தீபாவளியை நல்லா யூஸ் பண்ணியாச்சு! டொயோட்டா கார்களுக்கு கஸ்டமர்ஸ் வர்றதில்லைனு யாருங்க சொன்னா?
டொயோட்டா (Toyota), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் மற்றொரு ஜப்பானிய கார் நிறுவனமான சுஸுகி உடன் கூட்டணியில் உள்ளது. இதனால், இந்தியாவிலும் மாருதி சுஸுகி உடன் டொயோட்டா இணைந்து செயல்பட்டு வருகிறது. இதில் அதிக பயன் யாருக்கு என்றால், டொயோட்டாவுக்கு தான். இதனை வெளிக்காட்டும் வகையில், நடந்து முடிந்த கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் டொயோட்டா விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி உடன் இணைந்து செயல்படுவதன் மூலமாக டொயோட்டா கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மாருதியில் விற்பனை செய்யப்படும் பிரபலமான கார்களை அப்படியே நகல் எடுத்து டொயோட்டா தனது கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதாகும்.

இதனால், மாருதி சுஸுகி காரை வாங்க முடியாமல் போகும் கஸ்டமர்கள் அப்படியே டொயோட்டா பக்கம் வந்துவிடுகின்றனர். இதன் மூலமாக, கணிசமான இலாபத்தை இந்திய மார்க்கெட்டில் கண்டுவரும் டொயோட்டா, கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 845 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2023 அக்டோபர் மாதத்தை காட்டிலும் சுமார் 41% அதிகமாகும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், அந்த மாதத்தில் விற்கப்பட்ட டொயோட்டா கார்களில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலான கார்கள் இந்த ஆண்டு அக்டோபரில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 879 ஆகும்.

கடந்த அக்டோபர் மாதத்தில் டொயோட்டா விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கையான 30 ஆயிரத்து 845இல் உள்நாட்டில், அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை 28 ஆயிரத்து 138 ஆகும். மீதி, 2707 கார்கள் கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து டொயோட்டாவால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை ஆகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரையில் இந்த 7 மாத காலத்தில் மொத்தம் 1 லட்சத்து 93,468 கார்கள் டொயோட்டா இந்தியா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2023ஆம் ஆண்டில் இதே 7 மாதங்களில் 1 லட்சத்து 45,818 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், டொயோட்டா கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 33%, அதாவது 47 ஆயிரத்து 650 கார்கள் அதிகரித்துள்ளது.

இவ்வாறு கார்கள் விற்பனை அதிகரித்து வருவது குறித்து டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கான வணிக பிரிவு துணை தலைவர் சபரி மனோகர் கூறுகையில், "எங்களின் தயாரிப்பு வாகனங்கள் அனைத்தும் வலுவான விற்பனை வேகத்தை அனுபவித்துள்ளன. இது டொயோட்டாவில் நம் அனைவருக்கும் பண்டிகை மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றவர், தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பெஷல் எடிசன் கார்கள், விற்பனையில் பெரிதும் உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்தியாவில் டொயோட்டா கார்களுக்கு தேவை அதிகரித்து வருவதை அடுத்து, அதற்கேற்ப கார் உற்பத்தி பணிகளையும் அதிகரிக்கும் முயற்சியில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, டொயோட்டா தொழிற்சாலைகளில் 3 ஷிஃப்ட் முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் துணை தலைவர் கூறியதுபோல், டொயோட்டா கார்கள் விற்பனை அதிகரித்து இருப்பதற்கு ஸ்பெஷல் எடிசன் கார்களின் அறிமுகங்கள் மிக முக்கிய காரணம் ஆகும். கடந்த அக்டோபர் மாதத்தில் பார்த்திருந்தோம், வரிசையாக ஸ்பெஷல் எடிசன் மற்றும் லிமிடெட் எடிசன் கார்கள் தீபாவளியை முன்னிட்டு டொயோட்டாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டன.


Click it and Unblock the Notifications









