சீனா, ஜப்பான் எல்லாம் ஓரம் போ... இந்தியாவை புரட்டி போட போகும் எலக்ட்ரிக் கார் வந்தாச்சு!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வெளியீடு செய்துள்ளது. இ-விட்டாரா (e-Vitara) என்கிற பெயரில் வெளியீடு செய்யப்பட்டுள்ள மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் கார் இந்திய கார் மார்க்கெட்டில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இ-விட்டாரா காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் மாருதி சுஸுகி ஆகும். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்துவரும் மாருதி சுஸுகியில் இருந்து முதல் எலக்ட்ரிக் கார் ஒருவழியாக உலகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. மாருதி சுஸுகியின் குஜராத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள இ-விட்டாரா காரை மாருதியும், டொயோட்டாவும் இணைந்து உருவாக்க உள்ளது.

உலகளவில் டொயோட்டாவும், சுஸுகியும் கூட்டணியில் இருக்கின்றன. அதன் மூலமாகவே, இந்தியாவில் மாருதி சுஸுகியும், டொயோட்டாவும் இணைந்து தங்களது எலக்ட்ரிக் கார்களை உருவாக்க உள்ளன. அதில் முதலாவதாக வெளிவந்துள்ள இ-விட்டாரா ஆனது அடியில் பிளாஸ்டிக் பேனல்கள் உடன் பார்க்க முரட்டுத்தனமான தோற்றத்தில் உள்ளது. காரின் முன்பக்கம் ஆனது அதிகளவில் டி.ஆர்.எல்-கள் உடன் அதிகமாக ஜொலிக்கிறது.
காரின் முன்பகுதி மட்டுமின்றி, அலாய் சக்கரங்கள் மற்றும் ஜன்னல் க்ரோம் லைன்கள் என காரை சுற்றிலும் பளபளக்கின்றன. மாருதி சுஸுகி தனது முதல் எலக்ட்ரிக் காரான இ-விட்டாராவை 49kWh மற்றும் 61kWh என 2 விதமான லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்ய உள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து அதிகப்பட்சமாக 500 கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்கலாம் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இந்த காரினுள் செண்டர் கன்சோல் பகுதியை தேவைக்கேற்ப மடக்கிக் கொள்ளலாம். வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, 40:20:40 என்கிற விகிதத்தில் பிரிக்கும் வகையிலான சீட் செட்-அப், 18-இன்ச் ஏரோ டைனாமிக் அலாய் சக்கரங்கள், லெவல்-2 அடாஸ், 7 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் காரின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.
ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான டிரைவ் மோட்களை வழங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் காரை 10 விதமான கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம். இ-விட்டாராவை 60க்கும் மேற்பட்ட டெலிமேட்டிக்ஸ் டெக்னாலஜிகள் உடன் மாருதி சுஸுகி உருவாக்கி உள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் முன் & பின் சக்கரங்கள் 2700மிமீ இடைவெளியில் உள்ளன.

விற்பனையில் இந்த மாருதி சுஸுகி எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக எம்ஜி விண்ட்சர் இவி, எம்ஜி இசட்.எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்கள் உள்ளன. இ-விட்டாரா உள்பட மாருதி சுஸுகியின் எதிர்கால எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்காக 1,500க்கும் அதிகமான இவி சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
புதிய மாருதி சுஸுகி இ-விட்டாரா காரின் உற்பத்தி பணிகள் வருகிற மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் துவங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இ-விட்டாரா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள இ-விட்டாரா கார்களில் பாதி வெளிநாடுகளுக்கு தான் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதற்கு முன்னர் பல எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மாருதி சுஸுகியில் இருந்து முதல்முறையாக எலக்ட்ரிக் கார் ஒன்று வெளிவருவதினாலேயே இ-விட்டாரா மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ போன்று பெரிய மேடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், மாருதி சுஸுகி இ-விட்டாராவின் விற்பனை சிறப்பாக இருக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









