கோவையில் கிராமமாக தேடி போய் திறந்து இருக்காங்க! இதுனால தான் மாருதி காராக பார்த்து எல்லாரும் வாங்குறாங்க!
மாருதி சுஸுகி இந்தியா (Maruti Suzuki India) நிறுவனம் கோவையில் தனது 5,000வது அரேனா (Arena) சேவை மையத்தைத் தொடங்கி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடிய, நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வாகன சேவையை வழங்குவதில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் மாருதி சுஸுகியின் இந்த நடவடிக்கை குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி சர்வீஸ் செண்டர்களின் எண்ணிக்கையில் 5 ஆயிரம் என்கிற பெரிய எண்ணிக்கையை கடந்திருப்பது, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் சீரான மற்றும் நம்பகமான உரிமையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான மாருதி சுஸுகியின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டுள்ள புதிய சர்வீஸ் மையத்தை மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேவைப் பிரிவு நிர்வாக அதிகாரி ராம் சுரேஷ் அகெல்லா மற்றும் சேவைப் பிரிவு செயல் துணைத் தலைவர் தகாஹிரோ ஷிராயிஷி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். மேலும் இந்த நிகழ்வில் மாருதி சுஸுகி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ஆன ஹிசாஷி தக்கேச்சி அவர்களும் கலந்துக் கொண்டார்.
அப்போது ஹிசாஷி தக்கேச்சி பேசுகையில், "மாருதி சுஸுகியில், நம்பகமான சேவையை எளிதில் அணுகுவது என்பது தொந்தரவில்லாத உரிமையாளர் அனுபவத்திற்கு அடிப்படை என்று நாங்கள் நம்புகிறோம். வாடிக்கையாளர்கள் அருகாமையில், மலிவு விலையில், அசல் உதிரிபாகங்களை பெற்று, காரின் பழுதுகளை விரைவாகத் தீர்ப்பதை விரும்புகிறார்கள். எங்களது பரந்த சர்வீஸ் நெட்வொர்க், வாடிக்கையாளர்கள் எங்கு இருந்தாலும் வேகமான மற்றும் நம்பகமான சேவையை உறுதி செய்கிறது.
எதிர்காலத்திலும் எங்கள் நெட்வொர்க்கைத் தொடர்ந்து விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார். கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான ஒரு வருட காலத்தில் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனம் தனது அரேனா மற்றும் நெக்ஸா (Nexa) கீழ் 460 சர்வீஸ் மையங்களை புதியதாக திறந்துள்ளது. நெக்ஸா என்பது விலைமிக்க கார்களை விற்பனை செய்ய மாருதி சுஸுகி பயன்படுத்தும் டீலர்ஷிப் ஷோரூம்களின் பெயர் ஆகும்.
மேற்கூறப்பட்ட 1 வருடத்தில் 460 சர்வீஸ் செண்டர்களை திறந்த மாருதி சுஸுகி நிறுவனம் 2025 ஏப்ரல்- 2026 மார்ச்சிற்குள் மேலும் 500 சர்வீஸ் செண்டர்களை திறக்கத் திட்டமிட்டுள்ளது. கோவையில் மலுமிச்சம்பட்டி கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய சர்வீஸ் செண்டர் உடன், மாருதி சுஸுகியின் நாடு தழுவிய சர்வீஸ் செண்டர் நெட்வொர்க் ஆனது 2,818 நகரங்களில் 5,640 சேவை மையங்களாக விரிவடைந்துள்ளது.

இந்த 5,640இல் அரேனாவுக்கு கீழ் செயல்படும் சர்வீஸ் செண்டர்களின் எண்ணிக்கை தான் அதிகம் ஆகும். தற்போது கோவையில் புதியதாக திறக்கப்பட்டு இருப்பது 5 ஆயிரமாவது அரேனா சர்வீஸ் செண்டர் ஆகும். மீதி 640 சர்வீஸ் செண்டர்கள் மட்டும் நெக்ஸாவின் கீழ் செயல்படுகின்றன.
இந்த 5,640 சர்வீஸ் செண்டர்களின் சில சர்வீஸ் செண்டர்கள் 'சர்வீஸ்-ஆன்-வீல்ஸ்' (Service-on-wheels) என்கிற பெயரில் நடமாடும் சர்வீஸ் செண்டர்களாகவும் விளங்குகின்றன. தமிழ்நாட்டில் மட்டும், மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது 400க்கும் மேற்பட்ட சர்வீஸ் செண்டர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 5,640 சர்வீஸ் செண்டர்கள் மூலம், 2024-25ஆம் நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் சுமார் 2.7 கோடிக்கும் அதிகமான வாகனங்களுக்குச் சேவை செய்தது.
இது, ஒரு நிதியாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். 2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் மாருதி சுஸுகி சர்வீஸ் செண்டர்கள் ஏற்கனவே 1.4 கோடிக்கும் அதிகமான வாகனங்களுக்குச் சேவை செய்துள்ளன. ஆனால் உண்மையில், மாருதி சுஸுகியின் தற்போதைய சர்வீஸ் செண்டர்கள் மட்டுமே ஆண்டுக்கு 3 கோடி வாகனங்களுக்குச் சேவை செய்யும் திறனைப் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சர்வீஸ் செண்டர் ஆனது 3,200 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 4 சேவைப் பிரிவுகள் மற்றும் 4 உடல் பழுதுபார்ப்புப் பிரிவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன், வாடிக்கையாளர்களுக்கு விரிவான மற்றும் திறமையான சேவைகளை வழங்கும் என கூறப்படும் புதிய கோவை அரேனா சர்வீஸ் செண்டர் மூலம் தொடர்ந்து சர்வீஸ் செண்டர்களின் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவது, விரைவாக சேவைகளை பெறுவதற்கான அணுகல்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு மாருதி சுஸுகி அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








