என்ன ஆச்சு இந்த நிறுவனத்துக்கு! கார் உற்பத்தியை குறைச்சுட்டாங்க! வேலை செய்யும் நேரத்தையும் குறைச்சுட்டாங்க..
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா என கூறும் அளவிற்கு மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கின்றது உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று. அது எந்த நிறுவனம்? என்ன மாதிரியான சிக்கலில் அது தற்போது சிக்கி இருக்கின்றது? இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லாவே மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கும் நிறுவனம் ஆகும். சிக்கலின் காரணமாக அந்த நிறுவனம் கார் உற்பத்தி பணியையே வெகுவாகக் குறைத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விற்பனைக் குறைந்த காரணத்தினாலேயே இந்த தீர்க்கமான முடிவை டெஸ்லா எடுத்திருக்கின்றது.

சீனாவில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையிலேயே கார் உற்பத்தி பணிகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. நிறுவனத்திற்கு சொந்தமான மிகப் பெரிய கார் உற்பத்தியாக சீனாவில் அமைந்திருப்பது இருக்கின்றது. சந்தையில் அதிகரித்து வரும் போட்டி மற்றும் புதுமுக நிறுவனங்களின் வருகையாலேயே இந்த நிலையை டெஸ்லா சந்தித்து இருக்கின்றது.
பொதுவாக நிறுவனத்தின் சீன கார் உற்பத்தி ஆலை வாரத்திற்கு ஆறரை நாட்கள் இயங்கும். ஆனால், இப்போது ஐந்து நாட்கள் மட்டுமே இயங்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான மாடல் ஒய் மற்றும் மாடல் 3 ஆகிய இரு முன்னணி எலெக்ட்ரிக் கார் மாடல்களின் உற்பத்தியையும் குறைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

இப்போது நாள் ஒன்றிற்கு 11.5 மணி நேரம் மட்டுமே ஆலை இயங்க அனுமதிக்கப்பட்டு இருக்கின்றது. நாள் ஒன்றிற்கு இரண்டு ஷிஃப்ட் வீதம் இயங்கும். இது வழக்கமான ஷிஃப்ட்களே ஆகும். ஆனால், கார் உற்பத்தி மட்டும் குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், முந்தைய இதே வேலை நேரத்தில் தயாரிக்கப்பட்டதைக் காட்டிலும் சற்று குறைவான எண்ணிக்கையிலேயே கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.
நிறுவனத்தின் சந்தை பங்கும் லேசாக சரிவைச் சந்தித்து இருக்கின்றது. வெள்ளிக்கிழமையின் தொடக்கத்தில் அது 3.9 சதவீத வீழ்ச்சியுடனேயே ஆரம்பித்தது. டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக பிஒய்டி நிறுவனம் பார்க்கப்படுகின்றது. ஆமாங்க, இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களே டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப் பெரிய சவாலை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
இதேபோல், உலக நாடுகள் சிலவற்றில் சீன தயாரிப்புகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பலர் அந்த நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் கார்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணத்தினாலும் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார் விற்பனைச் சரிவைச் சந்தித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் பயணிகள் வாகன பிரிவு மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியையேச் சந்தித்து இருக்கின்றது. 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களைவிட 17 சதவீத விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகன பிரிவு 37.5 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது. ஆனால், டெஸ்லா பிராண்டோ ஏற்றுமதியில் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. இதன் விளைவாகவே தற்போது கார் உற்பத்தி பணிகளும் குறைக்கப்பட்டு இருக்கின்றன.
நிறுவனத்தின் மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 498கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அமெரிக்காவில் இந்த கார் 36,490 டாலர்களுக்கு விற்கப்படுகின்றது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக 30.50லட்சம் ரூபாய் ஆகும். இதன் மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 548 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த கார் அமெரிக்காவில் 38,990 டாலர்களுக்கு (32.59 லட்சம் ரூபாய்க்கு) விற்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வெகு விரைவில் டெஸ்லா கால் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நம் நாட்டில் இந்த எலெக்ட்ரிக் கார்களின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், அதிகப்படியான வரி உள்ளிட்ட காரணங்களினால் அதன் வருகையில் தொய்வு ஏற்பட்டு இருக்கின்றது. தற்போது டெஸ்லா இந்தியா நுழைவதற்கு சாதகமான சூழல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே, இதன் வருகை நிச்சயம் விரைவில் அரங்கேறும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








