இந்தியாவிற்கு டெஸ்லா வருமா வராதா? ஏன் கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டுறாங்க? முழு விபரங்கள் இதோ
டெஸ்லா ஆலை இந்தியாவிற்கு வருவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. தொடர்ந்து டெஸ்லாவிற்கு இந்தியாவில் ஆலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இப்படியாக டெஸ்லா நிறுவனம் உள்ளே வருவதற்கு உள்ள சிக்கல்களை குறைக்கவும் அதே நேரம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கவும் மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியை குறைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் உலகில் மிக முன்னணி நிறுவனமாக இருப்பது டெஸ்லா. இந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவிற்குள் தன் காலடி தடத்தை எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியது. ஜப்பானை பின்னுக்கு தள்ளியது.

இந்தியாவில் உள்ள மக்கள் மத்தியில் ஆட்டோமொபைல் வாங்கும் திறன் என்பது அதிகமாகியுள்ளது. குறிப்பாக இவி செக்மெண்ட் மீது மக்கள் அதிக கவனம் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வாய்ப்பை டெஸ்லா நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. இதனால் இந்தியாவிற்குள் டெஸ்லா நிறுவனம் நுழைவதற்கு முயற்சி செய்யும்போது டெஸ்லா நிறுவனத்திற்கு இருக்கும் மிகப்பெரிய தடை இறக்குமதி வரி என்பதுதான்.
இந்தியாவில் முழுமையாக வெளிநாட்டில் கட்டமைக்கப்பட்ட காரை இறக்குமதி செய்ய 100% இறக்குமதி வரி செலுத்த வேண்டும் என்று விதிமுறை நடைமுறையில் இருக்கிறது. இது தொடர்பாக டெஸ்லாவிற்கும் மத்திய அரசுக்கும் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது ஆனால் இந்நிறுவனம் இறக்குமதி வரியை குறைக்க சொல்லி மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தற்போது இருக்கும் வரியுடன் இந்தியாவில் டெஸ்லா கார் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் ஒரு காருக்கு விலை ரூ33 லட்சம் வரை சென்று விடும். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ரூபாய் 40,000 அமெரிக்க டாலருக்கும் குறைவான விலையில் உள்ள கார்களுக்கு 60% மட்டுமே இந்தியா வரி விதிக்க வேண்டும் என கேட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க அதிகமான வரி விதிப்பை வைத்திருக்கிறது.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் ஆரம்ப காலத்திலாவது தங்களுக்காக வரியை குறைக்க வேண்டும் என கேட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை வெறும் 15 சதவீத வரியில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதிக்கும் பட்சத்தில் தங்கள் பெரிய அளவில் முதலீடு செய்து இந்தியாவில் ஆலையை அமைத்து வாகனங்களை தயாரிப்போம் என கேட்டு வருகிறது.

இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக நமக்கு தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு தற்போது இந்தியாவில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குறிப்பிட்ட தொகை முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்ற விதிமுறையின் கீழ் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைவான காலத்திற்கு மட்டும் குறைவான வாகன எண்ணிக்கைக்கு வரியை குறைப்பதற்காக சட்ட விதிமுறைகளை கொண்டு வர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
இதனால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு டெஸ்லா நிறுவனம் வெளிநாட்டு தயாரிக்கப்பட்ட காரை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து இந்திய மக்கள் மத்தியில் இந்த கார் எப்படியான வரவேற்பை பெறுகிறது மக்கள் இந்த கார் குறித்து என்ன நினைக்கிறார்கள். இதன் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதை கண்காணிக்கும்.
அதன் பின்னர் இந்தியாவில் இந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் கார்களை விற்பனை செய்ய முன்வரும் என எதிர்பார்க்கலாம். இதற்காக மத்திய அரசு பேங்க் கேரண்டியை எதிர்பார்க்கிறது. இந்த பேங்க் கேரண்டி குறித்த விவகாரம் தற்போது சிக்கலில் இருப்பதால் இது குறித்த பேச்சு வார்த்தைகள் மற்றும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் உலகில் உள்ள பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்து இந்தியாவில் தனது வாகனங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் வருவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆனால் இது எந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களை பாதிக்கும் என்பது நமக்கு தெரியவில்லை.
இதுவரை புதிய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சலுகை குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் இப்படியாக பாலிசி வழங்கினால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. தற்போது மஹிந்திரா மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை கொண்டு வந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்க வேண்டிய கட்டாயம் ஒரு பக்கம் இருந்தாலும் உள்ளூர் வாகன தயாரிப்பாளர்களையும் கைவிடக்கூடாது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்ய வரி சலுகை அளித்தால் உள்ளூர் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு மானியங்கள் வழங்குவது சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









