பிசியான சாலையில் யாருக்கும் தெரியாமல் போன 2026 டாடா கார்... முழுவதும் மறைச்சிக்கிட்டு போனா மட்டும் விட்ருவோமா!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளில் 2.5 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளதோடு, நெக்ஸான் இவி (Nexon EV) மட்டும் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை எட்டிய முதல் எலக்ட்ரிக் பயணிகள் காராக சாதனை புரிந்துள்ளது.
இந்த வெற்றியை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் மூன்று புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் வாகனங்களில் சியரா இவி (Sierra EV), புதிய பன்ச் இவி (Punch EV) மற்றும் EMA பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான அவின்யா (Avinya) கார்களின் முதல் மாடல் ஆகியவை அடங்கும்.

அவின்யா வரிசையில் இருந்து ஒரு ஸ்போர்ட்பேக் அல்லது SUV வகை கார் 2026ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் நிலையில், சியரா இவி மற்றும் மேம்படுத்தப்பட்ட பன்ச் இவி ஆகியவை அதற்கு முன்னதாகவே சந்தைக்கு வரும். எரிபொருள் என்ஜின் கொண்ட சியரா காருக்கு கிடைத்துவரும் நல்ல வரவேற்பைக் கருதி, அதன் எலெக்ட்ரிக் பதிப்பு அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம்.
புதிய பன்ச் மாடலும் சமீப மாதங்களில் பலமுறை சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் இந்தியாவில் பொது வெளியில், முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் அமன் கௌசிக் என்பவர் மூலம் இணையத்தில் நமக்கு கிடைக்க பெற்றுள்ளன.

இந்த சமீபத்திய ஸ்பைப் படங்களில் காணப்பட்ட மேம்படுத்தப்பட்ட பன்ச் கார் பெட்ரோல் என்ஜின் கொண்டதா அல்லது எலெக்ட்ரிக் மோட்டாரை கொண்ட சோதனை வாகனமா என்பதை உறுதியாக கூற முடியவில்லை. பெட்ரோல் என்ஜின் உடனான பன்ச் கார் 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் பிரிவில் நெக்ஸான் மாடலுக்கு இணையாக டாடா பிராண்டிற்கு ஒரு வலுவான இடத்தை உருவாக்க உதவியதுடன், எஸ்யூவி கார்கள் விற்பனை பட்டியலில் தொடர்ந்து முன்னணி இடங்களில் ஒன்றைப் பிடித்து வருகிறது.
எனினும், பன்ச் பெட்ரோல் காருக்கு இதுவரை குறிப்பிடத்தக்க புதுப்பித்தல் எதுவும் வரவில்லை. மறுபுறம், பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது. இதன் வரவிருக்கும் புதிய வடிவமும் 2026ஆம் ஆண்டிற்காக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பெட்ரோல் என்ஜின் மற்றும் இவி ஆகிய இரண்டு பதிப்புகளும் ஒரே நேரத்தில் புதுப்பித்தல்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது எலெக்ட்ரிக் காராக இருக்கலாம் என்பதை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் வகையில், தற்போது சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டுள்ள பன்ச் கார் மூடிய முன்பக்க கிரில் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப் ஹவுசிங்குகளைக் கொண்டுள்ளது. ஆனால், தற்போதைய பன்ச் எலெக்ட்ரிக் காரில் உள்ளதைப் போலவே, பொனெட்டிற்கு அடியில் பொருத்தப்பட்ட வளைந்த பகல்நேர ரன்னிங் விளக்குகள் அப்படியே உள்ளன.

அதேநேரம், காரின் முன்பகுதியில் சார்ஜிங் போர்ட் எதுவும் காணப்படாதது, இது பெட்ரோல் மாடலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இருப்பினும் அது உருமறைப்பின் கீழ் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. தூண்களும் மேற்கூரையும் கருப்பு நிறத்தில் இருப்பதுடன், டர்ன் இன்டிகேட்டர் ஒருங்கிணைந்த எலெக்ட்ரிக் மூலம் சரிசெய்யக்கூடிய ORVM-களும் காணப்படுகின்றன.
360-டிகிரி கேமரா மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏரோ-ஸ்டைல் சக்கரங்களும் இந்த சோதனை ஓட்ட பன்ச் காரில் காணப்படுகின்றன. பக்கவாட்டு தோற்றம் தற்போதைய மாடலைப் போலவே இருக்கும். அதேநேரத்தில் பின்புறத்தில் திருத்தப்பட்ட டெயில்லேம்ப்கள் மற்றும் பம்பர் போன்ற வெளிப்புற அழகு மேம்பாடுகள் புதியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பன்ச் பெட்ரோல் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போதுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் தொடரும். அதேநேரத்தில் பன்ச் இவி அதன் ரேஞ்ச்சில் மேம்படுத்தல்களைப் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதேபோல், புதிய மேம்படுத்தப்பட்ட பன்ச் காரினுள் புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களும் சேர்க்கப்படும். இருப்பினும், இந்த கார் பெட்ரோல் பன்ச் காரா அல்லது பன்ச் இவி எலெக்ட்ரிக் காரா என்பதை அடையாளம் காண முடியாதது, இந்த இரண்டு கார்களையும் 2026இல் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தக் கூடும் என்பதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









