இன்னிக்கு தான் டாடா நிறுவனத்திற்கு தீபாவளியே! வேற லெவல் சாதனையை செஞ்சு அசத்திட்டாங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் என்ற சிறப்பாக விற்பனையாகவும் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தி 7 ஆண்டுகளுக்குள் 6 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இது குறித்து அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கார் அறிமுகமானது முதல் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக கார்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் சமீப காலமாக தரமான தயாரிப்புகளை வெளியிட்டுருவதால் இந்நிறுவனத்தின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் டாடா நெக்ஸான் என்ற ஒரு எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியது.

இந்த கார் இந்தியாவின் குறைந்த விலையில் உள்ள தரமான கார் என்ற பெயரை பெற்றதால் இந்த காருக்கு மக்கள் மத்தியில் மவுசுக்கூடியது. இந்நிறுவனம் பூனேவில் உள்ள தனது ஆலையில் இந்த காரை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்களை பெற்ற காராக இருக்கிறது.
டாடா நெக்ஸான் கார் தற்போது கம்பஷன் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட இரண்டு வெர்ஷன்களிலும் விற்பனையாகி வருகிறது. இந்த கார் வெளியாகி 7 ஆண்டுகளுக்குள் மூன்று மிகப்பெரிய அப்டேட்களை பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டு துவக்கத்தில் இந்த கார் மிகப்பெரிய அளவில் வெளிப்புற மாற்றத்தை அப்டேட் செய்தது. இந்நிலையில் சமீபத்தில் தான் சில மாதங்களுக்கு முன்னர் கடைசி அப்டேட் வெளியானது.
இந்த டாடா நெக்ஸான் கார் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் மூன்று லட்சம் கார்களை விற்பனை செய்து ஒரு புதிய மைல்கல் சாதனையை படைத்தது. அந்த மைல்கள் படைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் அடுத்த மூன்று லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. முதன் முதலாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தான் இரண்டு லட்சம் என்ற மைல்கல்லை இந்த கார் எட்டியது.
குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் ஃபோர்டு நிறுவனம் நடத்தி வந்த ஆலையை டாடா நிறுவனம் கைப்பற்றி சமீபத்தில் தான் அங்கு டாடா நெக்ஸான் இவி காரை தயாரித்து அறிமுகப்படுத்தியது. டாடா நெக்ஸான் கம்பஷன் இன்ஜின் காரை பொறுத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது.
அடுத்த இன்ஜின் ஆப்ஷனாக 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 116 பிஎஸ் பவரையும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பிரபலமான இன்ஜினாக இருக்கிறது.
இந்த காரின் அம்சங்களை பொருத்தவரை சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. மற்றும் பூட் ஸ்பேஸை பொருத்தவரை 350 லிட்டர் இடவசதி இருக்கிறது. முன்பக்கம் 10.25 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டிவுடன் உள்ளது. இது போக 10.25 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.
இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் தான் மிக முக்கியமான விஷயமாகவும் இந்த காரில் 6 ஏர்போக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், மல்டி லேயர் டேஷ்போர்டு, டச் கண்ட்ரோல் ஏசி, 2 ஸ்போக் ஸ்டேரிங் வீல் ஆகியன உள்ளன. இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்ற காராக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நெக்ஸான் காருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது. ஏகப்பட்ட நபர்கள் இந்த காரை வாங்குவதே ஒரு கனவாக வைத்திருக்கிறார்கள். இதனால் நீண்ட ஆண்டுகளாக இந்த சிறப்பான விற்பனையில் இருக்கிறது. தொடர்ந்து இது நல்ல விற்பனையில் இருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த மைல் கல் நிச்சயம் டாடா நிறுவனத்திற்கு மிகப்பெரிய சாதனைதான்.


Click it and Unblock the Notifications








