இதுக்கப்பறம் டீசல் கார் உற்பத்தி கிடையாது.. கடைசி காரையும் மியூசியத்துக்கு அனுப்பிட்டாங்க..
கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று டீசல் கார்களை இதற்கு பின்னர் தயாரிக்கப் போவதில்லை என்றும், கடைசியாக தயாரிக்கப்பட்ட விலைமதிப்பற்ற அல்லது அரிய டீசல் கார் மாடலாக கருதப்படும் அந்த காரைகூட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த அந்நிறுவனம் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று வால்வோ. இந்த நிறுவனமே அதன் கடைசி டீசல் எஞ்சின் கொண்ட கார் மாடலை தயாரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசி டீசல் எஞ்சின் என்றால், இதற்கு பின்னர் வால்வோ நிறுவனம் டீசல் எஞ்சின் கொண்ட வாகனங்களை தயாரிக்காதா என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பியிருக்கலாம். சந்தேகமே வேண்டாம், நிறுவனம் முழுமையாக டீசல் எஞ்சின் கொண்ட வாகன உற்பத்தியை கை கழுவி இருக்கின்றது.

இது நிறுவனத்தால் எடுக்கப்பட்ட திடீர் முடிவு அல்ல பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுக்கப்பட்ட முடிவாகும். நிறுவனம் முழுவதுமாக உள் எரிப்பு எந்திரம் கொண்ட வாகனங்களின் உற்பத்தியை கைவிட இருக்கின்றது. இதன் முதல்கட்டமாகவே வால்வோ தற்போது டீசல் எஞ்சின் கார்களின் உற்பத்தியைக் கைவிட்டு இருககின்றது. மேலும், அது தயாரித்த கடைசி டீசல் எஞ்சின் கொண்ட கார் மாடலையம் அது மக்களின் பொது பார்வைக்குக் காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றது.
நிறுவனம் அதன் கடைசி டீசல் எஞ்சின் கொண்ட கார் மாடலாக எக்ஸ்சி90 ஸ்போர்ட் கார் மாடலையே தயார் செய்திருக்கின்றது.இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடலாகும். சுவீடன் நாட்டில் உள்ள டோர்ஸ்லேண்டா எனும் உற்பத்தி ஆலையில் வைத்தே தனது கடைசி டீசல் கார் மாடலை தயாரித்து வெளியேற்றி இருக்கின்றது, வால்வோ.

நிறுவனம் முழுமையாக மின்சார கார் உற்பத்தியை மட்டுமே மேற்கொள்ள இருக்கின்றது. 2030 ஆம் ஆண்டிலேயே அது முழுமையான மின்சார கார் உற்பத்தியாளராக மாற இருக்கின்றது. இதற்கே நிறுவனம் தொடக்க புள்ளியை வைத்திருக்கின்றது. டீசல் கார் உற்பத்தி நிறுத்தத்தால் தங்களின் நிறுவனம் எந்தவொரு வீழ்ச்சியையும் சந்திக்காது என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்து இருக்கின்றது.
இதற்கு ஈடு செய்யக் கூடிய தயாரிப்புகள் தங்களிடம் இருப்பதாகவும் வால்வோ கார் ஏபி நிறுவனத்தின் மூத்த அதிகாரி எரிக் செவரின்சன் கருத்து தெரிவித்து இருக்கின்றார். வால்வோ நிறுவனம் மட்டுமில்லைங்க விரைவில் உலக நாடுகளில் இன்னும் பல முன்னணி நிறுவனங்களும் டீசல் கார் உற்பத்தியைக் கைவிட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே இந்த நடவடிக்கையை கையில் எடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆமாங்க நிறுவனம் தற்போது முழுவதுமாக டீசல் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்களை மட்டுமே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இன்னும் சில முன்னணி நிறுவனங்கள் விரைவில் டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக அறிவித்து இருக்கின்றன.
வால்வோ நிறுவனம் ஏற்கனவே ஹைபிரிட் மற்றும் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், நிறுவனத்தின் முக்கிய சந்தையான ஐரோப்பாவில் டீசல் கார்களுக்கான வரவேற்பு மிகப் பெரிய அளவில் குறைந்துக் காணப்படுகின்றது. இதுபோன்ற சூழலும் நிறுவனம் டீசல் கார்களை வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமாக இருக்கின்றது.
தற்போது கடைசியாக தயாரிக்கப்பட்டு இருக்கும் வால்வோ எக்ஸ்சி90 காரை நிறுவனம் அதற்கு சொந்தமான வால்வோ அருங்காட்சியகத்திலேயே காட்சிப்படுத்த இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் அடுத்த மாதமே கோதன்பர்க்-இல் திறக்கப்பட்ட இருக்கின்றது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடலுக்கு மாற்றாக எக்ஸ்90 எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோவை போலவே விரைவில் டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் முழுக்க முழுக்க மின்சார வாகனங்களையே முதன்மையான தயாரிப்பாக உற்பத்தி செய்ய இருக்கின்றன. ஆகையால், விரைவில் பெட்ரோல், டீசல் கார்கள் விற்பனைக்குக் கிடைக்காத சூழல் இந்த உலகில் அரங்கேறும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.


Click it and Unblock the Notifications









