டாடா நிறுவனம் இப்படி நடக்கும்னு நிச்சயமா எதிர்பார்த்திருக்காது - ஹூண்டாய்க்கு இது சந்தேஷமான செய்தியாச்சே
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவின் 3வது பெரிய கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் மற்ற நிறுவனங்கள் அனைத்திற்கும் முன்னுதாரணமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 ஜூன் மாதத்தில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதும், வழக்கத்தை காட்டிலும் அது எவ்வளவு அதிகம் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த 2024 ஜூன் மாதத்தில் மொத்தம் 43,527 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் இது சுமார் 3,713 கார்கள் குறைவாகும். அதாவது, 7.86% குறைவாகும். ஏனெனில் 2023 ஜூன் மாதத்தில் 47,240 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

அதேபோல், 2024 மே மாதத்திலும் 46,700 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 3,173 கார்களை டாடா மோட்டார்ஸ் குறைவாக விற்பனை செய்துள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் காரான பஞ்ச், டாடா மோட்டார்ஸ் உருவாக்குவது ஆகும். அப்படியிருந்தும், கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவை டாடா மோட்டார்ஸ் கண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக விளங்கும் டாடா பஞ்ச் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 18,238 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த 18,238 பஞ்ச் கார்களில் பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன. அதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 10,990 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, 2023 ஜூன் மாதத்தை காட்டிலும் 2024 ஜூன் மாதத்தில் 7,248 பஞ்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனை செய்யப்பட்ட மொத்தம் கார்களில் பஞ்ச் கார்களின் பங்கு 41.90% ஆகும். கடந்த ஜூன் மாதத்தில் மட்டுமின்றி, கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்து வருகிறது.
பஞ்ச் காருக்கு அடுத்து கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக 2வது இடத்தில் நெக்ஸான் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 12,066 ஆகும். அதுவே 2023 ஜூன் மாதத்தில் 13,827 நெக்ஸான் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் நெக்ஸான் கார்களின் விற்பனை ஆனது 12.74% குறைந்துள்ளது.

நெக்ஸானுக்கு அடுத்து 3வது இடத்தில் டியாகோ உள்ளது. இந்தியாவின் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றான டாடா டியாகோ கடந்த மாதத்தில் மொத்தம் 5,174 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2023 ஜூன் மாதத்தில் 8,135 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்த்தால், டியாகோ கார்களின் விற்பனை ஆனது 36.40% குறைந்துள்ளது.
இந்த வரிசையில் 4வது இடத்தில் டாடா அல்ட்ராஸ் 3,937 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 2023 ஜூன் மாதத்தில் 7,250 அல்ட்ராஸ் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 5வது இடத்தில், விலையுயர்ந்த டாடா காராக விளங்கும் சஃபாரி 1,394 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இவை மட்டுமின்றி, கடந்த 2024 ஜூன் மாதத்தில் 1,371 டிகோர் கார்களையும், 1,347 ஹெரியர் கார்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மக்கள் அதிக பேரால் வாங்கப்படும் காராக பஞ்ச் தொடர்ந்து 4 மாதமாக முதலிடத்தை பிடித்து வருவது நிச்சயமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். ஆனால், அதேநேரம் பஞ்ச் காரை தவிர்த்து மற்றவை அனைத்தின் விற்பனையும் மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்து வருவது டாடா நிறுவனத்துக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









