டாடா கார்களை குறைந்த விலையில் வாங்கிய காலம் மலையேற போகுது! மிடில்-கிளாஸ் மக்களின் தலையில் பெரிய இடி!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பதை கூற வேண்டியதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் அளவிற்கு பிரம்மாண்டமான கார் உற்பத்தி நிறுவனம். இருப்பினும், 2025ஆம் ஆண்டை மற்ற கார் நிறுவனங்களை போன்று விலை அதிகரிப்புடன் டாடா மோட்டார்ஸ் துவங்கவுள்ளது. அதன்படி, டாடா கார்களின் விலைகள் எந்த அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளன என்பதையும், எந்தெந்த டாடா கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
புதிய 2025ஆம் ஆண்டை மாருதி சுஸுகி, மஹிந்திரா, மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்கவுள்ளன. எல்லா வருட துவக்கத்திலும் இது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றே. இந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் புதிய விலை அதிகரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2025 ஜனவரி முதல் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் கார்களின் விலைகளை 4% உயர்த்த உள்ளது. மஹிந்திரா அதன் கார்களின் விலைகளை 3% உயர்த்தவுள்ளது. அதேபோல், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கார்களின் விலைகளை 3% அதிகரிக்க உள்ளது. இந்த 3 சதவீத விலை அதிகரிப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அனைத்து கார்களிலும் அமல்படுத்த உள்ளது.
இதன்படி, டாடா எலக்ட்ரிக் கார்களின் விலைகளும் உயர்த்தப்பட உள்ளன. வழக்கம்போல், இந்த விலை அதிகரிப்பு கார்களை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து அதிகரித்துவரும் செலவையும், நாட்டின் பண வீக்கத்தையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காரணமாக சுட்டிக்காட்டி உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், டாடா மோட்டார்ஸின் இந்த விலை அதிகரிப்பானது 2025 ஜனவரி 1 முதல் அமலுக்குவர உள்ளது.

டாடா மோட்டார்ஸில் இருந்து தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்கள் என்றால், அவை நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6.13 லட்சமாக தற்சமயம் உள்ளன. புதிய ஆண்டில் கொண்டுவரப்படும் விலை அதிகரிப்புக்கு பிறகு நெக்ஸான் மற்றும் பஞ்ச் கார்களின் விலைகள் ரூ.8.24 லட்சம் மற்றும் ரூ.6.31 லட்சமாக உயர உள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த 2024ஆம் ஆண்டை அதன் புதிய பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் அறிமுகத்துடன் துவங்கியது. ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என 5 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.14.29 லட்சம் வரையில் உள்ளன.

இருப்பினும், இந்த வருடத்தில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்த முக்கியமான கார்கள் கர்வ் மற்றும் கர்வ் இவி ஆகும். டாடவின் புதிய கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்களான இவற்றின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.9.99 லட்சம் மற்றும் ரூ.17.49 லட்சமாக உள்ளன. இந்த இரு டாடா கார்களும் பாரத் என்சிஏபி-இல் 5 ஸ்டார்களை பெற்றுள்ளன.
டாடா மோட்டார்ஸில் இருந்து அடுத்ததாக வருகிற 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, சியார்ரா இவி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. அதன்பின், 2025ஆம் ஆண்டு இறுதியில் சியார்ரா பெட்ரோல்/ டீசல் காரை டாடா அறிமுகம் செய்ய உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெக்ஸான், பஞ்ச் கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தாலும், உண்மையில் டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில்தான், புதிய விலை அதிகரிப்பை டாடா மோட்டார்ஸ் கொண்டுவருகிறது. ஆதலால், இந்த நடவடிக்கையால் டாடா கார்கள் விற்பனை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எவ்வாறு எதிர்க்கொள்ள போகிறது என்பதை காண ஆவலாக உள்ளோம்.


Click it and Unblock the Notifications









