்காத பவர்ஃபுல்லான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ஜப்பான் நாட்டில் ஃப்ரான்க்ஸ் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. ஜப்பான் மட்டுமின்றி இன்னும் சில வெளிநாடுகளுக்கும் மேட்-இன்-இந்தியா ஃப்ரான்க்ஸ் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், எந்த நாட்டிற்கும் இல்லாத ஸ்பெஷலாக ஜப்பானுக்கு மட்டும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் ஃப்ரான்க்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, என்ஜினின் இயக்க ஆற்றல் காரின் 4 சக்கரங்களுக்கும் செல்லும்.
ஆனால், நம் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் ஃப்ரான்க்ஸ் காரில் என்ஜின் ஆற்றல் முன் சக்கரங்களுக்கு மட்டுமே செல்கிறது. ஜப்பானில் ஃப்ரான்க்ஸ் காரின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே இந்த ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த சிஸ்டத்தின் மூலமாக காரில் கூடுதலாக 'ஆஃப்-ரோடு' டிரைவ் மோட்-ஐ பெறலாம். இதனால், ஜப்பானில் ஃப்ரான்க்ஸ் ஆல்-வீல்-டிரைவ் காரில் மட்டும் சஸ்பென்ஷன் செட்-அப் சற்று வித்தியாசமான டிசைனில் கிடைக்கும்.

ஜப்பானிய ஃப்ரான்க்ஸ் காரில் பெட்ரோல் என்ஜின் உடன் மைல்ட் ஹைப்ரீட் தொழிற்நுட்பம் கொடுக்கப்படுகிறது. இதைவிட முக்கியமாக, ஜப்பானில் விற்பனையை துவங்கவுள்ள ஃப்ரான்க்ஸ் காரில் மட்டும் தான் அடாஸ் (ADAS) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், காரை முன்பக்கமாக பார்க் செய்ய உதவியாக பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோமேட்டிக் க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட பல்வேறு அட்வான்ஸ்டு வசதிகளை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களை கடந்த பல வருடங்களாக வெளிநாடுகளுக்கு மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்து வருகிறது. அதாவது, நம் மேட்-இன்-இந்தியா சுஸுகி கார்கள் பல்வேறு நாட்டு சாலைகளில் ஓடுகின்றன. ஆனால், சுஸுகியின் தாயகமான ஜப்பானுக்கே இந்தியாவில் இருந்து சுஸுகி கார்கள் செல்கின்றன எனும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் இருந்து மேட்-இன்-இந்தியா கார்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது.


Click it and Unblock the Notifications









