இப்ப விக்கிறதுலாம் ஒரு காரானு கேப்பீங்க.. ஜியோமி முதல் மின்சார கார் அவ்ளோ தரமா இருக்கு.. விலையும் அதிகம் இல்ல!
ஜியோமி (Xiaomi) நிறுவனத்தின் கை வண்ணத்தில் உருவாகி இருக்கும் முதல் மின்சார காரின் விலை பற்றிய விபரத்தை அந்நிறுவனத்தின் சிஇஓ வெளியிட்டு இருக்கின்றார். அந்த காரின் விலை என்ன? மற்றும் சிறப்புகள் என்ன? இதுபோன்ற முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
பிரபல ஸ்மார்ட்போன் (SmartPhone) தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, தன்னுடைய பார்வையை மின்சார வாகனங்களின் (EV) பக்கம் திருப்பி இருக்கின்றது. வீட்டு உபோயகப் பொருட்களைத் தொடர்ந்து நிறுவனம் அதன் ஆதிக்கத்தை எலெக்ட்ரிக் வாகன பிரிவிலும் செலுத்தும் விதமாக முதல் இ-காரை அது விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

எஸ்யூ7 (SU7) எனும் எலெக்ட்ரிக் காரையே அது இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடல் ஆகும். முதலில் தன்னுடைய தாயகமான சீனாவிலேயே இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது ஜியோமி.
இந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்றே அதிகாரப்பூர்வமாக ஜியோமி எஸ்யூ7 அறிமுகம் செய்ய இருக்கின்றது. மேலும், இம்மாத இறுதிக்குள்ளேயே அந்த காரை டெலிவரி வழங்கும் பணிகளையும் தொடங்க இருப்பதாக ஜியோமி தெரிவித்து இருக்கின்றது. அதேநேரத்தில், ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன.
மேலும், இந்த காரை ஷோரூம்களில் காட்சிப்படுத்தவும் ஜியோமி தொடங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது அதன் விலை எவ்வளவு இருக்கும் என்கிற விபரத்தை அறிவித்து இருக்கிறார் ஜியோமி நிறுவனத்தின் சிஇஓ. 5 லட்சம் யுவான்களுக்கும் குறைவாகவே ஜியோமியின் முதல் எலெக்ட்ரிக் கார் விலையைக் கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கின்றார்.
அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 57.91 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே ஜியோமியின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான எஸ்யூ7 விற்பனைக்கு வர இருக்கின்றது. ஜியோமி இந்த காரில் வழங்கி இருக்கும் சிறப்பம்சங்களுக்கும், நவீன தொழில்நுட்பத்திற்கும் இந்த விலை அவ்வளவு அதிகம் இல்லை என்கிற கருத்து பரவலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
ஜியோமி இந்த எலெக்ட்ரிக் காரை ஸ்மார்ட்டான காராகவும், சுலபமாக இயக்கும் வசதிக் கொண்டதாகவும் தயார் செய்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. தன்னுடைய ஸ்மார்ட்போன் தயாரிப்பு அனுபவத்தை எலெக்ட்ரிக் கார் உற்பத்தியிலும் கையாண்டிருக்கின்றது. எனவே இப்போது விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் கார்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் அட்வான்ஸ்டு அம்சங்கள் பலவற்றை ஜியோமி எஸ்யூ7 தனக்குள் தாங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்பீடு அல்ட்ரா (Speed Ultra) என்பதன் சுருக்கெழுத்தே எஸ்யூ ஆகும். இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டெஸ்லா நிறுவனத்திற்கு இன்னும் மிகப் பெரிய போட்டியாக அது மாறும். ஏற்கனவே, பிஒய்டி எனும் சீன எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனத்தால் இந்த பிராண்டு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
நிறுவனம் மிகப் பெரிய விற்பனை வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக சீனாவில் உள்ள கார் உற்பத்தி ஆலையில் கார் உற்பத்தி செய்யும் பணிகளின் வேகம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, குறைவான எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.
இத்தகைய சிக்கலில் டெஸ்லா நிறுவனம் சிக்கியிருக்கின்ற இந்த சூழலிலேயே ஜியோமி அதன் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. ஜியோமி எஸ்யூ7 எலெக்ட்ரிக் கார் இண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
இதில் ஒன்று அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 668 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது ஒன்று ஓர் முழு சார்ஜில் 800 கிமீ ரேஞ்ஜையும் வழங்கக் கூடியதாக இருக்குமாம். இது டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டெஸ்லா மாடல் எஸ் ஓர் முழு சார்ஜில் 650 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும். ரேஞ்ஜ் தருவதில் மட்டுமல்ல கார் இணைப்பு விஷயத்திலும் வேற லெவல் அனுபவத்தை வழங்கும் வகையிலேயே எஸ்யூ7 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஜியோமி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை சீனாவின் பெய்ஜிங்கில் அமைந்திருக்கின்றது.
இந்த ஆலை ஆண்டு ஒன்றிற்கு 2 லட்சம் யூனிட் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது. 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டிலேயே ஜியோமி எலெக்ட்ரிக் கார் வர்த்தக பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. ஜியோமி நிறுவனம் சீனா முழுவதும் 59 ஸ்டோர்களை 29 நகரங்களில் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வருமா என்பது தெரியவில்லை. நிறுவனத்தின் செல்போன்களைப் போலவே இதுவும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த நிகழ்வு அரங்கேற இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








