பேருந்துக்குள் 5 இடத்தில் சிசிடிவி கேமரா... அமைச்சர் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் பேருந்து!!
ஸ்விட்ச் மொபைலிட்டி (Switch Mobility) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனை செய்யப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் பேருந்துகளின் அறிமுக நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார். இந்தியாவில் பல எலக்ட்ரிக் பேருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், அவற்றுடன் ஒப்பிடுகையில் புதிய ஸ்விட்ச் எலக்ட்ரிக் பேருந்துகள் தொழிற்நுட்ப அம்சங்களில் மேம்பட்டவைகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய எலக்ட்ரிக் பேருந்துகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹிந்துஜா குழுமத்தில் ஓர் அங்கமாக இருக்கும் அசோக் லேலாண்டின் துணை நிறுவனமாக ஸ்விட்ச் மொபைலிட்டி விளங்குகிறது. ஏற்கனவே சில எலக்ட்ரிக் பேருந்துகளை விற்பனை செய்துவரும் ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனம் புதியதாக இரு எலக்ட்ரிக் பேருந்துகளை வெளியீடு செய்துள்ளது. அதாவது, பேருந்துகளின் விலைகள் மட்டுமே அறிவிக்கப்படவில்லை; மற்ற அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இஐவி12 (EiV12) மற்றும் இ1 (E1) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் பேருந்துகளை ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், இஐவி12 ஆனது இந்தியாவிற்கான பேருந்தாகவும், இ1 ஆனது ஐரோப்பிய நாடுகளுக்கான பேருந்தாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்விட்ச் மொபைலிட்டி தெரிவித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த பேருந்துகள் மூலமாக ஸ்விட்ச் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த விரும்புகிறது.
இந்த இரு எலக்ட்ரிக் பேருந்துகளும் தாழ்வான சிட்டி பேருந்துகளாகும். அதாவது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புறங்களிலும் இவற்றை பயன்படுத்தலாம். தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்காது. இதில், இஐவி12 எலக்ட்ரிக் பேருந்து இந்திய சாலைகளுக்கும், போக்குவரத்துக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் சேசிஸில் 400kWh-க்கும் அதிகமான திறன் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த எலக்ட்ரிக் பேருந்துகளின் அறிமுக நிகழ்ச்சியில், மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஹிந்துஜா க்ரூப்பின் தலைவர் அசோக் பி.ஹிந்துஜா அவர்கள் கலந்துக் கொண்டனர். ஐரோப்பாவுக்கான ஸ்விட்ச் இ1 எலக்ட்ரிக் பேருந்து இந்த நிகழ்ச்சியில் நேரடியாக அறிமுகம் செய்யப்படாமல், காணொளி காட்சியின் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு எலக்ட்ரிக் பேருந்துகளும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாக உள்ளன. உலக தரத்தில் செயல்திறன், பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் பயணிகளுக்கான சவுகரியத்தை கொண்டிருக்கும் ஸ்விட்ச் இஐவி12 எலக்ட்ரிக் பேருந்து முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த பேருந்தில் அதிகப்பட்சமாக 39 பயணிகள் அமர்ந்து பயணம் செய்யலாம்.

மாற்றுத்திறனாளிகள் தங்களது சக்கர நாற்காலியுடன் பேருந்துக்குள் நுழைவதற்கும், அவற்றை நிறுத்துவதற்கும் இந்த ஸ்விட்ச் இஐவி12 எலக்ட்ரிக் பேருந்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கென பிரத்யேகமாக 5 இருக்கைகளை வழங்கியுள்ளனர். பயணிகளின் பாதுகாப்பிற்கு 5 சிசிடிவி கேமாரக்களை கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் பேருந்தில் பனோராமிக் கண்ணாடி பகுதியும் உள்ளது.
இந்த பேருந்தில் வழங்கப்பட்டிருக்கும் iON டெலிமேட்டிக்ஸ் சிஸ்டம் வாயிலாக பேருந்தில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக அடையாளம் காண்வதுடன், பல இஐவி12 பேருந்துகளை ஒருங்கிணைத்து இயங்கவும் வழிவகுக்கும். விரைவான சார்ஜிங்கிற்காக பேருந்துக்கு பின்பக்கத்தில் ட்யூயல்-பாயிண்ட் சார்ஜிங் வசதியை பெற்றிருக்கும் ஸ்விட்ச் இஐவி12 எலக்ட்ரிக் பேருந்தின் பேட்டரிக்கு ஐபி67 சான்றளிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் சிட்டி பேருந்துக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 70 ஆயிரம் எலக்ட்ரிக் பேருந்துகள் இயங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்விட்ச் மொபைலிட்டியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இஐவி12 எலக்ட்ரிக் பேருந்து ஆனது ஸ்விட்ச் நிறுவனத்துக்கு கேம் சேஞ்சராக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









