காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
சீனாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய பறக்கும் எலெக்ட்ரிக் காருக்கான டிசைனுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது. அது எந்த நிறுவனம்? என்ன மாதிரியான பறக்கும் காரை அந்நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது? அதன் தனிச் சிறப்புகள் என்ன என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் எக்ஸ்பெங் (XPeng)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே தன்னுடைய பறக்கும் எலெக்ட்ரிக் காருக்கான டிசைனுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது. எக்ஸ்பெங் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகின்றது ஏரோ எச்டி (AeroHT).

இது ஓர் பறக்கும் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே விரைவில் அதன் பறக்கும் எலெக்ட்ரிக் கார்களை வர்த்தக பணிகளில் ஈடுபடுத்த இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது ஏரோ எச்டி நிறுவனத்தின் பறக்கும் எலெக்ட்ரிக் காரின் டிசைனுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பறக்கும் கார் எக்ஸ்3-எஃப் (X3-F) எனும் குறி பெயர் (Code Name)-இல் அறியப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்போது மாற்று பெயருடனேயே அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பறக்கும் காரை எக்ஸ்பெங் நிறுவனம் முதன் முதலில் '1024' எனும் நிகழ்ச்சியிலேயே காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. முதலில் பறக்கும் காரை சீனாவிலேயே பயன்பாட்டிற்கு களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றது எக்ஸ்பெங். இதற்கான பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பறக்கும் கார் வெறும் பறக்கும் காராக மட்டுமே இருக்காது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இதனை சாலையில் வைத்தும் ஓட்டிக் கொள்ளவும் முடியும். ஆகையால், ஒரே வாகனம் பறக்கும் கார் மற்றும் சாலையில் ஓடும் கார் என இரண்டாகவும் செயல்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், பறப்பதற்கான யூனிட் தனியாக இந்த காரில் வழங்கப்பட இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதில் ஓரே நேரத்தில் இரண்டு பேர் பறக்க முடியும். இதனால் செங்குத்தாக பறத்தல் மற்றும் லேண்டிங் ஆகியவற்றை செய்துக்கொள்ள முடியும். எனவே இது பறப்பதற்கு ஓடு தளம் தேவைப்படாது. இத்தகைய அதிசயிக்கத்தக்க அம்சங்களைத் தாங்கிய காரையே விரைவில் உற்பத்தி செய்ய இருக்கின்றது எக்ஸ்பெங்.
2025 ஆம் ஆண்டிற்குள் இதன் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. தற்போது இந்த வாகனத்தை பறக்கும் வாகனம் என்பதற்கான சான்றை சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் (Civil Aviation Administration of China) வழங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக எக்ஸ்பெங்-இன் பறக்கும் கார் வானில் பறக்க இனி எந்த தடையும் இல்லை.
இப்போது வெளியாகி இருக்கும் படங்களை வைத்து பார்க்கையில் எக்ஸ்3-எஃப் ஆறு வீல்களைக் கொண்டிருக்கும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இந்த ஆறு வீல்களும் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆனால், இதன் ரேஞ்ஜ் விபரம்? ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எத்தனை கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் மற்றும் பறக்க முடியும் என்கிற விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.
விரைவில் இதுபற்றிய தகவல்களை நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாலையில் இயங்கும்போது சுமார் 400கிமீ அதிகமான ரேஞ்ஜையும், வானில் பறக்கும்போது ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பறக்கும் வசதியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் உற்பத்தி பணிகள் மட்டுமில்லைங்க டெலிவரி பணிகளும் 2025 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட இருக்கின்றது. நிறுவனம் இதுகுறித்த வாக்குறுதியை வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீன நிறுவனத்தின் இந்த பறக்கும் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது சந்தேகமே. அதேநேரத்தில் இந்தியாவில் வெகு விரைவில் பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன என்பதை நாம் இங்கு கவனத்தில் கொண்டாக வேண்டும். முன்னணி நிறுவனங்கள் இதற்கான பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. எனவே ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவின் வானவெளியில் பறக்கும் மின்சார கார்களை காண முடியும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









