6.5 லட்சம் கார்களை வாங்க ஆளே இல்லை!ஷோரூம் எல்லாம் காத்து வாங்குது! ஆஃபர்களை அள்ளி வீசுறாங்க! என்ன நடந்தது?
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பயணிகள் வாகனங்களின் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக டீலர்ஷிப்களில் இருக்கும் ஸ்டாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்புகளில் மட்டும் 6 முதல் 6.5 லட்சம் வரையிலான கார்கள் விற்பனையாகாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வாகன விற்பனை என்பது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு குறியீடாக இருந்து வருகிறது. அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இந்தியாவில் விற்பனையானால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என அர்த்தம். மக்கள் மத்தியில் அதிக பணப்புழக்கம் ஏற்படும் போதுதான் வாகனங்களின் விற்பனை என்பது அதிகரிக்கும்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மே மாதம் வெளியான ரிப்போர்ட்டின் படி மொத்தம் 4 லட்சம் கார்கள் விற்காமல் டீலர்ஷிப்பிடம் ஸ்டாக்கில் இருந்துள்ளது. தற்போது இந்த ஸ்டாக் எண்ணிக்கை 6 முதல் 6.5 லட்சமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படியாக ஸ்டாக்கில் விற்காமல் இருக்கும் ஒரு காருக்கு சராசரியாக விலை ரூ9.5 லட்சம் என மதிப்பிட்டால் மொத்தம் ரூபாய் 60 ஆயிரம் கோடி மதிப்பிலான கார்கள் விற்காமல் ஸ்டாக்கில் இருக்கிறது. இப்படியாக இந்தியாவில் பயணிகள் கார்களின் விற்பனை சரிவடைந்ததற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் கடும் வெயிலின் தாக்கம் இருந்தது.

இது கார் விற்பனை குறைய மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இது போக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை பொது தேர்தல் காலமாக இருந்தது. இந்த பொது தேர்தல் காலங்களில் பணப்புழக்கத்திற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் இருந்ததால் வாகன விற்பனை இந்த காலத்தில் வெகுவாக குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் வங்கிகள் வாகன கடன் வழங்குவதில் பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்கள்.
புதிதாக வாகனம் வாங்கும் பலர் வங்கி கடன் மூலமாக வாகனங்களை வாங்க விரும்புகிறார்கள். தற்போது வங்கிகள் வாகன கடன் வழங்குவதில் சில புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சிலர் வாகனம் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் வாகன விற்பனை குறைய மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

இந்த சரிவு காரணமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது வாகனங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஏகப்பட்ட தள்ளுபடிகளையும், எக்சேஞ்ச் ஆஃபர்களையும் அறிவித்து வருகிறார்கள். இதன் மூலம் பல வாடிக்கையாளர்களை ஈர்க்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். முக்கியமாக எஸ்யூவி காரர்களுக்கு அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் மொத்தம் 3.41 லட்சம் வாகனங்கள் வாகன தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு டீலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் டீலர்கள் வெறும் 2,81,600 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து பதிவு செய்துள்ளார்கள். இதன் மூலமே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் வாகனங்களை டீல்ஷிப்புகளால் முழு அளவில் விற்பனை செய்ய முடியவில்லை என்பது தெரிகிறது.
தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவிலான சப்ளை இருக்கிறது. ஆனால் அதை வாங்கும் அளவிற்கு மார்க்கெட்டில் டிமாண்ட் இல்லை. இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனம் கூட கடந்த மாதம் 8 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவிலிருந்து மீண்டுவர ஏகப்பட்ட தள்ளுபடிகள் டீலர்ஷிப்புகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஷோரூம்களை அதிக நேரம் திறந்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன டீலர் அசோசியேஷன் தரப்பில் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த ஜூன் மாதம் மட்டும் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த விற்பனையை ஒப்பிடும்போது 6.77 சதவீதமும் கடந்த மே மாத விற்பனை ஒப்பிடும்போது 7.18 சதவீதமும் விற்பனை சரிவடைந்துள்ளது தெரிகிறது. ஷோரூம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதையும் மீறி ஷோரூம் வரும் வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் கார் வாங்கும் திட்டத்தை தள்ளிப் போடும் முடிவை அதிகம் எடுக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மாருதி, ஹூண்டாய், டாடா, கியா, ஸ்கோடா, ஹோண்டா, எம்ஜி மோட்டார், ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் எஸ்யூவி 3எக்ஸ்ஒ காரை அறிமுகப்படுத்தியதால் அந்நிறுவனத்தின் விற்பனையில் முன்னேற்றத்தை பெற்றுள்ளது. இதுபோக டொயோட்டா நிறுவனமும் கடந்த ஜூன் மாதம் அதிக அளவிலான விற்பனையை பெற்றுள்ளது. சொகுசு கார் செக்மெண்ட் முழுவதுமாக வீழ்ச்சியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன விற்பனை என்பது மிக முக்கியமான ஒரு குறியீடாக பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டில் விற்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை மிக முக்கியமானதாகும். வாகன விற்பனை அதிகரிக்க, அதிகரிக்க நாடு வளர்ச்சி அடையும் தற்போது வாகனங்கள் விற்பனை குறைந்தது பற்றி அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









