டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
டாடா (Tata) கார்கள் விற்பனை இந்திய மார்க்கெட்டில் சமீப காலமாக வெகுவாக அதிகரித்து வருவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில், சமீப காலங்களில் டாடா கார்கள் அதிக எண்ணிக்கைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் டாடா எஸ்யூவி கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
2017ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நெக்ஸானுக்கு ஆரம்பத்தில் நிறைய புக்கிங்குகள் குவிந்தன. ஆனால், அதன்பின் நெக்ஸான் கார்களின் விற்பனை குறைய ஆரம்பித்தது. அவ்வளவுதான், நெக்ஸான் கார்கள் உற்பத்தி முடிவுக்குவர உள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை சூடுப்பிடிக்க ஆரம்பித்தது.

இன்னும் சொல்ல போனால், கடந்த வருடங்களில் பல மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி காராக டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல், இந்தியாவின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனையிலும் டாப்-10 கார்களுள் ஒன்றாக நெக்ஸான் விளங்குகிறது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் மொத்தம் 1 லட்சத்து 71,697 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2023 ஏப்ரலில் துவங்கி கடந்த 2024 மார்ச்சில் முடிவடைந்த 2023-24ஆம் நிதியாண்டில் இத்தனை எண்ணிக்கைகளில் வேறெந்த எஸ்யூவி காரும் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. இதன் மூலமாக, இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி காராக டாடா நெக்ஸான் விளங்குகிறது. இந்த 2024ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் 45,635 நெக்ஸான் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் அதிகப்பட்சமாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுமார் 17,182 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சராசரியாக 14,000 - 14,500 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் குறைந்தப்பட்சமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெறும் 8,049 டாடா நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
2023-24ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மொத்தம் 78,975 டாடா நெக்ஸான் கார்களும், அதற்கடுத்த 6 மாதங்களில் 92,722 நெக்ஸான் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக கடந்த 6 மாதங்களில் நெக்ஸான் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை அறியலாம். நெக்ஸானை போன்று, டாடா மோட்டார்ஸின் மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான பஞ்ச்-இன் விற்பனையும் சமீப காலமாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி காராக டாடா நெக்ஸான் இருக்க, அதற்கடுத்த 2வது இடத்தை டாடா பஞ்ச் பிடித்துள்ளது. அதாவது, இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் முதல் 2 எஸ்யூவி கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையது ஆகும். கடந்த நிதியாண்டில் மொத்தம் 1 லட்சத்து 69,536 டாடா பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, நெக்ஸானை காட்டிலும் வெறும் 2 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே குறைவு.
நெக்ஸானை போல், கடந்த ஜனவரி மாதத்தில் டாடா பஞ்ச் கார்களும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அந்த ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் எந்தவொரு மாதத்திலும் 10 ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்படவில்லை. குறைந்தப்பட்சமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10,394 பஞ்ச் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 1 வருடத்தில் பஞ்ச் கார்களை காட்டிலும் நெக்ஸான் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தாலும், வரும் மாதங்களில் நெக்ஸானை காட்டிலும் பஞ்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்படலாம். ஏனெனில் விலையை பொறுத்தவரையில், நெக்ஸானை காட்டிலும் பஞ்ச் விலை குறைவானதாக உள்ளது. இந்த 2024ஆம் வருடத்தில் முதல் 3 மாதங்களிலும் நெக்ஸானை காட்டிலும் பஞ்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









