5738 எலெக்ட்ரிக் பஸ்களுக்கு வந்தது ஆர்டர்! எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பஸ்கள் வரப்போகுது?
பி.எம். இ-பஸ் சேவை மூலம் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்கும். 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 77 நகரங்களிலிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் 77 நகரங்களுக்கு மொத்தம் 5738 பஸ்கள் வழங்க பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவற்றிற்கு டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் டோகான் சாஹு, இந்த முயற்சி நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
இந்தத் திட்டம் வரும் 2037ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இயங்கும், இதில் 10,000 எலெக்ட்ரிக் பஸ்களை பயன்படுத்துவதற்காக ரூ. 20,000 கோடி மத்திய உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சீர்திருத்தங்களில் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை சாஹு வலியுறுத்தினார், ஏனெனில் இது தகுதியான நகரங்களில் பேருந்து டிப்போக்களில் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை அமைப்பதை நவீனப்படுத்துவதையும் சப்போர்ட் செய்கிறது.

மின்சார பேருந்துகளுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு
பி.எம். இ-பஸ்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 66 நகரங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் உள்கட்டமைப்பு மற்றும் சிவில் டிப்போ உள்கட்டமைப்புக்காக ரூ. 884 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 438 கோடி ஏற்கனவே பல்வேறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் பஸ்கள்அங்கீகாரம் பெற்ற மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப், ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மத்திய அரசு இந்த மாநிலங்களிலுள்ள பல நகரங்களில் பேருந்து டிப்போக்கள் மற்றும் சார்ஜிங் வசதிகளை நிர்மாணிக்க அனுமதி அளித்துள்ளது.

இரண்டாம் கட்டத்தில் மத்திய உதவி
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், பசுமை நகர்ப்புற இயக்கம் திட்டங்களுக்கு மத்தியஅரசு உதவி வழங்கப்படும் என்று சாஹு தெரிவித்துள்ளார். இந்த முயற்சி, ஏற்கனவே உள்ள பஸ் சேவைகளை மாற்றியமைக்கும். மேலும், பி.எம். இ-பஸ்களுக்கு மத்திய அரசு ஒரு டிக்கெட் கலெக்டிங் சிஸ்டத்தை உருவாக்குகிறது. இதனால் இதற்கு தனியாக கண்டெக்டர்கள் தேவையில்லை.
டெப்போ மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்புக்காக அங்கீகாரம் பெற்ற நகரங்களில் சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர், கோர்பா, ராய்ப்பூர்; பீகாரில் உள்ள கயா, புர்னியா, பகல்பூர், முசாபர்பூர், பாட்னா; ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர், பிலிவாரா, உதய்பூர்; மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர்; மகாராஷ்டிராவில் உள்ள உல்ஹாஸ்நகர், அகோலா மற்றும் கொல்கொத்தா; ஒடிசாவில் உள்ள ரூர்கேலா; குஜராத்தில் உள்ள பாவ்நகர், காந்திநகர், ஜாம்நகர், ராஜ்கோட் மற்றும் வதோதரா; மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால் மற்றும் உஜ்ஜைன் ஆகியநகரங்களில் இந்த பஸ்கள் இயங்கும்

இந்த முன்னோடியான திட்டம் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக ஸ்டெபிளிட்டியான நகர்ப்புற வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறது. 2037 வரை அடுத்த பத்தாண்டு காலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பில் பெரும் முதலீடு செய்வது, நகர்ப்புறப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்துவதோடு, சுத்தமான சூழலையும் உறுதிப்படுத்துகிறது.
இந்த செய்தியை இதுவரை படித்த போது இதில் எங்குமே தமிழகத்தின் பெயரை பார்த்திருக்க முடியாது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எலெக்ட்ரிக் பஸ்கள் ஒதுக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு மட்டுமே பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விரும்பி இந்த திட்டத்தில் இணைந்தால் மட்டுமே இதற்கான பலன்கள் எல்லாம் கிடைக்கும்.
தமிழகத்தில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு மிக குறைவாகவே உள்ளது. தமிழக அரசு எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிக்க சில திட்டங்களை வைத்திருக்கும் போதிலும் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. தமிழக போக்குவரத்து துறை தற்போது லாபத்தில் இயங்காமல் திண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மிக குறைவான அளவிலேயே பயன்பாட்டில் உள்ளது. இந்த பஸ்களின் விலை அதிகம் என்றாலும் இது வழங்கும் நன்மைகள் அதிகமாக உள்ளன. இதனால் மாநில அரசுகள் பஸ்களை எல்லாம் எலெக்ட்ரிக் பஸ்களாக மாற்ற உறுதுணையாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் பெரிய அளவில் மாற்றங்கள் வரும்


Click it and Unblock the Notifications









