எல்லாரும் வாங்கும் சொகுசு கார் நிறுவனம்னு சொல்றாங்க! உள்ளுக்குள்ள என்னென்ன பிரச்சனைனு கொட்டி தீர்த்துடுச்சு!
ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி (Audi), 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 3,197 கார்களை விற்பனை செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. சப்ளை செயினில் ஏற்பட்ட இடையூறுகள் போன்ற புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் அந்நிய செலாவணி விகித மாற்றங்கள் காரணமாக சந்தையில் நிலவிய சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆயினும், பண்டிகைக் கால தேவை மற்றும் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) அறிமுகத்திற்குப் பிந்தைய அதிகரித்த வாடிக்கையாளர் ஆர்வம் ஆகியவை ஆண்டின் இறுதி காலாண்டில் ஆடி கார்கள் விற்பனை வேகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக தலைவர், திரு.பல்பிர் சிங் தில்லான் இதுகுறித்து பேசுகையில், "இந்த ஆண்டு சொகுசு கார் வணிகத்திற்கு சவாலான சந்தை சூழலை உருவாக்கியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். சிக்கலான சந்தை நிலைமைகள் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்வுகள் இருந்தபோதிலும், ஜிஎஸ்டி 2.0 மற்றும் வலுவான பண்டிகைக் கால தேவை ஆகியவை இந்த ஆண்டை வெற்றிகரமாக முடிப்போம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன" என்றார்.
மேலும், "தனித்துவமான சொகுசு கார் டிரைவிங் (Car Driving) அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பும், பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு கார்களும், இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடையே எங்கள் நிலையை வலுப்படுத்துகிறது" என்றும் திரு.தில்லான் குறிப்பிட்டார். 'ஆடி அப்ரூவ்ட்: பிளஸ்' என்ற ஆடியின் யூஸ்டு-கார் வணிகம், 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5% வளர்ச்சி கண்டுள்ளது.

சான்றளிக்கப்பட்ட சொகுசு யூஸ்டு கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. தற்போது நாடு முழுவதும் 26 ஆடி அப்ரூவ்ட்: பிளஸ் மையங்கள் செயல்படுகின்றன. மேலும், இந்த ஆண்டு மேலும் ஒரு மையம் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் நிலையான இயக்கம் குறித்த ஆடி இந்தியாவின் உறுதிப்பாடும் தொடர்கிறது.
'சார்ஜ் மை ஆடி' (Charge My Audi) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 6,500-க்கும் மேற்பட்ட ஆடி பொது சார்ஜிங் மையங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன. புதுமை, வசதி மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் அனுபவங்களை தொடர்ந்து மேம்படுத்துவதாக ஆடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அஜியோ லக்ஸ் (Ajio Luxe) உடனான ஆடி நிறுவனத்தின் கூட்டணி மற்றும் ஆடி டாஷ் கேம் (Audi Dash Cam) அறிமுகத்தில் இருந்து, நிச்சய பரிசு திட்டங்கள், 10-ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் 15 ஆண்டு சாலையோர உதவி போன்ற முயற்சிகள் வரையில் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை மையமாகக் கொண்டு வடிவமைத்து இருப்பதாக கூறும் ஆடி நிறுவனம், இது மன அமைதி, நம்பிக்கை மற்றும் பிரீமியம் வாகன அனுபவத்தை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி குழுமம், உயர்தர மற்றும் ஆடம்பர வாகன சந்தையில் உலக அளவில் கோலோச்சும் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். கார் மற்றும் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் இக்குழுமம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. ஆடி, பென்ட்லி (Bentley), லம்போர்கினி (Lamborghini) மற்றும் டுகாட்டி (Ducati) போன்ற புகழ்பெற்ற பிராண்டுகள் இக்குழுமத்தின் கீழ் இயங்குகின்றன.

2024 ஆம் ஆண்டில், ஆடி குழுமம் தனது வாடிக்கையாளர்களுக்கு கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்களை விநியோகித்துள்ளது. இதில் 17 லட்சம் ஆடி கார்கள் அடங்கும். இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனங்களுக்கு அடுத்து சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மூன்றாவது இடத்தில் ஆடி உள்ளது.
இருப்பினும், சர்வதேச அளவிலான சப்ளை செயினில் தங்களுக்கு இடையூறுகள் இருப்பதாகவும், அந்நிய செலவாணியில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் தங்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் ஆடி தெரிவித்துள்ளதால், இந்த நிறுவனத்தின் சொகுசு கார்கள் விற்பனை வரும் மாதங்களில் எந்த அளவிற்கு இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









