இது 3 சக்கர ஆட்டோனு நெனைச்சி எத்தனை பேர் ஏமாற போறாங்களோ... சீனாக்காரங்களுக்கு கூட இந்த ஐடியா வராது!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்களை விற்பனை செய்து பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்குகிறது. ஹீரோவில் இருந்து புதியதாக துவங்கப்பட்ட நிறைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், சர்ஜ் (Surge) ஆகும். இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்கை ஹீரோ மோட்டோகார்ப் கொண்டுள்ளது. இந்த நிலையில், சர்ஜ் நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் எதிர்பார்த்ததை போல் விசித்திரமான வாகனம் ஒன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சர்ஜ் நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே 'எஸ்32' (S32) என்கிற பெயரில் புதுமையான வாகனத்திற்கான கான்செப்ட்டை அறிமுகம் செய்தது. இந்த வாகனத்தில் அப்படி என்ன மாதிரியான புதுமை உள்ளது என்றால், சர்ஜ் எஸ்32 வாகனத்தை 3-சக்கர சரக்கு வாகனமாகவும் பயன்படுத்தலாம், அதேநேரம் ஸ்கூட்டராகவும் பயன்படுத்தலாம்.

அதாவது, 3-சக்கர வாகனத்தின் முன்பக்க உடலுக்குள் 2 சக்கரங்களை கொண்ட ஸ்கூட்டர் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் ஸ்டேரிங் சக்கரம் ஒன்றே ஆகும். இதனால், தேவை ஏற்படும்போது 3-சக்கர சரக்கு வாகனமாகவும், மற்ற பயணங்களுக்கு ஸ்கூட்டராகவும் இதனை பயன்படுத்தலாம். 3-சக்கர வாகனத்தின் டிரைவர் இருக்கையை மேலே தூக்கினால் ஸ்கூட்டரை தனியாக பிரித்து வெளியே எடுக்கலாம்.
இதற்காக அதிகமாக எஃபெக்ட் போட வேண்டி இருக்காது என கூறும் சர்ஜ் நிறுவனம், இவ்வாறான ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளதை கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டி இருந்தது. மேலும், இதற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைய இன்னும் 12 மாதங்கள் தேவைப்படும் என தெரிவித்திருந்த சர்ஜ் நிறுவனம், கூறியப்படி சரியாக 12 மாதங்கள் கழித்து டெல்லியில் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது எஸ்32 வாகனத்தை வெளியீடு செய்துள்ளது.

3-சக்கர வாகனமாக இதனை பயன்படுத்தும்போது ஸ்கூட்டரின் முன் சக்கரம் மட்டுமே பயன்படுகிறது; பின் சக்கரம் ஆனது 3-சக்கர வாகனத்தின் லோடு பகுதிக்குள் மறைந்துவிடுகிறது. இது பார்க்க வேண்டுமாயின் சுவாரஸ்யமானதாக இருக்கலாம். ஆனால், இவ்வாறான ஒரு வாகனத்தை வடிவமைக்க பல்வேறு கட்ட ஆலோசனைகளும், ஆய்வுகளும் நிச்சயமாக சர்ஜ் நிறுவனத்திற்குள் நடத்தப்பட்டிருக்கும்.
குறிப்பாக, 3-சக்கர வாகனமாக பயன்படுத்தும்போது, ஸ்கூட்டரின் முன் சக்கரம் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் வாகனத்தின் முன்பக்கத்தின் மொத்த எடையையும் அந்த ஒரு சக்கரம் சுமக்க வேண்டியதாக இருக்கும். அதுமட்டுமின்றி, அதிக சுமையை ஏற்றிச் செல்லும்போது பிரேக் கொடுத்தால், வாகனத்தின் மொத்த எடையும் முன் சக்கரத்தை நோக்கி வரும். இதனால், முன் சக்கரத்திற்கு நன்கு வலிமையான சஸ்பென்ஷனை செட்-அப்பை வழங்கியிருப்பர் என எதிர்பார்க்கிறோம்.

இரு வாகனங்களாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டாலும், முடிந்தவரையில் வாகனத்தின் உற்பத்தி செலவை குறைக்கவே சர்ஜ் நிறுவனம் நினைத்திருப்பது நிறைய இடங்களில் தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஸ்கூட்டரின் ஹெட்லைட் தான் 3-சக்கர வாகனத்திற்கான ஹெட்லைட் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனத்தில் உள்ள இரு வாகனங்களை தனித்தனியாக பிரிப்பதற்கு 3 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என சர்ஜ் நிறுவனம் தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சர்ஜ் நிறுவனம் தான் இந்த எஸ்32 என்கிற புதுமையான வாகனத்தை உருவாக்கி உள்ளது என்றாலும், ஹீரோ மோட்டோகார்பின் உதவி இல்லாமல் இருந்திருக்காது. ஏனெனில், இவ்வாறான ஒரு வாகனத்தை உருவாக்குவது உண்மையில் சவாலான விஷயம் ஆகும். இத்தகைய வாகனம் எந்த அளவிற்கு நடைமுறைக்கு சரிப்பட்டு வரும் என்பது வாகனம் அறிமுகம் செய்யப்பட்ட பின்புதான் தெரியவரும்.


Click it and Unblock the Notifications









