பணக்காரர்கள் மட்டும்தான் பிஎம்டபிள்யூ கார் வாங்கனும்னு சட்டம் இருக்கா என்ன...? டீசல் என்ஜின் உடன் விலை கம்மி!
பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் பல்வேறு விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் கூட, 3-சீரிஸ் (3-Series) என்கிற விலை குறைவான லக்சரி செடான் (Luxury Sedan) ரக காரை 2025ஆம் ஆண்டிற்காக மேம்படுத்தி இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்தது. நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான பிஎம்டபிள்யூ கார்களுள் 3-சீரிஸ் ஒன்றாகும். இந்த நிலையில், புதிய 2025 பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காரில் புதியதாக டீசல் என்ஜின் (Diesel Engine) ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்துக்கு அடுத்து, 2வது இடத்தில் தற்சமயம் பிஎம்டபிள்யூ நிறுவனம் உள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே அவ்வப்போது புது, புது கார்களை மறக்காமல் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துவிடுகிறது.

அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பிரபலமான 3-சீரிஸ் காரின் 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட் வெர்சனை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்தது. முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக இடைவெளியை கொண்ட லாங்-வீல்பேஸ் (Long Wheelbase) காராக புதிய 3-சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்பு விற்பனையில் இருந்த 3-சீரிஸ் காரை காட்டிலும் புதிய 3-சீரிஸில் தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் புது, புது அப்டேட்கள் கொண்டுவரப்பட்டன. அத்துடன், காரின் பெயரும் '3-சீரிஸ் கிரான் லிமௌசைன்' (Gran Limousine) என்பதில் இருந்து '3-சீரிஸ் லாங்-வீல்பேஸ்' என மாற்றப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது பெட்ரோல் என்ஜின் (Petrol Engine) உடன் மட்டுமே 2025 3-சீரிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இனி டீசல் என்ஜின் உடனும் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரை வாங்கலாம். டீசல் என்ஜின் உடன் இந்த லக்சரி செடான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.62 லட்சமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் நிர்ணயித்துள்ளது. டீசல் என்ஜின் உடன் 320எல்.டி எம் ஸ்போர்ட் (320Ld M Sport) மற்றும் 320எல்.டி எம் ஸ்போர்ட் புரோ (320Ld M Sport Pro) என 2 விதமான வேரியண்ட்களில் இந்த பிஎம்டபிள்யூ கார் கிடைக்கும்.
2025 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கிடைக்கும்.

டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரின் பெயர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டீசல் காரின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்படும். 2025ஆம் ஆண்டிற்கான புதிய 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரின் முன்பக்கத்தில் புதிய எல்இடி ஹெட்லைட்கள் உடன் டி.ஆர்.எல்-கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரம், புதிய 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காருக்கு உள்ளே டேஸ்போர்டில் 14.9 இன்ச்சில் டச் ஸ்க்ரீன், பவர்டு & வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், அடாஸ் (ADAS) வசதிகள், பனோராமிக் சன்ரூஃப், 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6 ஏர்பேக்குகள் மற்றும் மல்டி-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டீசல் கார்களின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், டீசல் கார்களை வாங்குவதற்கு என பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அத்தகையவர்களை புதிய பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் டீசல் கார் கவரும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், விலையுயர்ந்த கார்களை வாங்குவோர் இடையேதான் டீசல் கார்கள் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









