சீனாவிற்கு பயந்து இந்தியா வர பயப்படுகிறதா டெஸ்லா? அமைதிக்கான காரணம் இது தான்!
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருகை தரும் தருணம் தாமதமாகிவரும் நிலையில், இது குறித்து டெஸ்லா நிறுவனம் சமீப காலமாக வாயை திறக்காமல் எந்தவித பதிலும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இந்தியா வருவதற்கான பணிகள் எல்லாம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படியான சூழ்நிலை எழுவது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் உலகில் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளராக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். அதிக தரம் மற்றும் அதிக தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த கார்களாக இந்த கார்கள் எல்லாம் இருக்கின்றன. முக்கியமாக இந்நிறுவனம் தானியங்கியாக இயங்கும் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் சமீப ஆண்டுகளாக இந்தியாவில் கார் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறி உள்ளது, இதையடுத்து டெஸ்ட்டா நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்தால்தான் லாபகரமாக இருக்கும்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்தால் 100சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதுகுறித்து டெஸ்லா நிறுவனமும் மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு பாலிசி ஒன்றை வைத்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட நிபந்தனைக்கு ஒரு நிறுவனம் இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்தால் அந்த நிறுவனம் குறைவான இறக்குமதி வரியில் வாகனங்களை குறிப்பிட்ட காலத்திற்கு இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறை இருக்கிறது.

அப்படியாக வாகனங்களை குறைந்த இறக்குமதி வரியில் இந்தியாவிற்குள் கொண்டு வரும் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்த விதிமுறையின் கீழ் முதற்கட்டமாக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்றும் பின்னர் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்போம் ஏற்பட்டது.
இதற்காக முன்னேற்பாடு பணிகளை எல்லாம் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் இந்தியாவிற்கு வருவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது பிரதமர் மோடியையும் சந்திக்க போவதாக ஏற்பாடுகள் எல்லாம் நடந்த நிலையில் இறுதி கட்டமாக அவர் இந்திய வருகையை தள்ளிப் போட்டுள்ளார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய வருகையை தள்ளிப் போட்டது டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வரும் பணியை தொய்வடைய செய்துள்ளது. தற்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வருவது குறித்து எந்த விதமான பதிலும் அளிக்காமல் இருக்கிறது. இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவே அனைவரும் தற்போது தயாராக இல்லை என்ற சூழ்நிலை தான் நிலவி வருகிறது.
இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக சீனாவில் டெஸ்லா நிறுவனம் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் அந்நிறுவனம் ஆலை அமைத்தால் சீனாவில் உள்ள ஆலைக்கு பிரச்சனை ஏற்படும் என்ற சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம் என ஒரு பக்கம் கூறப்படுகிறது.
அதேநேரம் இந்தியாவில் நடந்துவரும் பொது தேர்தலும் ஒரு காரணமாக இருக்கலாம். பொது தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் பணியை முதலில் இருந்து துவங்க வேண்டும் என்பதால் பொது தேர்தல் முடிவுகள் வரும் வரை எந்த பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தலாம் என்ற முடிவை டெஸ்லா எடுத்து இருக்கலாம் எனவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.
பொது தேர்தல் தான் உண்மையான காரணமாக இருந்தால் வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு பதவியேற்கும் புதிய அரசை பொருத்து டெஸ்லா நிறுவனம் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது சீன பிரச்சினை தான் உண்மையான காரணமாக இருந்தால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருகை தருவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை விட கார் விற்பனையில் சீனா மிகப்பெரிய மார்க்கெட் என்பதால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விட சீனாவிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதை நேரம் இந்திய மார்கெட்டும் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இந்திய மார்க்கெட்டையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் டெஸ்லாவிற்கு இருக்கிறது. சர்வதேச அரசியலையும் சமாளித்து டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








