ஃபேக்ட்ரியில் இருந்து புது கார் நேரா உங்க கைக்கு வரும்!! இனி ஏமாத்து வேலைலாம் நடக்காது... டொயோட்டா அதிரடி!!
டொயோட்டா (Toyota) நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கார்களை தொழிற்சாலையில் இருந்து அப்படியே வழங்கும் விதமாக, பூஜ்ஜிய ஓடோமீட்டர் உடன் காரை வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அது என்ன என்பதையும், இந்த முயற்சி எந்த அளவிற்கு சரிப்பட்டு வரும் என்பதையும் பற்றி இனி பார்க்கலாம்.
டொயோட்டா இந்தியா நிறுவனம் புதியதாக கார் வாங்குபவர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக, கார் டெலிவிரியில் புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளது. 'அட்டகாசமான புதிய கார் டெலிவிரி தீர்வு' என்கிற பெயரில் டொயோட்டா கையில் எடுத்திருக்கும் இந்த முயற்சியில், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும் கார்களை ஷோரூம்களுக்கு லாரியில் கொண்டு செல்ல டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

பொதுவாக, கஸ்டமர்கள் ஆர்டர் கொடுக்கும் கார்கள் விலையுயர்ந்த கார்களாக இருந்தால், பெரிய கண்டெயினர் லாரிகளில் கொண்டுவரப்படும். ஆனால், விலை குறைவான கார்கள் சிவப்பு நம்பர் பிளேட் உடன் ஷோரூமுக்கு சாலையில் ஓட்டிக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் இருந்து அனைத்து கார்களையும் இவ்வாறு கொண்டு செல்வது கடினம்.
ஆதலால், விலை குறைவான கார்களை ஓர் குறிப்பிட்ட வளாகம் வரையில் லாரிகளை கொண்டுவருவர். பின் அங்கிருந்து டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு பிரித்து வழங்கப்படும் கார்களை சம்பந்தப்பட்ட ஷோரூம் ஊழியர்கள் சாலையில் டிரைவ் செய்தே கொண்டு செல்வர். இதனாலேயே, ஷோரூம்களில் புதிய கார்களின் வேகமானியில் சில கிமீ தொலைவிற்கு இயக்கப்பட்ட அளவீடு இருக்கும்.
ஆனால், தங்களது கார்களை புக் செய்யும் கஸ்டமர்களுக்கு பூஜ்ஜிய வேகமானி அளவுடன் காரை வழங்க டொயோட்டா புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. கார்கள் வாடிக்கையாளர்களின் கையில் பாதுகாப்பாகவும், அதே செயல்திறன் உடனும் சென்றடைவதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த முயற்சியை டொயோட்டா கையில் எடுத்துள்ளது.
முதற்கட்டமாக இந்தியாவின் 26 மாநிலங்களில் உள்ள 130 டீலர்ஷிப் மையங்களில் இந்த சேவையை டொயோட்டா அமல்படுத்தி உள்ளது. டொயோட்டாவின் இந்த புதிய முயற்சியின் கூடுதல் நன்மை என்னவென்றால், இவ்வாறு லாரிகளில் கொண்டு செல்லும்போது வாகனங்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக காப்பீட்டு நிறுவனங்களால் போக்குவரத்து காப்பீடு வழங்கப்படும்.
சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு லாரிகளில் கார்களை கொண்டு செல்வது சற்று சிரமமான காரியமாக உள்ள போதிலும், ஷோரூம்களுக்கு கார்கள் பாதுகாப்பாக சென்றடைவதை இந்த முயற்சி உறுதிப்படுத்தும் என்பதில் டொயோட்டா நம்பிக்கையாக உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா நிறுவனத்தின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த முயற்சி இருக்கும்.
இந்தியாவில் தற்சமயம் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து கிளான்ஸா, ரூமியன், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இன்னோவா கிரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ், ஹிலுக்ஸ், ஃபார்ச்சூனர், கேம்ரி, வெல்ஃபையர் மற்றும் லேண்ட் க்ரூஸர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 'அட்டகாசமான புதிய கார் டெலிவிரி தீர்வு' திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் இருந்து எந்தவொரு வாகனத்தையும் பூஜ்ஜிய ஓடோமீட்டரில் ஷோரூமுக்கு கொண்டு செல்வது முடியாத காரியம் ஆகும். ஆனால், டொயோட்டாவின் இந்த புதிய முயற்சி தொழிற்சாலையில் இருந்து கஸ்டமரை சென்றடைவதற்குள் இடையில் காரின் ஓடோமீட்டர் ஓடுவதை குறைக்கும். ஏற்கனவே கூறியதுபோல், லக்சரி கார்கள் இவ்வாறான முறையில்தான் ஷோரூம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதனை விலை குறைவான கார்களிலும் செயல்படுத்த டொயோட்டா முற்பட்டுள்ளது. பார்ப்போம், இது எந்த அளவிற்கு வொர்க் அவுட் ஆகும் என்று...


Click it and Unblock the Notifications








