இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி கார்களுக்கு புக்கிங் தொடங்கியது.. மைலேஜ் லவ்வர்ஸ்க்கு செம்ம விருந்து!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விரைவில் இந்தியாவின் சிஎன்ஜி (CNG) கார் பிரிவில் இரண்டு ஏஎம்டி (AMT) ஆப்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவற்றிற்கான புக்கிங் பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்தியாவின் இந்த தேவையை மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா (Tata Motors) மற்றும் ஹூண்டாய் (Hyundai) உள்ளிட்ட நிறுவனங்களே தீர்த்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையிலேயே இந்த பிரிவில் கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது.

இந்த போட்டி களத்தை மேலும் அனல் பறக்கச் செய்யும் வகையிலேயே டாடா மோட்டார்ஸ் தற்போது தரமான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. அது தனது டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரண்டு கார் மாடல்களின் சிஎன்ஜி தேர்விலும் ஏஎம்டி ஆப்ஷனை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதுகுறித்த தகவல் சமீப சில நாட்களாகவே இணையத்தில் வலம் வந்த நிலையில் தற்போது, அந்த புதிய ஆப்ஷனுக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 21 ஆயிரம் முன் தொகையிலேயே டாடாவின் புதிய டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி (Tiago CNG AMT) மற்றும் டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி (Tigor CNG AMT) ஆகியவற்றிற்கு புக்கிங்குகள் தொடங்கி இருக்கின்றன.

இன்னும் ஒரு சில தினங்களே இந்த கார் விற்பனைக்கு வருவதற்கு உள்ளன. இந்த நிலையிலேயே இரண்டு கார் மாடல்களின் ஏஎம்டி ஆப்ஷனுக்கு புக்கிங்குகள் தொடங்கி இருக்கின்றன. டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி எக்ஸ்டிஏ, எஸ்இசட்ஏ பிளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ என்ஆர்ஜி ஆகிய ட்ரிம்களிலும், டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் ஆகிய ட்ரிம்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவற்றின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெகுவிரைவில் இதன் விலைகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதிகாரப்பூர்வ விற்பனைக்கான அறிமுகத்தின்போதே இதன் விலை மற்றும் இன்னும் பல முக்கிய விபரங்கள் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. சிறப்பம்சங்கள் விஷயத்தில் மட்டுமே இந்த தேர்வுகளுக்கு இடையே வித்தியாசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்சின் மற்றும் அதன் திறன் உள்ளிட்டவற்றில் அனைத்து ட்ரிம்களும் ஒரே மாதிரியானதாக இருக்கும். 1.2 லிட்டர் எஞ்சினே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 73.5 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் மைலேஜ் திறன் ஒரு கிலோவிற்கு 22 கிமீ முதல் 24 கிமீ வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்னும் புதிய ஏஎம்டி ஆப்ஷனின் மைலேஜ் விபரங்களை டாடா அறிவிக்கப்படவில்லை. இதுபற்றிய விபரமும் அறிமுகத்தின்போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சிஎன்ஜி ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களான மாருதி செலிரியோ, வேகன்ஆர், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் நியோஸ் சிஎன்ஜி கார்களுக்கு போட்டியாக டியாகோ சிஎன்ஜியிலும், மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி மற்றும் ஹூண்டாய் அவுரா சிஎன்ஜிக்கு போட்டியாக டிகோர் சிஎன்ஜியும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட சிஎன்ஜி கார்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் இதன் அறிமுக நாள் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









