100 ஆண்டிற்கும் மேல் செயல்படும் கார் கம்பெனிக்கு இந்திய அரசால் ஏற்பட்ட நிலைமை! இதை எதிர்பார்த்து இருக்காது!
சிட்ரோயன் (Citroen), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். சில வருடங்களுக்கு முன்னர் தான் இந்திய சந்தையில் களம்புகுந்த சிட்ரோயன் நிறுவனம், இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை குறைக்க போவதாக, மற்ற கார் நிறுவனங்களை போன்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மத்திய அரசாங்கம் கார்கள் மற்றும் பைக்குகளுக்கான ஜி.எஸ்.டியை செப்.22 முதல் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், அதன்படி, கார் & பைக்குகளின் விலைகளை அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் குறைத்து ஒன்றன்பின் ஒன்றாக அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி சிட்ரோயன் நிறுவனமும் இந்தியாவில் விற்பனை செய்யும் அதன் கார்களின் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

சிட்ரோயன் இந்தியா நிறுவனம், சமீபத்திய ஜி.எஸ்.டி (GST) வரி குறைப்பின் முழுப் பலன்களையும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 22 முதல், திருத்தப்பட்ட வரி விகிதங்கள் அமலுக்கு வரும்போது, இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் இந்த வரிக்குறைப்பு பொருந்தும்.
பசால்ட் எக்ஸ் (Basalt X) மற்றும் சி3எக்ஸ் (C3X) வரிசை கார்கள் ஏற்கனவே போட்டி நிறைந்த விலைகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி கவுன்சில் (Council) பயணிகள் வாகனங்களுக்கான வரிகளை முறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அனைத்து சிட்ரோயன் கார் மாடல்களின் விலைகளும் கணிசமாகக் குறைய உள்ளன.

சி3 மற்றும் சி3எக்ஸ் கார்கள் ரூ.84,000 வரை விலை குறைந்து, ரூ.4.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகின்றன. ஏர்கிராஸ் (Aircross) எஸ்யூவியின் 5 மற்றும் 7 இருக்கை மாடல்களின் விலைகள் ரூ.50,000 வரை குறைக்கப்பட்டுள்ளன. பசால்ட் மற்றும் பசால்ட் எக்ஸ் கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்குப் பிறகு, இவற்றின் புதிய விலைகள் ரூ.7.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகின்றன.
புதுமையான கூபே-ஸ்டைல் எஸ்யூவி தோற்றம் கொண்ட இந்த சிட்ரோன் பசால்ட் கார்களில் காரா (CARA) என்கிற சிட்ரோயன் இன்-கார் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் ஷைன் வேரியண்ட்டின் விலையில் கிட்டத்தட்ட ரூ.2.7 லட்சம் குறைப்பு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன் புதிய விலை ரூ.37.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டெல்லன்டிஸ் இந்தியா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிராண்ட்களுக்கான இயக்குனர் குமார் பிரியேஷ் பேசுகையில், "பயணிகளின் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு ஒரு வரவேற்கத்தக்க சீர்திருத்தமாகும். இது பாதுகாப்பான, நவீன மற்றும் திறமையான போக்குவரத்து வசதியை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும்" என்றார்.
மேலும் அவர், "சிட்ரோயனில், இந்த குறைப்பின் முழுப் பலனையும் எங்கள் வாடிக்கையாளர்கள் பெறுவதை உறுதி செய்வதன் மூலம் இந்த முயற்சிக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். முழுமையாக விலை குறைப்பை வழங்குவதன் மூலம், அனைத்துப் பிரிவினரும் எங்கள் கார்களை எளிதில் வாங்கும்படி செய்வோம். இது புதியதாக வாங்குபவர்களை ஊக்குவித்து, பண்டிகைக் காலத்தில் விற்பனையை அதிகரிக்கும்" என்று கூறினார்.

ஓணம், ஆயுத பூஜை, நவராத்திரி, ஈகைத் திருநாள், தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலத்தோடு இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் இணைந்திருப்பதால், புதிய கார்களுக்கான தேவை அதிகரித்து, தொழில்துறை வளர்ச்சி முந்தைய கணிப்புகளை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்றான சிட்ரோயன், பல வெளிநாடுகளில் கார்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், நம் இந்தியாவில் சிட்ரோயன் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜிஎஸ்டி குறைப்புக்கு பின்பாவாவது இந்தியாவில் சிட்ரோயன் கார்களின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









