ஹலோ ஹலோ எங்க போறீங்க.. புது கார் வாங்க போறீங்களா? செப்டம்பர் வந்திரட்டும் கொஞ்சம் காத்திருந்து வாங்கிக்கோங்க!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை இந்திய வாகன உலகை அலங்கரிக்கும் விதமாக புதுமுக வாகனங்கள் தொடர்ச்சியாக விற்பனைக்குக் களமிறங்கிய வண்ணம் இருக்கின்றன. இந்த ஆகஸ்டு மாதத்தில்கூட ஏகப்பட்ட புதுமுக மற்றும் புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்கள் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. இதேபோல், அடுத்து வரும் மாதமான செப்டம்பர் மாதத்திலும் புதிய கார் மாடல்கள் சில அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அவற்றில் கட்டாயமாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் கார் மாடல்கள் சிலவற்றை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
குறிப்பாக, எந்தெந்த கார் மாடல் எந்த தேதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன? அவற்றின் சிறப்புகள் என்ன? மேலும், என்ன விலையில் அந்த கார்களை எதிர்பார்க்கலாம்? என்பது போன்ற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா கர்வ் (Tata Curvv): டாடா நிறுவனம் சமீபத்தில் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகத்தின்போதே எரிபொருளில் இயங்கும் வெர்ஷனை வருகின்ற செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. டாடா கர்வ் என பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் அந்த வாகனம் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி அன்றே அறிமுகம் செய்யப்பட உள்ளது.
லுக்கில் கர்வ் இவி மற்றும் கர்வ் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், அலங்கரிப்பில் மிகப் பெரிய மாற்றங்களை இவை இரண்டும் கொண்டிருக்கும். மேலும், இந்த காரில் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், இரண்டு விதமான பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்களே கர்வ் கார் மாடலில் டாடா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
1.2 லிட்டர, 3 சிலிண்டர் டர்போசார்ஜட் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டி-ஜிடிஐ எஞ்சின் ஆகியவையே அவை ஆகும். இதுதவிர, 1.5 லிட்டர் டர்போ டீசல எஞ்சினும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த கார் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் செப்டம்பர் 2 ஆம் அன்றே வெளியிடப்பட உள்ளன. விலையும் அன்றைய தினமே அறிவிக்கப்பட இருக்கின்றது. ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலையிலேயே இந்த வாகனம் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar): ஹூண்டாய் நிறுவனத்தின் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலாக இது இருக்கின்றது. இதற்கு அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் பொருட்டு ஹூண்டாய் நிறுவனம் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை நாட்டில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
செப்டம்பர் 9 ஆம் தேதி அன்றே இந்த காரின் அறிமுகம் அரங்கேற இருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கார் மாடல் பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், வெளிப்புறத்தைக் கவர்ச்சியா மாற்றக் கூடிய புதிய அலங்காரத்தை புதிய அல்கஸார் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுதவிர, சில புதிய வகை தொழில்நுட்பங்களையும் இந்த கார் மாடல் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது. லெவல் 2 வகை அடாஸ், இரண்டு 10.25 அங்குல திரைகள், பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள் ஆகியவை சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. இதுபோன்று அலங்கரிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் விஷயத்தில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட்டு இருக்காது என்பது கவனிக்கத்தகுந்தது.
எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV): எம்ஜி நிறுவனமும். இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூம் இணைந்து நாட்டில் செயல்பட தொடங்கியிருக்கின்றன. இந்த கூட்டணியைத் தொடர்ந்தே நாட்டில் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு புதிய தயாரிப்பை களமிறக்கும் பணியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே விரைவில் இந்தியாவில் விண்ட்ஸர் எனும் புதுமுக எலெக்ட்ரிக் கார் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதன் அறிமுகம் செப்டம்பர் 11 ஆம் தேதி அரங்கேற இருக்கின்றது. இந்த கார் மாடல் ஏற்கனவே இந்தோனேசியாவில் உலிங் கிளவுட் இவி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த கார் ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலைகள் மற்றும் இதில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது இப்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே இந்த கார் பற்றிய அனைத்து விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், இது இந்தியாவின் சியூவி ரக கார் பிரிவில் விற்பனைக்கு வர இருப்பதும், அதில் மிகப் பெரிய சன்ரூஃப் இடம் பெற இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. மேலும், பயணிகள் மட்டுமின்றி அதிக பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவான தயாரிப்பாகவும் இதனை எம்ஜி தயார் செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மாருதி சுஸுகி டிசையர் (Maruti Dzire): இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாருதி சுஸுகி டிசையர் கார் மாலின் அடுத்த தலைமுறை வெர்ஷன் உள்ளது. இந்தியாவில் சமீபத்திலேயே ஸ்விஃப்ட் கார் மாடலின் புதிய தலைமுறை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட அதிக மைலேஜ் திறன், புதிய சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றை தாங்கிய கார் மாடலாகவே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இதைப்போலவே அதிகம் சிறப்புகள் தாங்கிய ஓர் வாகனமாகவே புதிய டிசையரும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் அறிமுகமும் செப்டம்பர் மாதத்திலேயே அரங்கேற இருக்கின்றது. ஆனால், எந்த தேதி என்பது துள்ளியமாக தெரியவில்லை. விரைவில் நாள் பற்றிய விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2 லிட்டர், 3 சிலிண்டர், இ சீரிஸ் எஞ்சினே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே எஞ்சினே புதிய ஸ்விஃப்ட் காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேலே பார்த்த அனைத்து கார் மாடல்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவிக் கொண்டிருக்கின்றது. எதிர்பார்ப்பைப் போலவே விற்பனை வரவேற்பையும் இந்த கார் மாடல்கள் நாட்டில் பெறுமா என்பதை தெரிந்துக் கொள்ள நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








