டாடாவின் இந்த காருமா அப்படி! எமனையே கூப்பிட்டு வச்சு வெறுப்பேத்தலாம் போலையே!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான மற்றும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் பஞ்ச் இவி (Punch EV)-யும் ஒன்றாகும். இந்த கார் மாடலே தான் ஒரு அதீத பாதுகாப்பு திறன்மிக்க வாகனம் என்பதை உறுதி செய்திருக்கின்றது. பாரத் என்சிஏபி (Bharat NCAP) சமீபத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை மோதலுக்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பு தரத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் வாயிலாகவே பஞ்ச் இவி மிக சிறந்த பாதுகாப்பு திறன்மிக்க கார் என்பது தெரிய வந்திருக்கின்றது.
ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. இதன் எரிபொருள் எஞ்சின் கொண்ட தேர்வும் இதுமாதிரியான அதிக பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. குளோபல் என்சிஏபி (Global NCAP) வாயிலாக நடத்தப்பட்ட மோதல் ஆய்வில் அது ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைக் குவித்தது கவனிக்கத்தகுந்தது.

டாடா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் பாதுகாப்பிற்கு பெயர்போனவையாக இருக்கின்றன. அவற்றின் வரிசையிலேயே தற்போது டாடா பஞ்ச் இவி ஒன்றாகும் இணைந்திருக்கின்றது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 31.46 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளையும் பஞ்ச் இவி பெற்றிருக்கின்றது.
இந்த மோதல் ஆய்விற்கு எம்பவர்டு பிளஸ் எஸ் லாங் ரேஞ்ஜ் (Empowered+ S Long Range) எனும் உயர்நிலை தேர்வே உட்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மதிப்பீடு என்பது அனைத்து வேரியண்டுகளுக்கும் பொருந்தும். இந்த கார் பயணிகளைப் பாதுகாப்பதில் மட்டுமே அதிக புள்ளிகளைப் பெறவில்லை. அது உறுதித் தன்மை விஷயத்திலும் அது அதிக மதிப்பெண்களையேப் பெற்றிருக்கின்றது.
அந்தவகையில், முன் பக்க உறுதித் தன்மைக்கான விஷயத்தில் 16 புள்ளிகளுக்கு 15.71 புள்ளிகளையும், பக்கவாட்டு பகுதிக்கு 16 புள்ளிகளுக்கு 15.74 புள்ளிகள் மதிப்பெண்ணையும் அது பெற்றிருக்கின்றது. இத்தகைய அதிகப்படியான புள்ளிகளின் காரணத்தினாலேயே பஞ்ச் இவி பாதுகாப்பு விஷயத்தில் மிக சிறந்தது என்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக பலதரப்பட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்டு சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பிளைண்ட் ஸ்பாட் வியூ மிர்ரர், மும்முனை பாயிண்ட் சீட் பெல்ட், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட், எஸ்ஓஎஸ் (SOS) வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் மோதல் ஆய்வில் 5க்கு ஐந்து ஸ்டார்களைக் குவித்திருக்கின்றது.
டாடா பஞ்ச்.இவி ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்மார்ட் (Smart), ஸ்மார்ட் பிளஸ் (Smart Plus), அட்வென்சர் (Adventure), எம்பவர்டு (Empowered) மற்றும் எம்பவர்டு பிளஸ் (Empowered Plus) ஆகியவையே அவை ஆகும். பேட்டரி பேக்கைப் பொருத்த வரை, 25 kWh பேட்டரி பேக் மற்றும் 35 kWh பேட்டரி ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.
இதில் முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 315 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது ஒன்று அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 421 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் கார் ரூ. 10.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் இந்த தயாரிப்புடன் சேர்த்து டாடா நெக்ஸான்.இவி-யையும் பாரத் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியிருக்கின்றது. அதுவும், இந்த ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றது. எனவே இந்தியாவின் மிக அதிக பாதுகாப்பான எலெக்ட்ரிக் கார்கள் என்பதை டாடாவின் இந்த தயாரிப்புகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








