சீன காருக்கு இந்தியாவில் என்ன வேலை... ஏழு பேரை உள்ளே ஏத்துனாலும் இடம் மிச்சம் இருக்கும்!
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் இந்தியாவில் அதன் பிரீமியம் தரத்திலான சற்று விலைமிக்க கார்களையே அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே டிகுவான் ஆர் லைன் (Tiguan R Line) மற்றும் கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவற்றை தொடர்ந்து அடுத்ததாக 'டெய்ரான்' (Tayron) என்கிற காரை இந்தியாவில் புதியதாக அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் தயாராகி வருகிறது.
ஃபோக்ஸ்வேகனின் புதிய எஸ்யூவி (SUV) ரக காராக மூன்று வரிசைகளில் இருக்கைகளை கொண்டதாக டெய்ரான் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் (Spy Images) பவர்டிரிஃப்ட் (Powerdrift) என்கிற செய்தித்தளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

இந்தியாவில் டெய்ரான் காரின் இந்த சோதனை ஓட்டம் எங்கு நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை. ஒருவேளை, மும்பை அல்லது புனேவாக இருக்கலாம். இந்த சோதனை ஓட்டத்தின் ஹைலைட் என்னவென்றால், இந்த சோதனை ஓட்டத்தில் கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை. இதனால், புதிய டெய்ரான் எஸ்யூவி கார் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.
இருப்பினும், நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களில் காரின் பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. முன்பக்கத்தை காண முடியவில்லை. காரின் பின்பக்கத்தில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் லோகோவிற்கு கீழே 'டெய்ரான்' என ஆங்கிலத்தில் காரின் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்தியாவில் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் கார் 'டிகுவான் ஆல்ஸ்பேஸ்' (Tiguan Allspace) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டு வந்த டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரின் விற்பனையை 2021ஆம் ஆண்டின் இறுதியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நிறுத்தியது. அதன் விற்பனை நிறுத்தத்திற்கு பிறகு இந்தியாவில் 3-வரிசையில் இருக்கைகளை கொண்ட எந்தவொரு எஸ்யூவி காரையும் புதியதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிகுவான் ஆர் லைன் ஆனது 5 இருக்கைகளை மட்டுமே கொண்ட புதிய டிகுவான் கார் ஆகும். ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) காரை போன்று ரூ.40- 50 லட்சத்தில் 7-சீட்டர் எஸ்யூவி கார் ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக டெய்ரானை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் களமிறக்குகிறது. இந்த புதிய 7-சீட்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உட்படுத்துவது இது ஒன்றும் முதல்முறை அல்ல.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டங்களிலும் ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் கார்கள் எந்தவொரு மறைப்பும் இன்றியே காட்சியளித்து இருந்தன. அப்போது எல்லா சமயத்திலும் காருக்கு பின்னால் 'டெய்ரான்' என லோகோ பொறிக்கப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் உண்மையில், இந்த காரை டெய்ரான் என்கிற பெயரில் சீனாவில் மட்டுமே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனை செய்தது.
மற்ற நாடுகள் அனைத்திலும் 2ஆம் தலைமுறை டிகுவான் ஆல்ஸ்பேஸ் என்கிற பெயரில் ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்தது. இதனால், டெய்ரான் என்கிற லோகோ உடன் இந்த ஃபோக்ஸ்வேகன் கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டாலும், டிகுவான் ஆல்ஸ்பேஸ் என்கிற பெயரில்தான் அறிமுகம் செய்யப்படும். இது, வழக்கமான டிகுவான் காரை காட்டிலும் நீளமான உடலமைப்பை கொண்டதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெய்ரான் என்கிற பெயரில் அறிமுகம் செய்ய போவதில்லை என்பதினாலேயே தைரியமாக அதே பெயரில் காரை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தி வருகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக காரின் பெயர் கசிந்துவிட கூடாது என்றே எந்தவொரு கார் கம்பெனியும் விரும்பும். மேலும், சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்படும் டெய்ரான் காரில் இருந்து சற்று வித்தியாசமான தோற்றத்தில்தான் புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸ் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








