ஆட்டோக்காரர்கள் தான் பெருசா பாதிப்படைய போறாங்க! மத்திய அரசு இப்படி செய்யும்னு எதிர்பார்க்கல!
ஃபேம்-II (FAME II) திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசாங்க மானியங்களை மத்திய அரசு நிறுத்தி கொள்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பிரதமர் இ-டிரைவ் (PM-E Drive) திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகன பயன்பாடு இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதே மத்திய அரசின் இந்த முடிவுக்குக் காரணம் என கருதப்படுகிறது.
இதன் விளைவாக, நாடு முழுவதும் பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்பட்டு வந்த கொள்முதல் சார்ந்த அரசாங்க சலுகைகள் முடிவுக்கு வந்துள்ளன. மத்திய அரசாங்க அதிகாரிகளின் விரிவான ஆய்வுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான பயன்பாடுகளில் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன என்றும், இதனால் அந்தத் துறைக்கான நேரடி நிதி ஆதரவை தொடர வேண்டிய அவசியம் குறைந்துவிட்டது என்றும் இந்த ஆய்வில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஃபேம் II-இன் கீழ், எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதில் உள்ள செலவுகளைக் குறைக்கும் வகையில், அவற்றின் பேட்டரி திறன் மற்றும் வாகனத்தின் வகையை பொறுத்து மத்திய அரசு சார்பில் மானியங்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த மானியங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் (Dealers) மூலம் வாகனத்தை வாங்கும்போதே வழங்கப்பட்டன. இதன்மூலம் நகர்ப்புற மற்றும் சிறு நகர்ப்புறச் சந்தைகளில் இயங்கும் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் (Auto Rickshaws), மூன்று சக்கர சரக்கு வாகனங்கள் மற்றும் லாஸ்ட்-மைல் டெலிவரி (Last-mile Delivery) வாகனங்களை வாங்குபவர்களுக்கு பயனுள்ள வகையில் விலை குறைக்கப்பட்டது.

இந்த மானியங்களின் நீக்கத்தால், விற்பனையில் உள்ள மற்றும் இனி புதியதாக அறிமுகமாகும் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியை இனி பெறாது என்பதால், அவற்றின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும். பயணிகளை ஏற்றிச் செல்லும் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என இரண்டு பிரிவுகளையும் இந்த முடிவு பாதிக்கும்.
மலிவு விலையிலான போக்குவரத்துக்கான தேவை அதிகமாக உள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில், எலெக்ட்ரிக் 3-வீலர்கள் லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. போதிய அளவிற்கு விரிவாக்கப்பட்ட சார்ஜிங் உள்கட்டமைப்புகள், எலெக்ட்ரிக் வாகன பாகங்களின் உள்நாட்டு உற்பத்தியில் கொண்டுவரப்பட்ட மேம்பாடுகள் மற்றும் பெருமளவிலான உற்பத்தி மூலம் அடையப்பட்ட செலவுக் குறைப்புகள் போன்ற காரணிகள், எலெக்ட்ரிக் 3-வீலர்களுக்கு மானிய ஆதரவு இனி அவசியமில்லை என்ற மதிப்பீட்டிற்கு காரணமாக அமைந்ததாக இந்த ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் சீரான வேகத்தில் அதிகரித்த பயன்பாட்டுகள், குறைந்த பேட்டரி தேவைகள் மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் காரணமாக விரைவாக மார்க்கெட்டை பெரிதுப்படுத்திக் கொண்ட முதல் பிரிவுகளில் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் பிரிவு ஒன்றாகும். எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலைகளையும், வணிக மாதிரிகளையும் மத்திய அரசாங்க மானியத்திற்கு ஏற்ப வடிவமைத்திருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபேம்-II மானியக் காலத்தில் எலெக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்தது. இருப்பினும், மத்திய அரசின் மானியம் நீக்கத்தால் தயாரிப்பு வாகனங்களுக்கான விலையை நிர்ணயிப்பதில் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றும் யுக்திகள் மற்றும் நிதி ஏற்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் ஆரம்பகால செலவு அடிப்படையில் பெட்ரோல்/டீசல் 3-சக்கர வாகனங்களை காட்டிலும் பலரது தேர்வுகளாக மாறிவரும் நிலையில், மானியம் நீக்கப்பட்டு இருப்பது அவற்றின் விற்பனையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசாங்கத்தின் ஃபேம்-II மானியம் நீக்கப்பட்டு இருந்தாலும், தனித்தனியாக நிர்வகிக்கப்படும் மாநில அளவிலான திட்டங்கள் உள்ள பகுதிகளில், மாநில அரசாங்கங்களின் சலுகைகள் மற்றும் பிராந்திய எலெக்ட்ரிக் வாகனக் கொள்கைகள் தொடர்ந்து எலெக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களுக்கு பொருந்தும்.
Source: Times Of India


Click it and Unblock the Notifications









