டொயோட்டா இன்னோவா, ஃபார்ச்சூனர் கார்களின் தரத்துக்காக சொத்தையே எழுதி குடுக்கலாம்... எல்லாரும் முட்டி மோதறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா (Toyota). இதன் பிப்ரவரி (February) மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில், டொயோட்டா நிறுவனம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
டொயோட்டா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 25,220 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 23,300 ஆகும். அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 1,920 ஆகும்.

கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 61 சதவீத வளர்ச்சி ஆகும். ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 15,685 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகமில்லை.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் க்ளான்சா, ரூமியான், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இன்னோவா க்ரிஸ்ட்டா, இன்னோவா ஹைக்ராஸ், ஹைலக்ஸ், ஃபார்ச்சூனர், லெஜண்டர், கேம்ரி, வெல்ஃபையர் மற்றும் லேண்ட் க்ரூஸர் 300 உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதில், க்ளான்சா, ரூமியான் ஆகியவை முறையே மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா ஆகியவற்றின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்கள் ஆகும். அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார்தான், டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மாருதி சுஸுகி எர்டிகா கார்தான், டொயோட்டா ரூமியான் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
சுஸுகி நிறுவனத்துடன் டொயோட்டா நிறுவனம் செய்து கொண்டுள்ள கூட்டணிதான் இதற்கு காரணம். சொல்லப்போனால் இந்த கூட்டணி, டொயோட்டா நிறுவனத்திற்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு, டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேற உள்ளதாக எல்லாம் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் அப்படிப்பட்ட இக்கட்டான சூழல்களை எல்லாம் கடந்து, டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமான ஒரு வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஒரு வகையில் சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியும் இதற்கு காரணம் என்றால் மிகையல்ல.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை. டொயோட்டாவின் தரத்திற்கு நிகர் டொயோட்டாவேதான். இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் டொயோட்டா நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்குகின்றனர். வரும் காலங்களில் டொயோட்டா நிறுவனம் விற்பனையில் இன்னும் புதிய உச்சங்களை தொடலாம்.


Click it and Unblock the Notifications








