புது டாடா பஞ்ச் கார் ரெடியாகிடுச்சு! விலை இவ்வளவு கம்மி தானா?
டாடா நிறுவனம் தனது பெட்ரோல் இன்ஜின் பஞ்ச் காரை ஃபேஸ்லிஃப்ட் செய்து இந்த ஆண்டு மத்தியில் அதாவது ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதில் என்னென்ன அப்டேட்டுகள் வரப்போகிறது என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
தற்போது டாடா ரசிகர்கள் மத்தியில் பஞ்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக டாடா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பஞ்ச் காரை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இந்த காரில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்கள் இடம் பெற உள்ளன. இந்நிலையில் இந்த காரின் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி டாடா நிறுவனம் இந்த பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் காரை 2024 ஆம் ஆண்டு மத்தியில், அதாவது அடுத்த ஒரு சில மாதங்களில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தும் என தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் குறித்த தகவல் தற்போது டாடா ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
டாடா நிறுவனம் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள தகவலின் அடிப்படையில் இந்நிறுவனம் ஏற்கனவே அப்டேட் செய்து வெளியிட்ட தனது பஞ்ச் இவி கார் போலவே இந்த காரிலும் முகப்பு பகுதியில் சில மாற்றங்கள் செய்துள்ளன. முக்கியமாக ஸ்பிரிட் ஹெட் லைட் செட்டப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், ஆகியன இந்த காரின் மாற்றங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் வெளிப்புற மாற்றங்கள் என்பது தனது நெக்ஸான், சஃபாரி, ஹாரியர் காரில் உள்ள தோற்றத்தைப் போல டாடா நிறுவனம் இந்த பஞ்ச் காரிலும் கொண்டு வந்துள்ளது. தற்போது உள்ள காரில் முன்பக்கம் முழு நீள எல்இடி லைட் பார் புதிய அப்டேட்டில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்கவாட்டு பகுதியிலும் பின்பகுதியிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் அலாய் வீல்கள் முற்றிலும் புதிய வடிவமைப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் உட்பகுதியை பொருத்தவரை பஞ்ச் இவி காரில் உட்புறம் என்னென்ன அப்டேட்கள் இருந்ததோ அதே அப்டேட்கள் தான் இந்த காரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் உள்ள அம்சங்களை பொறுத்தவரை 10.25இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25இன்ச் கொண்ட முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் இடம் பெறுகிறது.

இதுபோக இந்த காரின் உட்புறத்தில் ஏர் பியூரிஃபையர், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள், ஆட்டோமேட்டிக் ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல், சன்ரூஃப் அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை தற்போது உள்ள அதே இன்ஜின் தான் இருக்கும், எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே தான் இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் விபரங்களை பொறுத்தவரை 1.2லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 86எச்பி பவரையும், 113என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இதில் சிஎன்ஜி வேரியன்டும் விற்பனைக்கு வரும். இது 73.4எச்பி பவரையும், 103என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது.
சிஎன்ஜி வேரியன்டை பொறுத்தவரை மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே இடம்பெறும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. சிஎன்ஜி வேரியன்டில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை தற்போது மார்க்கெட்டில் உள்ள போட்டிய நிறுவனங்களின் கார்களுக்கு ஏற்பவே இதன் பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரின், 6 ஏர்பேக்குகள் ஆகியன இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 11 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம். மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஹூண்டாய் எக்ஸ்டர் என்ற காருக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் இந்த பஞ்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனுக்கு அதன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே இவிகாரில் உள்ள அப்டேட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதே அப்டேட்டை தனது பெட்ரோல் இன்ஜின் கார்களிலும் பொருத்துவதால் இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் டாடா பஞ்ச் காரின் விற்பனை தற்போது இருப்பதைவிட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பிறகு மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









