அடி மாட்டு விலையில் கார்களை விற்றால்தான் வெற்றி பெற முடியும் போல! மாருதி பின்பற்றும் ஃபார்முலா
ஃபடா (FADA) என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பானது ஒவ்வொரு மாதமும், நாட்டில் ஆர்டிஓ (RTO)-களில் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கைகள் குறித்த விபரங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, நடந்து முடிந்த 2025 பிப்ரவரியில் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையை கார் கம்பெனிகள் வாரியாக ஃபடா வெளியிட்டுள்ளது. அவற்றுள், கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த டாப்-10 கார் நிறுவனங்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
வழக்கம்போல், கடந்த பிப்ரவரி மாதத்திலும் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 149 மாருதி சுஸுகி கார்கள் நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ-களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையில் மாருதி சுஸுகி கார்களின் பங்களிப்பு மட்டும் 38.94% ஆகும். அதாவது, இந்தியாவில் 3இல் ஒரு கார் நிச்சயமாக மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதனை காட்டிலும் சற்று அதிகமாக 1 லட்சத்து 33 ஆயிரத்து 135 மாருதி சுஸுகி கார்கள் ஆர்டிஓ-களில் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
அந்த மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனையில் மாருதி சுஸுகியின் பங்களிப்பு 39.34% ஆக இருந்தது. மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 39 ஆயிரத்து 889 கார்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகிக்கும், மஹிந்திராவுக்கும் எந்த அளவிற்கு பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை இங்கு காணலாம்.

கடந்த 2024 பிப்ரவரியிலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான கார்களையே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. பொதுவாக, இந்த 2வது இடத்தை ஹூண்டாய் அல்லது டாடா மோட்டார்ஸ் பிடிப்பதுதான் வழக்கம். மஹிந்திரா கார்களின் விற்பனை எப்போதும் போலதான் உள்ளது. மாறாக, ஹூண்டாய் & டாடா கார்களின் விற்பனை கடந்த பிப்ரவரியில் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த 2024 பிப்ரவரியில் 45 ஆயிரத்து 710 டாடா கார்கள் ஆர்டிஓ-களில் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 696 ஆக குறைந்துள்ளது. இந்த வரிசையில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஹூண்டாய் உடன் ஒப்பிட்டால், டாடா நிறுவனத்தின் விற்பனை ஓரளவிற்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், 2024 பிப்ரவரியில் 47 ஆயிரத்து 540 ஹூண்டாய் கார்கள் ஆர்டிஓ-களில் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் வெறும் 38 ஆயிரத்து 156 ஹூண்டாய் கார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 5வது இடத்தை டொயோட்டா சொந்தமாக்கி உள்ளது. மொத்தம் 21 ஆயிரத்து 561 டொயோட்டா கார்கள் கடந்த மாதத்தில் ஆர்டிஓ-களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2024 பிப்ரவரியில் 5வது இடத்தை பிடித்திருந்த கியா இந்த முறை 6வது இடத்திற்கு சரிந்துள்ளது. 2024 பிப்ரவரியில் கிட்டத்தட்ட 21 ஆயிரம் கியா கார்கள் இந்திய ஆர்டிஓ-களில் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 18 ஆயிரத்து 794 கியா கார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் இருந்து மொத்தம் 6,438 கார்கள் கடந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2024 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 5,900ஐ கூட தொடவில்லை. இந்த லிஸ்ட்டில் 7வது மற்றும் 8வது இடங்களில் ஹோண்டா கார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் இருந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் முறையே 5,166 மற்றும் 4,551 கார்கள் ஆர்டிஓ-களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 2 இடங்களில் முறையே ரெனால்ட் (2,523) மற்றும் நிஸான் மோட்டார் (1,706) நிறுவனங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விற்பனை எண்ணிக்கைகள் யாவும் ஆர்டிஓ-கள் மூலமாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பெற்ற விபரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளவை ஆகும். இதில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆர்டிஓ-களில் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும், இந்த விற்பனை எண்ணிக்கைகளில் வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கைகளும் சேர்க்கப்படவில்லை.
Source: FADA


Click it and Unblock the Notifications









