தமிழகத்தில் திடீரென நிறுத்தப்பட்ட மின்சார கார்களின் பதிவு.. அமைச்சரே இதுதான் பிரச்னைனு ஒத்துகிட்டாரு!
ஒட்டுமொத்த இந்தியாவும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வரும்நிலையில், நம் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மின்சார வாகனங்களின் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ-க்களிலும் மின்சார வாகன பதிவு கடந்த திங்கள் கிழமையில் இருந்தே நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த தகவல் மின்சார வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்களின் பதிவு மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கின்றது. இந்த திடீர் நிறுத்தத்திற்கான காரணம் என்ன? எப்போதில் இருந்து மீண்டும் இ-கார்களின் பதிவு தொடங்கப்பட்டது? இதுபற்றிய விபரங்களை பார்க்கலாம் வாங்க.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையான விற்பனையை சீக்கிரமே தொட்டுவிடும் என கூறும் அளவிற்கு மின்சார வாகனங்களின் விற்பனை தற்போது பலமடங்கு சூடுபிடித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆர்டிஓ-க்களிலும் கடந்த சில தினங்களாக எலெக்ட்ரிக் கார்களின் பதிவு மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.

இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ வெளியாகவில்லை. இந்த வாரம் திங்கள் கிழமையில் இருந்தே எலெக்ட்ரிக் கார்கள் பதிவு நிறுத்தப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக உயர்தர மின்சார கார் மாடல்களை பதிவு செய்ய வேண்டாம் என்று மூத்த அதிகாரிகள் ஆர்டிஓ-க்களுக்கு வாய்வழி அறிவுறுத்தல்களை வழங்கியதாகக் கூறப்படுகின்றது.
இதன் விளைவாக, திங்கள்கிழமை முதல் 3,000-க்கும் மேற்பட்ட இ-கார்களின் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டள்ளது. எனவே தற்போது பெரும் விமர்சனமும், சர்ச்சையும் எழும்பி இருக்கின்றது. இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, அனைத்து ஆர்டிஓக்களும் வியாழன் காலை முதல் இ-கார் பதிவுகளை மீண்டும் தொடங்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன (இன்று முதல் இ-கார்கள் பதிவுகள் மீண்டும் தொடங்கியுள்ளன).
அத்துடன், தற்போது நிலுவையில் உள்ள அனைத்து வாகனங்களையும் விரைந்து பதிவு செய்யவும் ஆர்டிஓ-க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதேநேரத்தில், மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் பிற வழக்கமான பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் பதிவு எந்த பிரச்சனையும் இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தால் நடத்தப்படும் ஆன்லைன் பதிவு போர்ட்டலான பாரிவாஹனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் மின்சார கார்களின் பதிவு நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது. இதனை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். சென்ற ஆண்டு மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 100 சதவீத சாலை வரி விலக்கை அறிவித்தது.
அதனை 2025 வரை நீட்டித்தே அரசு உத்தரவிட்டது. இந்த நிலையிலேயே ரூ. 60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படும் கார்களுக்கு இந்த வரி சலுகையில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மாநில போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார வாகன பதிவில் மட்டுமல்ல மற்ற மோட்டார் வாகன ஆவண பணிகளும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, வாகனங்களுக்கு உடல் தகுதி சான்று வழங்குவதில் பெருத்த சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக, இதனால் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் டிரக் உரிமையாளர்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து இருக்கின்றனர். குறிப்பாக, சென்னையில் உள்ள ஆர்டிஓக்களில் இதுபோன்ற இடையூறுகள் நடப்பது இந்த மாதத்தில் மூன்றாவது முறை என கூறப்படுகின்றது. இதனால், தின கூலிகளான ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக, சென்னையில் உள்ள கொளத்தூர், அண்ணா நகர் மற்றும் கேகே நகர் ஆகிய ஆர்டிஓ-க்களிலேயே இந்த சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. ஆட்டோ ஓட்டுநர்கள் நாள் முழுவதும் காக்க வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டதாகவும் பலர் வேதனை தெரிவித்து இருக்கின்றனர். இந்த பிரச்னையும் விரைவில் தீர்க்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வழிவகைச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு ஒட்டுமொத்த உலக நாடுகளும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இதே மாதிரியான பணிகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தமிழகத்தில் மின்சார கார்களை பதிவு செய்ய முடியாமல் அதன் உரிமையாளர்கள் புதுமையான சிக்கலில் சிக்கியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








