டாடா ஷோரூமுக்கு வரும் மிடில்-கிளாஸ் கஸ்டமர்ஸ் வாங்குவது இந்த காரை தான்!! விலை குறைவா இருப்பதுதான் காரணம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் 3வது பெரிய நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாருதி சுஸுகி இருக்க, 2வது இடத்திற்கு ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. ஒரு சில மாதங்களில் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் முந்தி இருந்தாலும், பல மாதங்களில் டாடா மோட்டார்ஸ் 3வது இடத்தையே பிடித்துள்ளது.

கடந்த 2024 ஏப்ரல் மாதத்திலும் கார்கள் விற்பனையில் 3வது இடத்தையே டாடா மோட்டார்ஸ் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 47,885 கார்களை இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 1.86% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 47,010 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார் பஞ்ச் ஆகும். டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியாவிலேயே கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக பேரால் வாங்கப்பட்ட கார் டாடா பஞ்ச் ஆகும். கடந்த மார்ச் மாதத்தை தொடர்ந்து 2வது மாதமாக இந்தியாவின் நம்பர் ஒன் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்துள்ளது.

பெரும்பாலும், நம்பர் ஒன் இடத்தை மாருதி சுஸுகியின் கார்கள் தான் பிடிப்பது வழக்கம். ஆனால், கடந்த 2 மாதங்களாக பிரபலமான மாருதி சுஸுகி கார்களை முந்தி டாடா பஞ்ச் முதலிடத்தை தனதாக்கி அனைவரையும் ஆச்சிரியப்படுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 19,158 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2024 மார்ச் மாதத்தில் கூட 17,547 பஞ்ச் கார்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த ஏப்ரலில் 1,611 பஞ்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெறும் 10,934 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 75.21%, அதாவது 8,224 பஞ்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பஞ்ச் காருக்கு அடுத்து, டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் நெக்ஸான் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 11,168 ஆகும். ஆனால், 2023 ஏப்ரலில் 15,002 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இதற்கடுத்து 3வது மற்றும் 4வது இடங்களில் டாடா மோட்டார்ஸின் ஹேட்ச்பேக் கார்களான டியாகோ மற்றும் அல்ட்ராஸ் உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 6,796 மற்றும் 5,148 ஆகும். இதில் அல்ட்ராஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இவற்றிற்கு அடுத்து 5வது, 6வது மற்றும் 7வது இடங்களில் முறையே டிகோர் (2,153), ஹெரியர் (1,746) மற்றும் சஃபாரி (1,716) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்த முடியாவிடினும், பஞ்ச் கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மிகுந்த நம்பிக்கையை தரும். எலக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்படுவது பஞ்ச் கார்களின் விற்பனையை அதிகரிக்கிறது. இருப்பினும், பஞ்ச் கார்கள் விற்பனை எழுச்சி ஆனது நெக்ஸான் கார்கள் விற்பனையை குறைத்திருப்பதை கூறியே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications









