ஒரே நாள், ஒரே இடம், ஒரே கார் மாடலின் 52 யூனிட் டெலிவரி.. இப்படி மக்கள் வாங்கி குவிக்க இதுதான் காரணமா!!!
சீன நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியா ஒரு பக்கம் முட்டுக்கட்டைப் போடும் விதமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மறுபக்கம் இந்திய மக்களோ சீன நிறுவன தயாரிப்புகளுக்கு பேராதரவைத் தந்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. சீன நாட்டைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் பிஒய்டி (BYD)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் மின்சார பேருந்து உற்பத்தியாளராக நாட்டில் கால் தடம் பதித்து இப்போது எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது.
அந்தவகையில், இந்தியர்களுக்கு அர்பணிக்கும் விதமாக சமீபத்தில் அது தன்னுடைய உலக புகழ்பெற்ற சீ-லையன் 7 (Sealion 7) எனும் கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கே இந்தியர்கள் தங்களின் பேராதரவை வழங்கத் தொடங்கி இருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரே நாள், ஒரே இடம், ஒரே நேரத்தில் 52 பேருக்கு பிஒய்டி சீலையன் மின்சார கார் டெலிவரி செய்யும் நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.

கேரளா மாநிலம் கொச்சியிலேயே இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. திருவிழாவை மிஞ்சும் அளவிற்கு அந்த கார் டெலிவரி நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றிருக்கின்றது. செண்ட மேளம் இசை முழுங்க, பட்டாசு வெடித்து சிதற மற்றும் இசைக் கச்சேரியுடன் இந்த கார்கள் உரிமையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக, ஒரே நேரத்தில் இந்த காரை 52 பேருக்கு டெலிவரி கொடுத்திருப்பதனால் பலரின் கவனத்தை இந்த நிகழ்வு ஈர்த்து உள்ளது. அரசு சீன நிறுவன தயாரிப்புகளுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்த நிகழ்வு தவிடுபொடியாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அந்த அளவிற்கு மிகவும் மாஸான நிகழ்வு இந்த கார் டெலிவரி நிகழ்வு தற்போது அரங்கேறியிருக்கின்றது.

கொச்சினில் இயங்கி வரும் பிரபல பிஒய்டி கார் விற்பனையாளர் இவிஎம் பிஒய்டி-யே இந்த தரமான சம்பவத்தை நிகழ்த்தியவர் ஆவார். கடந்த 23 ஆம் தேதி அன்றே இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. மேலும், இந்த நிகழ்விற்காக மிகப் பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு வைத்தே கார் உரிமையாளர்களுக்கு அவரவர்களின் வாகனத்திற்கான சாவி கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
பிஒய்டி சீலையன் 7 காரில் அப்படி என்ன இருக்கின்றது இப்படி கேரள மக்கள் வாங்கி குவிக்க என நீங்கள் கேட்கலாம். கேரள மக்கள் மட்டுமல்ல மற்ற மாநிலத்தில் உள்ள வசதிப்படைத்த மக்களும் இந்த காரை விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால், பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பென்ஸ் நிறுவன கார்களை பயன்படுத்தி வரும் பலரும் பிஒய்டி நிறுவன கார்களை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் விளைவாகவே சமீபத்தில் இந்த கார் டெலிவரி குறித்த தகவலை பதிவிட்டிருந்த நாங்கள், தனி ஒரு பதிவாக இந்த காரின் பக்கம் இந்தியர்கள் குவிவதற்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரங்களை இங்கே தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
பிஒய்டி சீலையன் 7 ஓர் அதிக பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதுமட்டும் அல்ல தொழில்நுட்ப வசதிகளையும் மிக தாராளமாக இந்த காரில் பிஒய்டி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, பாதுகாப்பு தருவதில் மிக சிறப்பான காராக இது விளங்கும்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இந்தியாவிற்கான பாதுகாப்பு தரச் சான்று இது இல்லை என்றாலும், சர்வதேச அளவில் ஒரே தரத்தில் பிஒய்டி தன்னுடைய சீலையன் 7 காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதால், இந்தியாவிற்கான மாடலும் அதே பாதுகாப்பு தரத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 11 ஏர் பேக்குகளை பிஒய்டி நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமல்ல, முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (Advanced Driver Assistance Systems) உள்ளிட்டவற்றை வழங்கி இருக்கின்றனர்.
இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளை சீலையன் 7 கார் உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, அவசர காலத்தில் தானாகவே பிரேக் பிடிக்கும் வசதி, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட் போன்ற வசதிகளை இதன் வாயிலாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த அம்சங்களை மட்டுமல்ல 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிரைவருக்கான டிஜிட்டல் திரை, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் பேட், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பன்முக கன்ட்ரோல்களைத் தாங்கிய ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவற்றையும் சீலையன்7 தன்னுள் தாங்கி உள்ளது.
இதேபோல், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின் பக்கத்திற்கு என தனி ஏசி துவாரங்கள் மற்றும் பிரீமியம் லெதர் போர்த்தப்பட்ட மிருதுவான இருக்கைகள் உள்ளிட்டவற்றையும் இந்த கார் கொண்டிருக்கின்றது.
இதுபோன்ற லக்சூரி மற்றும் பிரீமியம் அம்சங்களை மிக தாராளமாகத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவின் சொகுசு கார் காதலர்களின் பேராதரவை சீலையன் 7 பெற்று வருகின்றது. இதேபோல், இந்த கார் ரேஞ்ச் தருவது மற்றும் ஆற்றலை உருவாக்கு ஆகியவற்றிலும் மிக சிறந்த வாகனமாக விளங்குகின்றது.
இரண்டு விதமான வேரியண்டுகளில் சீலையன் 7 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒன்று 308 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்ட ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷனிலும், மற்றொன்று 523 பிஎச்பி மற்றும் 690 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்ட இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷனுடனும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த இரண்டு ஆப்ஷனிலும் 82.56 kWh பேட்டரி பேக் ஆப்ஷனே வழங்கப்படுகின்றது. இது 542 கிமீ முதல் 567 கிமீ வரையில் ரேஞ்ச் தரும். இந்த கார் ரூ. 48.9 லட்சம் தொடங்கி ரூ. 54.9 லட்சம் வரையிலான விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக பிஒய்டி சீலையன் 7 மாறியிருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு மட்டுமல்ல நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளுக்கும் செல்வந்தர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக அட்டோ 3 எஸ்யூவி ரக மின்சார காரையும் பலர் விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








