நாம இந்த பணத்த சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்போம்.. வரி என்கிற பெயரில் இவ்ளோ ரூபாயை காருக்காக கட்டுறோமா!
புதிதாக கார் வாங்க வேண்டும் என்கிற கனவில் இருப்பவரா நீங்க?.. ஒரு காரை வாங்கப் போகும்போது அரசுக்கு மட்டும் எவ்வளவு ரூபாய் வரியாக செலுத்தனும்னு உங்களுக்கு தெரியுமா?.. இது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ரூ. 8 லட்சத்தை விலையாகக் கொண்ட காரையே உதாரணமாகக் கருத்தில் கொண்டு இந்த பதிவை தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது, நீங்கள் வாங்க விரும்பும் காரின் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 8 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது என வைத்துக் கொள்வோம்.
இந்த காருக்கு எவ்வளவு ரூபாய் ஜிஎஸ்டி (GST), செஸ் (Cess), சாலை வரி (Road Tax), இன்சூரன்ஸ் (Insurance) மற்றும் இன்சூரன்ஸுக்கான வரி (Insurance Tax) உள்ளிட்டவை வசூலிக்கப்படும் என்கிற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் புதிதாக கார் வாங்குவது என்பது பார்க்க வேண்டுமானால் சுலபமாக தெரியலாம், ஆனால், உண்மையில் அது அவ்வளவு சுலபமானது அல்ல. காருக்கா செலுத்தக் கூடிய தொகையில் பெரும் பகுதி வரியாகவும் பிற செலவிற்காகவும் செலுத்த வேண்டியிருக்கின்றது. குறிப்பாக, புதிய வாகனத்தை வாகன லோன் திட்டத்தின்கீழ் வாங்கும்போது, டவுன் பேமென்ட், மாதாந்திர இஎம்ஐ மற்றும் காப்பீட்டு செலவு என மிகப் பெரிய தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
இதுதவிர, கூடுதலாக எரிபொருளுக்காகவும் பெருந்தொகையைச் செலவிட வேண்டியிருக்கின்றது. அதிலும், எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரி என்பது வாகன உரிமையாளர்கள் பலருக்கு இப்போதும் வயிற்றைக் கலக்கக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்கும் வரியாக மட்டுமே 50 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வரியாக ஒவ்வொரு இந்தியரும் அரசுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
ஆமாங்க, புதிதாக காரை வாங்கிய பின்னரும் ஒவ்வொரு முறையும் எரிபொருளை நிரப்பும் போதும் மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்கு வரியைச் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அந்தவகையில், சுமார் 57 ரூபாய் வரை ஒரு லிட்டருக்கு வரியாக இந்திய வாகன உரிமையாளர்கள் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
சரி இதைவிடுங்க, 8 லட்ச ரூபா காருக்காக எவ்வளவு ரூபாய் வரியாகவும், பிற கட்டமாகவும் நாம் செலுத்துகின்றோம் என்பதைப் பார்க்கலாம். நீங்கள் வாங்கும் காரின் விலை உதாரணமாக ரூ. 8 லட்சம் எனில் அதற்கு ஜிஎஸ்டி வரியாக 28 சதவீதம் வசூலிக்கப்படுகின்றது.
அதாவது, 8 லட்ச ரூபாய் காருக்கு 28 சதவீதம் என்றால் ரூ. 2.24 லட்சம் மட்டும் வரியாக தனியாக செலுத்த வேண்டும். இத்துடன் சேர்த்து 1 சதவீதம் செஸ் வரியாக வசூலிக்கப்படுகின்றது. இது ரூ. 8 ஆயிரம் ஆகும். இதுதவிர, சாலை வரியாக ரூ. 52 ஆயிரமும், இன்சூரன்ஸுக்காக ரூ. 45 ஆயிரமும் மற்றும் இன்சூரன்ஸுக்கான வரியாக ரூ. 8,100-ம் செலுத்த வேண்டும்.
இந்த வரி 18 சதவீதம் ஆகும். இவை அனைத்தையும் சேர்த்தால் இன்சூரன்ஸ் இல்லாமல் வரியாக மட்டும் நாம் அரசுக்கு ரூ. 2.92 லட்சம் வரை 8 லட்ச ரூபா காருக்காக செலுத்த வேண்டியிருக்கின்றது. ஆன்-ரோடில் இன்சூரன்ஸுடன் சேர்த்தால் இந்த 8 லட்ச ரூபாய் காரின் விலை ரூ. 11.37 லட்சமாக இருக்கும்.
இத்தகைய அதிக வரியையே ஒவ்வொரு நபரும் இந்தியாவில் புதிய காரை வாங்கும் கூடுதலாக அரசுக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றோம். நாம் மேலே பார்த்தது 4 மீட்டர் நீளம் கொண்ட 1200 சிசி-க்கும் குறைவான திறனை வெளியேற்றக் கூடிய பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி கார்களுக்கான வரியாகும்.
மற்ற பிரிவில் விற்கப்படும் வாகனங்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. 4மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட 1200சிசி-க்கும் குறைவான திறனை வெளியேற்றும் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி கார்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் செஸ் என சேர்த்து 43சதவீதம் வரை வரியாக வசூலிக்கப்படுகின்றது. அதிகபட்ச வரியாக 4 மீட்டர் நீளம் மற்றும் 170மிமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்ட, 1500சிசி டீசல் எஞ்சின் கார்களுக்கு 50சதவீதம் வரி வசூலிக்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய அதிக வரியை புதிய கார்களுக்கு வசூலிப்பதனால்தான் இந்தியர்கள் பலர் புதிய கார்களுக்கு பதிலாக யூஸ்டு மார்க்கெட்டில் தங்களுக்கான வாகனங்களைத் தேர்வுச் செய்துக் கொண்டிருக்கின்றனர். இங்கு கார்களை வாங்கும்போது பெரிய அளவில் தொகையை மிச்சப்படுத்த முடியும். இதனால்தான் இந்தியாவில் யூஸ்டு கார் மார்க்கெட்டும் மிகப் பெரிய அளவில் வளர்ந்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








