5 வருஷத்துக்கு பின் வருது - இந்த முறை ஆவது பந்தயம் அடிக்குமா? காரை பார்த்து எடை போடாதீங்க...
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), செக் குடியரசு நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, ஐரோப்பிய சந்தையில் பல தரமான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரபலமான கார் நிறுவனமாக ஸ்கோடா விளங்குகிறது. இந்திய சந்தையை பொறுத்தவரையில், ஸ்கோடாவின் திட்டங்கள் சற்று வித்தியாசமாக உள்ளன. கடந்த சில வருடங்களாக, குறைந்த விலையில் எஸ்யூவி (SUV) ரக கார்களை இந்தியாவில் ஸ்கோடா அறிமுகம் செய்து வருகிறது. குஷாக் (Kushaq), கைலாக் (Kylaq) உள்ளிட்டவை அந்த வரிசையில் வந்த ஸ்கோடா எஸ்யூவி கார்கள் ஆகும்.
அதேநேரம், அவ்வப்போது விலையுயர்ந்த கார்களையும் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்துவிடுகிறது. அந்த வகையில் அடுத்ததாக முற்றிலும் புதிய 2025 ஸ்கோடா சூப்பர்ப் (Superb) என்கிற விலைமிக்க கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தைக்கு ஸ்கோடா சூப்பர்ப் கார் ஒன்று புதியது கிடையாது.

2020ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்த சூப்பர்ப் காரின் விற்பனையை அந்த ஆண்டில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் நிறுத்தியது. அதிகப்படியான விலையினால் போதிய எண்ணிக்கையில் சூப்பர்ப் கார்கள் விற்பனை செய்யப்படாத காரணத்தினால், இந்த காரின் விற்பனையை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் நிறுத்தியது.
இந்த நிலையில், கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு சூப்பர்ப் கார் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த முறை, டீசல் என்ஜின் (Diesel Engine) மற்றும் 4x4 டிரைவ் சிஸ்டம் (Drive System) உடன் பவர்ஃபுல்லான காராக 2025 ஸ்கோடா சூப்பர்ப் கொண்டுவரப்படுகிறது. இதில், 4x4 டிரைவ் சிஸ்டம் ஆனது கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வாகனங்களில் வழங்கப்படுவது ஆகும்.

இதில் இருந்து, இந்த முறை சூப்பர்ப் காரை அட்வென்ச்சர் பயணங்களை விரும்புவோரையும் டார்க்கெட் செய்து ஸ்கோடா நிறுவனம் கொண்டுவருவதை அறிய முடிகிறது. இவ்வாறு 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் சூப்பர்ப் காரை மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளதை இதுவரையில் ஸ்கோடா நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்தியாவில் புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் ஒன்று அறிமுகத்திற்கு முன்னதாக பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த புதிய சூப்பர்ப் காரை காண முடிகிறது. பொதுவாக இவ்வாறு அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை செய்யப்படும் வாகனங்கள் முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த சோதனை ஓட்டத்தில் புதிய 2025 சூப்பர்ப் கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை.
காரின் பின்பக்கத்தில், '4x4' என குறிப்பிடப்பட்டு இருப்பதை வீடியோவில் நெருக்கமாக காட்டியுள்ளனர். இந்த வீடியோவின் மூலமாக, புதிய சூப்பர்ப் காரில் 4x4 டிரைவ் சிஸ்டம் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது நமக்கு தெரிய வருவது மட்டுமின்றி, 2025 ஸ்கோடா சூப்பர்ப் காரின் தோற்றத்தையும் நம்மால் காரின் அறிமுகத்திற்கு முன்பாக தெளிவாக காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சூப்பர்ப் காரை முன்பு பிரீமியம் தரத்திலான செடான் ரக காராக அறிமுகம் செய்த ஸ்கோடா நிறுவனம், தற்போது முற்றிலும் வேறு விதமாக 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட காராக களமிறக்குவது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதுவரையில் இந்தியாவில் ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு பெரியதாக மார்க்கெட் இருந்ததில்லை. இதற்கு பின்பாவது அந்த நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








