வாங்கினா மாருதி எலெக்ட்ரிக் காரைதான் வாங்குவேன்னு காத்திருக்கீங்களா.. இதோ உங்களுக்கான தகவல்தான் இது..
இந்தியாவின் மின்சார கார் பிரிவு முன்பு மாதிரி இல்ல. ஏகப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இப்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ம், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) இடையில் கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, டாடாவின் முன்னணி இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் அளவிற்கு எம்ஜி வளர்ந்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே இருங்க நாங்களும் போட்டிக்கு வருகிறோம் என தன்னுடைய மின்சார காரின் டீசர் (Teaser) படத்தை வெளியிட்டு சொல்லாமல் சொல்லியிருக்கின்றது, மாருதி சுஸுகி (Maruti Suzuki).
இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் இ-விட்டாரா (e Vitara) எனும் மின்சார கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இதன் அறிமுகத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனம் இந்த காரை விரைவில் இத்தாலியின் மிலன்-இல் நடைபெற இருக்கும் ஓர் நிகழ்ச்சி வாயிலாக இந்த காரை உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த கார் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றில் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. இதனால்தான் உலக அரங்கில் வைத்து அறிமுகம் இ-விட்டாராவை அறிமுகம் செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது, சுஸுகி. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற உலக சந்தைகளிலேயே இ-விட்டாரா விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. அதேவேளையில், இந்த காருக்கான முக்கிய சந்தையாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உற்பத்திகூட மாருதி சுஸுகி-யின் குஜராத் ஆலையில் வைத்தே மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இந்த நிலையிலேயே இ-விட்டாரா மின்சார காரின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் டீசர் படங்களையே அது வெளியிட்டு உள்ளது. இதுவே இந்த காரின் டீசர் படம் வெளியிடப்படுவது முதல் முறையாகும். இந்த டீசர் படத்தின் வாயிலாக இ-விட்டாரா தனித்துவமான ஸ்டைலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
மிக முக்கியமாக அதன் முகப்பு பகுதி முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலைக் கொண்டதாக இருக்கும் என தெரிகின்றது. இதற்கேற்ப புதிய 'ஒய்' (Y) வடிவ டிஆர்எல், கட்டுமஸ்தான பான்னெட் மற்றும் முழுமையாக அடைக்கப்பட்ட கிரில் உள்ளிட்டவற்றை இ-விட்டாரா கொண்டிருக்கும் என தெரிய வந்துள்ளது. டீசர் படம் வாயிலாக இந்த தகவல் மட்டுமே இப்போதைக்கு வெளியிடப்பட்டு இருக்கின்றது. விரைவில் இதுபோன்று அடுத்த முக்கிய தகவல்கள் இந்த கார் குறித்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், இந்த கார் பற்றிய சில தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் கசிய தொடங்கிவிட்டன. அந்தவகையில், புதிய இ விட்டாரா 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருப்பதாகவும், அந்த பேட்டரி பேக்குகள் எல்எஃப்பி வகை பேட்டரி பேக் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, இரண்டு வீல் டிரைவ் மற்றும் நான்கு வீல் டிரைவ் ஆகிய வசதிகளிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
இதுதவிர, மாருதி சுஸுகியின் மற்ற தயாரிப்புகளில் வழங்கப்படாத சில முக்கியமான அம்சங்களும் இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த காருக்கு எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. மாருதி சுஸுகி நிறுவனமும் இந்த காருக்காக காத்திருப்பது ஒர்த்தானதாக இருக்கும் என தெரிவித்திருக்கின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி டாடா-எம்ஜி இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியை மாருதி சுஸுகி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், விரைவில் அதுவும் ஓர் போட்டியாளனாக களத்தில் நிற்க இருக்கின்றது. இதுமட்டுமல்ல, ஹூண்டாயும் அதன் எலெக்ட்ரிக் கார் மாடலை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








