லாரியை தூங்கிட்டே போய் எங்கேயாவது விடுவது இனி நடக்காது... பெரிய பெரிய தலைங்க சேர்ந்து உருவாக்கிய டெக்னாலஜி!
உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் நமது இந்தியாவும் இருப்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயம். விபத்துகளை தவிர்க்க வேண்டுமெனில், வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது அவசியமாகும். ஏனெனில், பெரும்பாலான சாலை விபத்துகள் அஜாக்கிரதையாலும், மது போதையாலும் தான் நடைபெறுகின்றன. வாகன ஓட்டிகளை விழிப்புணர்வாக இருக்க வைப்பது மட்டுமின்றி, வாகனங்களையும் அதற்கேற்ப மாற்றுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் அல்லவா... இதற்கேற்ப ஆட்டோமொபைல் துறையிலும் தொழிற்நுட்ப வளர்ச்சி புதிய பரிணாமங்களை அடைந்து வருகிறது.
அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளில் மனிதரின் உதவியுன்றி முற்றிலுமாக தானாக இயங்கக்கூடிய வாகனங்கள் எல்லாம் வந்துவிட்டன. ஆனால், நம் இந்தியாவில் இப்போதுதான் சுருக்கமாக அடாஸ் என அழைக்கப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் உதவி அம்சங்கள் (Advanced Driver Assitance Systems - ADAS) பிரபலமாக ஆரம்பித்துள்ளன.

அடாஸின் மூலமாக வாகனம் பாதையில் இருந்து விலகாமல் இருப்பதற்கான உதவி, வாகனம் முன்பக்கமாக மோதலுக்கு உள்ளாக உள்ளதை எச்சரிக்கும் வசதி, வாகனத்திற்குள் இருந்து ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி என ஏகப்பட்ட அதிநவீன மாடர்ன் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் நாங்கள் கூறியிருப்பவை எல்லாம் கொஞ்சம்தான். அடாஸ் மூலமாக 20க்கும் மேற்பட்ட வசதிகள் கிடைக்கின்றன.
இவை டிரைவரை எச்சரிக்கையாக இருக்க வைப்பது மட்டுமின்றி, அவசர கால சூழலில் தானாக பொறுப்பேற்று முடிந்தவரையில் விபத்தை தவிர்க்க முயற்சிக்கிறது. ஆரம்பத்தில், கார்களில் வழங்கப்பட்டு வந்த அடாஸ் வசதிகளை சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-இல் நிறைய கமர்ஷியல் வாகனங்களிலும் பார்க்க முடிந்தது.
இவ்வாறான அடாஸ் தொழிற்நுட்ப வசதிகளை உருவாக்குவதில் உலகளவில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாக விளங்கும் நோவஸ் ஹை-டெக் (Novus Hi-Tech) நிறுவனத்துடன், கனவர லாரிகள் மற்றும் பேருந்துகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஐச்சர் (Eicher) கூட்டணி சேர்ந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து புதிய பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை ஐச்சர் லாரிகளில் அறிமுகம் செய்துள்ளன.
அடாஸ் வசதிகளை மட்டுமின்றி, ஓட்டுனரை கண்காணிக்கும் சிஸ்டங்கள் மற்றும் இன்-கேபின் சென்ஸிங் தொழிற்நுட்பங்களை உருவாக்குவதிலும் நோவஸ் ஹை-டெக் ஆனது நிபுணத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதாவது, நோவஸின் உதவியுடன் லாரியின் மொத்த கேபினையும் டிரைவர் முழுவதுமாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். குறிப்பாக, மிகவும் சவாலான வேலைகளை செய்வதற்கான லாரிகளுக்காக நோவஸ் ஹை-டெக் நிறுவனம் தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடித்துள்ளது.
இதன்படி, ஏஐ தரத்தில் பயணத்தின்போது டிரைவர் தொடர்ந்து ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்கப்படுவார். இதன் மூலமாக, டிரைவருக்கு தூக்கம் வருவது எச்சரிக்கப்படுவது மட்டுமில்லாமல், பயணத்தின்போது டிரைவருக்கு வேறு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுகின்றனவா என்பதும் கண்காணிக்கப்பட்டு அதுகுறித்த எச்சரிக்கை கொடுக்கப்படும்.
இந்த சிஸ்டத்துடன், ரேடார் தொழிற்நுட்பத்தில் செயல்படும் முன்னெச்சரிக்கை சிஸ்டம் (Proximity Waring System - PWS) மற்றும் ஆட்டோ டிப்பர் சிஸ்டம் (Auto Dipper System) உள்ளிட்டவையும் நோவஸ் ஹை-டெக் நிறுவனம் கண்டுப்பிடித்துள்ள தொழிற்நுட்பங்களில் அடங்குகின்றன. இதில், முன்னெச்சரிக்கை சிஸ்டம் ஆனது எதிரே வரும் மோதல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் மற்றும் ஆட்டோ டிப்பர் சிஸ்டம் ஆனது வாகனத்தின் ஹெட்லைட்களை கண்ட்ரோல் செய்து தேவைக்கேற்ப ஒளியை வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கனரக வாகனங்களில் இவ்வாறான தொழிற்நுட்பங்களை கொண்டுவருவது மிகவும் அவசியமாகும். ஏனெனில், சாலை விபத்துகளில் பெரும்பாலும் லாரிகள் தான் சிக்குகின்றன. நீண்ட தொலைவிற்கு ஓய்வு இல்லாமல் இயக்கப்படுவது அதற்கு காரணமாக இருக்கலாம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை மேற்கூறப்பட்ட தொழிற்நுட்பங்கள் மூலமாக தான் சரி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








